Friday, November 5, 2021

கனியுமோகாதல்_3

 #கனியுமோகாதல்

கனியுமோகாதல்_3

தொடர்கதை: கனியுமோ காதல்

அத்யாயம்: 3

'ட்ரெமன்டஸ் ஸ்ரீ'

ஒத்திகை முடிந்து மைதிலி பாராட்டினாள்.

'NCR சார் ஜூனியர் யார் வரா நாளைக்கு?'

'அநேகமா ரெங்கராஜன் தான் வருவான்.  இப்ப அவன்தான் எல்லாமே NCR சாருக்கு.  டூ மச் ஆஃப் ஃபெயித் அவன் மேல அவருக்கு.  அவனும் லேஸு பட்டவன் இல்ல.  கொஞ்சம் அசந்தா பே பேன்னு முழிக்க வெச்சுடுவான்.'

'எனக்கு தெரிஞ்சு உன் கிட்ட உள்ள பெரிய குறையே அப்பைக்கப்ப ஸெல்ஃப் கான்ஃபிடன்ஸ லூஸ் பண்றதுதான்.  இதே மாதிரி ஒரு ஸிமிலர் கேஸ் பால்கிவாலா ஹாண்டில் பண்ணியிருக்கார், இஃப் ஐ ரிமெம்பர் ரைட்.  ஆத்துல புஸ்தகம் இருக்கு.  முடிஞ்சா நான் இம்பார்டெண்ட் பேஜஸை மார்க் பண்ணி எடுத்துண்டு வரேன் நாளைக்கு கோர்ட்டுக்கு.'

'ப்ளீஸ் மை.  எனக்கு இது நல்ல ச்சான்ஸ் குரு கிட்ட நல்ல பேர் எடுக்க.  அப்புறம் இன்னொண்ணு.  அப்பாவ நாளைக்கு கார்த்தால டாக்டர் கிட்ட அழச்சிண்டு போகணும்.  கால் எரிச்சலா இருக்குன்னு சொல்லிண்டிருக்கார்.  நீ ஒண்ணு எனக்காக செய்யறியா?  நாளைக்கு கேஸ் ஐட்டம் இருபத்தெட்டோ இருபத்தஞ்சோ

ஆறாவது கோர்ட்டுல வருது.   நீ கொஞ்சம் முன்னாடி போய் பாஸ் ஓவர் வாங்கிடு.  பன்னெண்டுக்குள்ள வந்து நான் பார்த்துக்கறேன்.'

'அதுக்கென்ன ஸ்ரீ.  நீ கவலப் படாத.  நான் பார்த்துக்கறேன்.  நீ அப்பாவ பாரு முன்னாடி.'

'என்னவோ மை.  திரும்ப திரும்ப சொல்றேனேன்னு நெனைக்காத.  உன்னோட கொஞ்ச நாழி பேசினாலே எனக்கு முழு தெம்பு வந்துடறது.'

'வெள்ளிக் கிழமை காளிகாம்பாள் கோவில் போயிட்டு வந்தேன் ஜெயஸ்ரீயோட.  இந்தா அம்பாள் குங்குமம்.  இட்டுக்கலைனாலும் பரவாயில்ல.  கையோட வெச்சிக்கோ.  கொஞ்சம் தெம்பா இருக்கும்.'

'இது வேறையா?  கட்ட சுமக்கறது பத்தாதுன்னு.'

பொட்டலத்தை பேண்ட் பின் பாக்கெட்டில் வைத்தான்.

'லூஸு.  பின்னாடி வைக்கறையேடா பிரசாதத்த.  முன்னாடி ஷர்ட் பாக்கெட்டுல வை ஸ்ரீ.'

'இன்னொரு ஸென்டிமெண்ட்?'

'உன்னல்லாம் திருத்தவே முடியாது ஸ்ரீ.'

'எப்படி போகப் போற மை?'

'ஒரே பஸ்ஸுல ஏறுவோம்.  நீ கண்ணகி ஸ்டாச்சு.  நான் லைட் ஹவுஸ்.  அவ்வளவுதானே.'

'வெளிய ஒரு தள்ளு வண்டியில நன்னாரி சர்பத் நன்னா இருக்கும்.  சாப்டுட்டு பஸ்ஸ புடிக்கலாமா?'

'நீ கார்த்தாலேந்து ஒண்ணுமே சாப்டலையேடா ஸ்ரீ.  உடம்ப கவனிச்சிக்கவே மாட்டேங்கற.  உன்ன திட்டறதுக்கு கூட உங்காத்துல யாரும் இல்ல.'

'மை.  ஏதாவது சாப்டுட்டு தான் ஆத்துக்கு போவேன்.  கவலப் படாம நீ போ.'

