சங்கராம்ருதம் - 20
தெய்வீக தேனம்பாக்கம் - பகுதி 11
பெரியவா சரணம்
(ரா. வேங்கட சாமி அவர்களின் "காஞ்சி மகானின் கருணையுள்ளம்" என்ற புத்தகத்திலிருந்து...)
ஒரு மகோன்னத சம்பவத்தைப் பற்றி சித்த வைத்தியரான கண்ணப்பர் என்னும் பக்தர் விவரிக்கிறார்..
ஒரு முறை இவர் காஞ்சியில் உள்ள பச்சையப்பன் கல்லூரிக்குத் தேர்வு எழுதச் சென்றார்..
அப்போது தேனம்பாக்கம் வழியாகப் போகும் போது, வரிசை வரிசையாக பக்தர் கூட்டம் அலை மோதியது..
எதற்காக இவ்வளவு கூட்டம் என்று கண்ணப்பர் விசாரித்து இருக்கிறார்..
"ஸ்ரீ மஹா பெரியவா இங்கே முகாமிட்டு இருக்கிறார்.. தரிசனத்திற்காக மக்கள் வருகிறார்கள்... திவ்யமான தரிசனம்" என்றார் ஒருவர்.. "இங்கே மஹா பெரியவா வந்திருக்கா. போய் தரிசனம் பண்ணுங்கோ" என்றார் இவரிடம்.
அது வரை கண்ணப்பருக்கு மஹா பெரியவாளைப் பற்றி ஏதும் தெரியாது.. சரி போய்த் தான் தரிசனம் செய்யலாமே என்று அவர் மனதில் உந்துதல் ஏற்பட்டது.. அப்படியே சென்றார்..
அங்கே அடர்த்தியான மக்கள் கூட்டம்... தெய்வமாகவே காட்சி தரும் மகானைப் பரவசத்தோடு தரிசித்துக் கொண்டு இருந்தது..
கிணற்றுக்கு அந்தப் பக்கம் குங்கும நிறமுடைய உடை தரித்த காமாக்ஷியாய், காட்சியருளும் ஸ்ரீ மஹா பெரியவாளை, அருகே சென்று தரிசிக்க முடியாமல் கண்ணப்பர் மரத்தடியில் கை கட்டிக் கொண்டு கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்...
திடீரென பெரியவா தனது திருக் கரத்தை உயர்த்தி இவர் இருந்த பக்கம் சுட்டிக் காட்டினார்..
"என்னையா அழைக்கிறார்?" என்று இவர் மனதுள் நினைக்க, மகான் அதை அறிந்தவர் போல "ஆமாம்" என்பது போல சமிக்ஞை செய்து தலையை அசைத்தார்..
பிறகு பக்தர்கள் தானாக விலகி இவருக்கு வழி விட, இவர் முன்னே சென்றார்..
இவரை நோக்கி புன்னகை நிறைந்த முகத்தோடு... "நீங்கள் சித்த வைத்தியர் தானே.. இப்போது வைத்தியம் செய்வதை நிறுத்தி விட்டீர்கள்.. தொடர்ந்து செய்யுங்கள்" என்று கூறியதும் கண்ணப்பர் மலைத்துப் போய் விட்டார்...
இப்போது தானே நாம் மகானைப் பார்க்கிறோம்.. இவரால் தன்னைப் பற்றி எப்படி கூற முடிந்தது என்கிற வியப்போடு மகானை வணங்கி நின்றார்...
திரு முருகனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் அறியாத கண்ணப்பர், அந்தத் திருமுருகனே சுவாமிநாதனாக பெரியவா அருளுவதை உணர்ந்து ஆனந்தித்தார்...
இந்தப் பெருங் கருணையினால் வைத்தியம் செய்வதைத் தொடரும் பாக்கியம் பெற்றார், கண்ணப்பர் அவர்கள்...
No comments:
Post a Comment