RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
1986ல் ஆங்கரையிலிருந்து சில பக்தர்கள் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்கள். பல விஷயங்களை அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த பெரியவா, “ஆமா…ஒங்கூர்ல காவேரிக் கரைல சந்த்யாவந்தனப் படித்தொறை இருக்குமே?..” என்று ஆரம்பித்து அந்தப் படித்துறையைப் பற்றித் தூண்டித் துருவி விஜாரித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆங்கரை ஸ்ரீகண்டன் என்ற பாரிஷதரைக் கைகாட்டி, “இவன்ட்ட நான் ஆங்கரையைப் பத்தி எப்போ, எதைக் கேட்டாலும் எனக்கு ஒண்ணும் தெரியாதுங்கறான்…” என்றார்.
பெரியவாளுக்கு பிக்ஷா கைங்கர்யம் செய்யும் பாக்யம் பெற்றவர் ஸ்ரீகண்டன். அவரும் உடனே “நான் ஆங்கரையை விட்டுட்டு வந்து நாப்பது வருஷம் ஆச்சு பெரியவா…அதான் எனக்கு ஒன்னும் தெரியாதுன்னேன்” என்றார்.
தர்சனத்துக்கு வந்தவர்கள், “சந்த்யாவந்தனப் படித்தொறைல சில பேர் குடிசை போட்டுண்டு இருக்கா….மீதி கொஞ்சந்தான் எடம் இருக்கு…” என்றனர்.
“அவாள்ளாம் ஏழைகள்…அவாளை வெரட்ட வேணாம். மீதி இருக்கற எடத்ல ஒரு காம்பவுண்ட் சொவத்தை [சுவரை] கட்டி, ரெண்டு வில்வ மரத்தையும், துளசியையும் நட்டு, நன்னா பராமரியுங்கோ!…” என்று உத்தரவிட்டதும், அவர்களும் பெரியவா சொன்னபடியே செய்தனர்.
ஸ்ரீகண்டனும் கடைசியில் ஸன்யாஸம் வாங்கிக்கொண்டு 2003ம் வருஷம் திருவானைக்கா சென்றபோது, அங்கேயே ஸித்தி அடைந்தார்.
அவருடைய தேஹத்தை ஸ்ரீமடத்து தோட்டத்திலேயே அடக்கம் செய்யலாம் என்று எண்ணியபோது, ஸ்ரீமடம் பஞ்ச ப்ராஹாரத்துள் அடங்கிய இடமாக இருப்பதால், மடத்துக்குள் புதைக்கக் கூடாது என்று ஆக்ஷேபணை எழுந்தது. என்ன செய்வது? என்று ஒருவருக்கும் புரியாத போது, அங்கிருந்தவர்களில் ஒருவர் முன்பு பெரியவாளை ஆங்கரையிலிருந்து வந்து தர்சனம் பண்ணின கும்பலில் இருந்தவர்.
ஏன்? பேசாம ஆங்கரையில காவரிக் கரை சந்த்யாவந்தனப் படித்தொறைல இடம் இருக்கே, அங்கேயே அடக்கம் செய்யலாமே!..” என்று யோஜனை கூறியதும், சன்யாசம் வாங்கிக்கொண்ட ஆங்கரை ஸ்ரீகண்டனின் சரீரம் ஆங்கரையில் புதைக்கப்பட்டது.
2003 வது வருஷம் ஸித்தியாகப் போகும் தன் சன்யாசியான சிஷ்யனுக்காக, 1986லேயே சரியான இடத்தை தயார் செய்தது……பெரியவாளுடைய பக்த வாத்ஸல்யம், அளப்பெருங்கருணை என்று இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
No comments:
Post a Comment