Sunday, January 9, 2022

பூலோக வைகுந்தம்

ஶ்ரீனிவாசன் கிருஷ்ணமூர்த்தி

பூலோக வைகுந்தம்

 “ரிடயர் ஆன பிறகு எங்கே வாழ்க்கையை ஓட்டப் போறே?” நண்பன் என்னிடம் கேட்டான்.

“வேறே எங்கே, ஸ்ரீரங்கத்தில் தான்!” இது நான். அப்போது நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தது மும்பை மாநகரத்தில்.

“ஸ்ரீரங்க ரொம்ப செலவு பிடிக்குமேய்யா?”

“இருந்துட்டு போகட்டுமே, யாருக்குச் சொத்து சேர்க்கப் போறோம்?”

“அது சரி,உனக்கு பிடுங்கல்னு யாரும் இல்லை"

“அதனாலே இல்லையா, கடைசி காலத்துலேயாவது அந்த ரங்கன் கால்லே விழுவோமே.

“ எங்கும்  சுத்தி ரங்கனச் சேர்” அப்பிடின்னு சொல்வாங்களே , அதனால ஸ்ரீரங்கத்திலே போய் செட்டில் ஆகலாம்னு இருக்கேன்"

மற்றொரு வீட்டில்,

“எங்க இப்பிடி பிடிவாதம் பிடிக்கிறீங்க? நமக்குத் தான் மேலூர் ரோட்லே வீடு இருக்கிறபோது அத வித்துட்டு சித்திரை வீதிலே போய் வீடு வாங்கனுன்னு சொல்றிங்க”

“உனக்கு என்ன தெரியும், பெருமாள் எப்பப் பார்த்தாலும் மேலூர்  ரோடுக்கு வருவாரா? சித்திரை வீதின்னா வாசல்லேயே பெருமாள்  புறப்பாடு பாக்கலாமில்லியா?”

இன்றொரு வீட்டில், “நல்ல வேலை கோவிலுக்குள்ளேயே வீடு கட்ட இன்னும் அனுமதி தரல்ல,  இல்லைன்னா அங்கதான் வீடு வாங்கன்னு சொல்லி என்னை ஹிம்சை பண்ணி இருப்பே,  நல்ல பொண்ணு நீ"  மனைவியைக் கடிந்து கொள்கிறான் கணவன்.

“அப்பா. உனக்கும் அம்மாவுக்கும் ஸ்ரீரங்கத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீடு பதிவு செய்துள்ளேன், சரிதானே", மகன் அமெரிக்காவில் இருந்து அப்பா, அம்மாவை கடைசி காலத்துக்கு மகிழ்ச்சியுடன் இருக்க, skypeஇல் கூறுகிறான். அவன் கவலை, “எங்கேயாவது அப்பா தன்னை அமெரிக்காவை விட்டு உடன் புறப்பட்டு வந்து விடு என்று சொல்லிவிடுவாரோ? “

என்ன இதெல்லாம்?  இதெல்லாம் தினந்தோறும் பல இடங்களில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி நடக்கும் உரையாடல்கள் தான்.

எல்லோருக்கும் ஆசை, தன்னுடைய வாழ்நாளில் கொஞ்ச நாட்களாவது ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கனாதனைத் தரிசிக்க வேண்டும் என்பது. ஸ்ரீரங்கத்து வீதிகளில், அது சித்திரை வீதியாகட்டும் அல்லது உத்தர வீதியாகட்டும் பல நாட்கள் பிரதக்ஷணம் வர வேண்டும் என்பது எத்தனை பேருக்கு ஆசை. இங்கு ஆசார்யர்கள் செய்யும் உபன்யாசங்களில்  கலந்து கொள்ளவேண்டும் என்பது எத்தனை பேருக்கு ஆசை!

நமக்கு மட்டுமா அந்த ஆசை? எத்தனை ஆழ்வார்களை ஈர்த்துள்ளது? எத்தனை ஆசார்யர்க்ளை ஈர்த்துள்ளது?

அப்படி என்னையா ஸ்ரீரங்கத்தில் இருக்கு? ன்னு நீங்க கேட்கிறது எனக்குத் தெரியுது.

என்ன இல்லை ஸ்ரீரங்கத்தில்

ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல்.அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இறுதி கொண்டு அனுபவிப்போம்.

“வைகுந்தம் அடைவது மன்னவர் விதி'

என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும். வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நமக்கே தெரியும்),ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம்.  வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது என்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது?

ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில்

"”இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
     புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி!
பாணெள ரதாங்கம் சரணேsம்பு காங்கம்
  யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!!”

என்று ஸ்ரீரங்கத்தில் வாழ ஆசைபடுகிறார் என்றால் பாருங்கள்.ஆசைப்பட்டது எல்லாத்தையும் கொடுக்கும் இடம் ஸ்ரீரங்கம்.இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை என்கிறார் ஆதிசங்கரர்..

அப்படி என்னையா ஸ்ரீரங்கத்தில் இருக்கு? ன்னு நீங்க கேட்கிறது எனக்குத் தெரியுது.

என்ன இல்லை ஸ்ரீரங்கத்தில்!