மறுநாள் திங்கள் கிழமை.  எட்டரை மணிக்கு தேசிகாச்சாரி ரோட்டில் உள்ள அட்வகேட் பிக்‌ஷேஸ்வரனின் ஆஃபீஸ் கம் ரெஸிடென்ஸில் மைதிலி நுழைகிறாள்.  வாசலில் உள்ள கார்டன் பகுதியில் எரிந்து கொண்டிருக்கும் ஃபில்டர் வில்ஸ் சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டு தீவிர சிந்தனையில் பிக்‌ஷேஸ்வரன்.

'மைதிலி, வா.  எங்க அந்த தடியன் ஸ்ரீதர்?'

இவர் தடியன்னு சொல்கிற மாதிரி ஸ்ரீதர் தடிமன் இல்லை.  இருந்தாலும் தடியன்னு கூப்பிட தடிமனாத்தான் இருக்கணுமா என்ன?

'சார், அவனோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம்.  என்ன பாஸ் ஓவர் வாங்கி வைக்க சொல்லியிருக்கான்.'

'மனசுல என்ன நெனச்சிண்டிருக்கேள் ரெண்டு பேரும்?  அவன் சொன்னானாம், நீ சரின்னியாம்.  அப்ப இங்க நான் எதுக்கு இருக்கேன்?  அவா அவா இஷ்டத்துக்கு முடிவெடுக்கணும்னா தனியா கொட்டகை போட்டு ப்ராக்டீஸ் பண்ணுங்கோ.  வேணும்னா இன்னிக்கே ஆளுக்கு முப்பது கட்டா பிரிச்சு கொடுத்துடறேன்.'

'சாரி சார்.  இனிமே....'

'இத மாத்திரம் மறக்காம சொல்லிடு.  இன்னிக்கு முக்கியமான கேஸ்.  அந்த ராகவாச்சேரி வேற வரான் கச்சேரிக்கு.  என் கிட்ட வந்து ஹிண்ட்ஸ் வாங்கிக்க வேண்டாம்?  கேஸுல அவ்வளவு அலட்சியம்?  ஏதாவது ஒண்ணோடக்கொண்ணு ஆகட்டும் அப்ப இருக்கு அந்த மடையனுக்கு.'

அவருக்கு கோபம் வரும்போது ஒன்றும் பேசாமல் இருக்கணும்.  அந்த வித்தை எல்லா ஜூனியர்ஸ்களுக்கும் தெரியும்.  அவள் நேராக தன் டேபிளுக்கு சென்று அதற்கு பக்கத்திலிருந்த ஃப்ரிட்ஜைத் திறந்து ஒரு கூல் வாட்டர் பாட்டிலை எடுத்தாள்.

பாட்டிலும் அவள் உதடுகள் பக்கம் போகப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் கூலானது.

'உன்ன அந்த ப்ளெயிண்ட்ட ரெடி பண்ண சொன்னேனே.  முடிச்சுட்டியா?'

'சனிக்கிழமையே டைப் பண்ணி உங்க டேபிள்ல வெச்சுட்டேனே சார்.  பார்க்கலையா?'

'ஒன்ன கேட்டா, கேட்டதுக்கு மாத்திரம் பதில் சொல்லு.  அது என்ன பார்க்கலையான்னு எனக்கு ஒரு கேள்வி?  இதுக்கும் ரெடியா வெச்சிருப்பியே ஒரு சாரி.  எடுத்து உடு.  பத்தோட பதிணொண்ணா கணக்குல சேரட்டும்.  இனிமேலைக்கு ஒவ்வொரு சாரிக்கும் ஒவ்வொரு ரூபா ஃபைன்.  உண்டியல வைக்க சொல்றேன்.  உங்களுக்கெல்லாம் தண்டமா கொடுக்கற டீ காப்பி செலவுக்காவது போகட்டும்.'

'இன்னிக்கு உன்ன விட்டு அந்த கேஸை ஃபைல் பண்ணலாம்னு நெனச்சேன்.  நீ என்னடான்னா ஸ்ரீதருக்கு உபகாரம் பண்ண ஒத்துண்டிருக்க.  உனக்கு நான் ஸீனியரா அவன் ஸீனியரான்னு எனக்கு புரியல.  அவா அவா இஷ்டம் போல ஆஃபீஸ் நடக்கறது.'

'சார், நான் கிளம்பட்டா கோர்ட்டுக்கு.  ஏதாவது எடுத்துண்டு போகணுமா?'

'இந்தா இந்த ஏழு கேசுக்கு டேட்ட வாங்கிக்கோ.  அது போதும் இன்னிக்கு.  கோர்ட் டைரில எந்த கோர்டுல எந்த கேஸ் வரதுன்னு குறிச்சிண்டு போ.  திருபுருன்னு கோர்ட் கோர்ட்டா முழிச்சிண்டு நிக்காதே.'

அவர் எப்போதும் அப்படித்தான்.  சட்ட சிற்பியாயிற்றே.  உளிக்கு பயந்து அழுதா எங்கே சிலையாகறது?

தொடரும்....

No comments:

Post a Comment