Sunday, January 9, 2022

முப்பட்டை நகரம்

 சுஜாதாவின்  " கணையாழி . கடைசிப் பக்கங்கள் . " ( 1965.....1998 )

******"*"******

சுஜாதா கணையாழியில்  30 ஆண்டுகளுக்கும்  மேலாக எழுதிய  பத்திகளின் பெருந்தொகுதி இது . கலை ,

இலக்கியம் , சினிமா , நாடகம் , சமூகம் ,அறிவியல் , வேடிக்கைகள் என விரிகிறது . இவை வெளி வந்த காலத்தில்  பரவலாகப் படிக்கப் பட்டவை .

விவாதிக்கப் பட்டவை . அதில் ஒன்றுதான்  நான் இப்பொழுது பதியும் இப் பதிவு .

முப்பட்டை நகரம் .

*******

ஐந்து வருஷத்துக்கு ஒரு முறைதான் இந்த மாதிரிக் கவிதைத் தொகுப்புக்கள் வருகின்றன . கடைசியாக 'சனங்களின் கதை ' .இப்போது  இந்திரனின் முப்பட்டை நகரம் . முழுக்க நகரத்தைச் சுற்றி இயங்கும் வாழ்க்கையைக் கவனித்து  எழுதப் பட்ட  உண்மைக் கவிதைகளில் பல  அற்புதமானவை .  'அடுக்கு மாடிகளில்  வாழ்பவர்கள்  சூரியனைக் கான்க்ரீட்டில் புதைப்பதையும் .....'  சோடியம் விளக்குகளின்  மஞ்சள் நனைந்த மனிதர்கள்  தொலைக் காட்சிப்.பெட்டியின்  முன்னால் மரத்துப் போவதையும்  கவனிக்கும் இவர் கவிதைகள்  தமிழுக்கு  ஒரு பரிமாண விஸ்தரிப்பு  என்று கூடச்  சொல்வேன் .

புராதனமானது  பசியைக் காட்டிலும்  வேறென்ன என்றும்  குளிர்ந்த காற்று உறங்குவதற்கா  விழிப்பதற்கா  என்றும் கேட்கும் இவர் கேள்விகளே  வினோதமானவை . சில சமயம் ஹைக்கூவின் சிக்கனம் வருகிறது .

" தண்டவாளத்துக் கிடையில் 
புல்லின்  நுனியில்  கடுகாய்ப்  பூத்த
மஞ்சள்  பூவிலும்
வண்ணத்துப்   பூச்சி "

இதில் கடுகையும்  பூவின் ' உம் ' விகுதியையும் நீக்கி  விட்டால்  அசல் ஹைக்கூ .

" நடைபாதை  பழம்  விற்கும்  கிழவியிடம் 
குறுந்தடியின்  வலிமை  காட்டி
பழம்  பறிக்கும்  போலீஸ்காரனைத்
தட்டிக் கேட்க  முடியாத 
கையாலாகாத்தனம் 
கவிதை  எழுதினால்  அதிகமாகுமென்று
புரிஞ்சு போச்சோ  மனசுக்கு "

என்று  தான் கவிதை  எழுதாமல் இருப்பதைப் பற்றியே  கவிதை  எழுதியுள்ள  இந்திரன் கவனத்துக்கு உரியவர் .

ஒரு வெள்ளைக்காரனும்  சைனாக்காரனும்  தத்தம்  இறந்துபோன  நண்பர்களின் சமாதிக்கு அஞ்சலி  செலுத்தப் போனார்களாம் .

வெள்ளைக்காரன்  மலர்க் கொத்து  கொண்டு வந்திருக்க  ,  சைனாக்காரன்  நிறையப் பழங்களும் தின்பண்டங்களும் கொண்டு வந்து சமாதி மேல் வைத்தான் .

வெள்ளைக்காரன் அதைப் பார்த்து வியந்து  " உன் இறந்த நண்பன் எப்போது இதையெல்லாம் சாப்பிடப் போகிறான்  ? "

என்று கேட்க  சைனாக்காரன்  பதட்டமில்லாமல்  " உன் இறந்த நண்பன் மலர்களை  வாசம் பார்க்க  வரும்போது "என்றானாம் 

கி.மு.2500 சுமேரியன் நாகரிகத்திலிருந்து  , இறந்தவர்கள் இறந்த பின்னும் 

ஏதோ ஒன்று  உயிரோ ஆத்மாவோ , 'கா ' என்கிற  எகிப்திய  'மறு உடலோ 'நீடித்திருப்பதை  மனித சமுதாயம் அனைத்துமே நம்பி வந்திருக்கிறது .ஆழ்வார் கூறும் 'உடல் மிசை உயிர் எனக் கரந்திருக்கும் அந்தராத்மா' வில் நம்பிக்கை இருந்திருக்கிறது . ரொம்பக் கஷ்டப்பட்டு பெற்ற உணவை எல்லாம் இறந்தவர்களுக்கு அளிக்கும்  பழக்கம்  மனித குலத்தின்  மிக மிகப் புராதன வழக்கம் .

எல்லாமே  மூடத்தனம்  என்று சயின்ஸ் சொல்கிறது . ஆனால் இத்தனை  ஆயிரம் வருஷங்கள்  ஒரு  மூடத்தனம் நிலைத்து நிற்குமா  என்று இப்போது யோசிக்கிறார்கள் ராஜீவின் ஆத்மா  எங்காவது மிதந்து கொண்டிருக்கிறது என்று  யாராவது  சொன்னால் சிரிக்கத் தோன்றவில்லை . ' முல்லை நாறும் கூந்தல்  கமழ்  கொள நல்ல  காண்குவம் மா அயோயே ' என்று ஐங்குறுநூறு சொல்வதும்  ஒரு வாசமுள்ள உயிரின் உருவத்தைத் தானோ ? என்று தமிழ்ப் பண்டிதர்கள் யாராவது  கணையாழிக்குக்  கடிதத்தில் விளக்கினால்  உபகாரம் .

****************

இந்தத் தொகுப்பினை நமக்கு அளித்த தேசிகன் அவர்கள் கூறுவது போல் 

சுஜாவின் எழுத்துக்களின் எல்லை எது என்று காண்பது அரிது . ஹெவியான பல விஷயங்களை லைட்டாகச் சொல்லி விடுகிறார் . எந்த எழுத்தாளரிடமும் இல்லாத ஒரு Broad Spectrum  இவரிடம் காணப்படுகிறது . இது  இறைவனின் வரம்  இவருக்கு .

No comments:

Post a Comment