Tuesday, November 9, 2021

பெருமாளின் சயன நிலைகளும் திருக்கோயில்களும்

 பெருமாளின் சயன நிலைகளும் திருக்கோயில்களும்!

ஜல சயனப்பெருமாள் கோவில்!

மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத   ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது.

ஸ்தல சயனப்பெருமாள் கோவில்!

மாமல்லபுரம் என்னும் கடல் மல்லையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

புஜங்க சயனப்பெருமாள் கோவில்!

ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

உத்தியோக சயனப்பெருமாள் கோவில்!

திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

வீர சயனப்பெருமாள் கோவில்!

திருவள்ளூரில் அமைந்துள்ளது. திருமால், நான் எங்கு உறங்குவது? என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம்,  இங்கு திருமால்  வீர சயனத்தில் ஸ்ரீ வீரராகவப் பெருமாளாக காட்சி தருகிறார்.

போக சயனப்பெருமாள் கோவில்!

திருசித்திரகூடம் என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் சமேதராய் ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளாக போக சயனத்தில் காட்சி தருகிறார்.

தர்ப்ப சயனப்பெருமாள் கோவில்!

திருப்புல்லாணியில்  அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார். தர்ப்ப சயனம் பாம்பனை அல்ல. இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

பத்ர சயனப்பெருமாள் கோவில்!

ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது. இங்கு திருமால் ஸ்ரீ ரங்கமன்னார் பெருமாளாக வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர எனில் ஆலமரத்து இலை என்று பொருள்.

மாணிக்க சயனப்பெருமாள் கோவில்!

திருநீர்மலையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் ஸ்ரீ அரங்க நாயகி சமேத ஸ்ரீ அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.

பாம்பணை சயனப்பெருமாள் கோவில்!

திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாளின் பங்கையக் கண்கள் அரைக்கண்ணாக மூடியிருக்க, இதழ்களில் மென்நகையுடன் பாம்பணை மேல் பள்ளி கொண்ட நிலையில் வலக்கரம் ஆதிசேசனை அணைத்துக் கொண்டு காட்சி தருகிறார்.



No comments:

Post a Comment