Sunday, December 19, 2021

சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் புதுவண்டிப் பாளையம்

 அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுவண்டிப் பாளையம், கடலூர், தமிழ்நாடு

திருவிழா      பங்குனி உத்திர திருவிழா இங்கு 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

அந்த நாட்களில் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுடன் இங்கு எழுந்தருளி இத்தலத்தில் முருகனின் திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுடன் நகர் வலம் வருவர். ஐப்பசியில் ஆறுநாள் சூரசம்ஹார விழா நடத்தப்படுகிறது.  

பொது தகவல்

இத்திருக்கோயிலில் விநாயகர், இடும்பன், பழனி ஆண்டவர், ஆறுமுகசாமி, விநாயக முருகன், கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, சிவன், பார்வதி, நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், பைரவர், வீரபாகு ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

பிரார்த்தனை   திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். 

நேர்த்திக்கடன்   சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.  

தலபெருமை

இத்தலம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம். இங்கு "வேல் கோட்டம்' தனியே அமைந்துள்ளது. இதற்கு ஞாயிறு, கிருத்திகை, பூச நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த வேலை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு எல்லாவித பலன்களும், தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. மூலவர் சிவசுப்பிரமணிய பெருமான், வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். 

இவர் சிவனிடம் "செண்டு' என்ற ஆயுதம் பெற்று மேருமலையின் ஆணவத்தை அடக்கிய விழாவும், ஆனி மாதத்தில் நடராஜருடன் மாணிக்கவாசகர் இரண்டற கலந்த விழாவும் கொண்டாடப்படுகிது.

தல வரலாறு

சமயக்குரவர் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் சமணர்களின் கொடுமைக்கு ஆளானார். சமணர்களின் தலைவனும், அரசனுமான மகேந்திரவர்மன் அவரை கல்லோடு சேர்த்துக் கட்டி வங்கக் கடலில் வீசி எறிந்தான். 

இருந்தும் அந்த கல்லையே தெப்பமாக்கி "நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து திருப்பாதிரிப்புலியூருக்கு தென் திசை நோக்கி மிதந்து வந்து கெடில நதி வாயிலாக கரையேறினார் நாவுக்கரசர்.இவருக்கு சிவன் பார்வதியுடன் ரிஷப வாகனத்திலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் காட்சி கொடுத்தனர். 

இதன் அடிப்படையில் இத்தலத்தில் முருகனுக்கு தனி கோயில் அமைக்கப்பட்டது. அப்பர் பெருமான் கரையேறிய அருங்காட்சியினை ஆண்டு தோறும் சித்திரை அனுஷத்தில் கொண்டாடுவார்கள். அப்படி கொண்டாடும் போது திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனாய பாடலீஸ்வரரும், புதுவண்டிப்பாளையம் முருகப்பெருமானும் அந்த தலத்துக்கு எழுந்தருளி அப்பருக்கும், பக்தர்களுக்கும் காட்சி கொடுக்கின்றனர்.



No comments:

Post a Comment