ஸ்ரீரங்கம் 108 திவ்விய ஸ்தலங்களில் முதலாவது ஆகும்.  ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த வைஷ்ணவ ஆலயங்களை திவ்விய ஸ்தலங்கள் என்பர். பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன்.

ஆராதஅருளமுதம் பொதிந்த கோயில்

   அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்தகோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங்கோயில் 
      சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் திர்க்கும்கோயில்
திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!

என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஸ்வாமி தேசிகன் குறிப்பிடுகிறார்.

.ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம் மொத்தம் எட்டு.,அதாவது தானாகவே உண்டான ஷேத்ரங்கள் இவை.

தெற்கே வானமாமலை, தொண்டை நாட்டிலே ஸ்ரீமுஷ்ணம், தமிழ் நாட்டின் எல்லையில் திருவேங்கடம், ஸ்ரீரங்கம், வடநாட்டில் பதரிகாசரமம், சாலக்ராமம்,  ராஜஸ்தானில் புஷ்கரம், நைமிசராண்யம், என்பவை தான் அவை.  வானமாமலையில் எண்ணெய் விசேஷம். அங்கு திருமடப்பள்ளியில் வரமிளகாய் பயன்படுத்துவதில்லையாம்.

பகவான் காடு ரூபமாக உள்ளார் நைமிசாரண்யத்தில். தண்ணிர் ரூபத்தில் உள்ளார் புஷ்கரத்தில். ஸ்ரீமுஷ்ணத்தில் மூலஸ்தானத்தில் வராஹமுர்த்தி தனியே கோயில் கொண்டுள்ளார்.

இந்த ஸ்வயம்வ்யக்த ஷேத்ரங்களில்,  ஸ்ரீரங்கம் ஒன்றில் தான் பெருமாள் சயனக் கோலத்தில் உள்ளார். மற்ற இடங்களில் நின்று கொண்டோ அல்லது அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். ஆக ஸ்ரீரங்கத்திற்கு விசேஷம் சயனக்  கோலம்,

.ஆழ்வார்கள் பனிரெண்டு பேரும் எங்கே பிறந்தார்கள் பாருங்கள்.பொய்கை ஆழ்வார் காஞ்சியிலும், ,பூதத்தாழ்வார் மயிலாபூரிலும் பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லை  என்று ஆழ்வார்கள் எல்லோரும் வெவ்வேறு இடத்தில் பிறந்து இருந்தாலும்  சேர்ந்த இடம் ஸ்ரீரங்கம்.

எப்படிங்கிரிங்களா?

கணிதத்தில் சைபர் தெரியமா? அதுக்குத் தனியாளா என்ன மதிப்பு? ஒன்னும் கிடையாது.அதை எதாவது எண்ணுக்கு பின்னாலே போடுங்க, என்ன ஆறது பாருங்க,  மதிப்பு கூடுதில்ல.

அந்தக் காலத்திலே கோள்களைப் பத்தி,

பாரதத்திலே எவ்வளவு ஆராய்ச்சி செய்து இருக்காங்க,  ஆனா ஏதோ தாங்கத்தான் கண்டுபிடிச்சது போல சொல்லிக்கொண்டு இருக்காங்களே,

“பழி ஓரிடம், பாபம் ஓரிடம்" பழமொழி போல  ஆழ்வார்கள் வெவ்வேறு இடத்திலே பிறந்தாலும்

“அடியவர்கள் வாழ, அரங்கநகர் வாழ" என்று அரங்கனைத்தான் வாழ்த்தினார்கள்.

அப்படிப் பெருமை பெற்றது ஸ்ரீரங்கம்.

இது மட்டுமா?

“இவ்வளவு நேரம் ஆயிடுச்சு, சயனம் கொள்ளுகிற  நேரத்திலே எங்க கிளம்பிட்டிங்க” என்று அடியவர் திருமாலிருஜ் சோலை பெருமாளைப் பார்த்துக் கேட்கிறார்.

“இரும் அடியவரே, நாளைக் காலை தரிசனம் கொடுப்போம், பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்கிறோம்" ,என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அழகார்  மலை அழகன்.

அவர் மட்டுமா, திருவேங்கடத்தான்,

“எப்போது பொது சேவை முடியும்'

என்று அர்ச்சகரைப் பார்த்துக் கேட்கிறார்.

“ஏன் ஸ்வாமி" இது அர்ச்சகர்.

“பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும்” என்கிறார், பெருமாள்.

விக்கித்து நிக்கிறார் அர்ச்சகர். இப்படி  எல்லா திவ்விய தேசத்து பெருமாளும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்களாம். நான் சொல்லவில்லை ஐயா, நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில்,

  “தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
            வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளுமிடத்தடி கொட்டிட
                   கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே”

என்று எல்லா  திவ்விய தேசத்து

எம்பெருமான்களும் பள்ளி  கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்கள் என்று  பாசுரத்தில் கூறுகிறார்

எத்தனை மகிமை ரங்கநாதனுக்கு!!

அப்படிப்பட்ட ஸ்ரீரஙக்த்தை கோல மாவில் வடித்து இருக்கிறார் எனது மனைவி

அந்தப் படம் இதோ!!!!! 



No comments:

Post a Comment