Friday, November 5, 2021

தீபாவளி டிப்ஸ்

தீபாவளி வருகிறது அருமையான டிப்ஸ்...டிப்ஸ்.... 

 பட்சணங்கள் மாவில் வெந்நீர் ஊற்றி பிசைந்தால் எத்தனை நாட்களானாலும் நமர்த்துப் போகாது.

 பட்சணம் செய்யும்போது எண்ணெய் பொங்கி வரும்போது ஒரு சொட்டு வினிகர் விட்டால் எண்ணெய் பொங்காது.

 பீட்ரூட் அல்வா, பீட்ரூட் திரட்டுப்பால் செய்யும்போது பீட்ரூட்டின் சிவப்பு நிறம் மாறாமலிருக்க, அதை வினிகரில் முக்கி எடுத்து அந்த  நீரை வடிகட்டிய பின்பு நறுக்க வேண்டும்.

 செவன் கப் கேக் செய்யும்போது முந்திரி, பாதாம் பருப்பை பாலில் ஊற வைத்து அரைத்து சேர்த்துக் கொண்டால் கேக் சூப்பராக இருக்கும். 

 முறுக்கு, ரிப்பன் பக்கோடா, சீடை மொறு மொறுவென்று இருக்க சிறிது கார்ன்ஃப்ளார் மாவு சேர்த்து  பிசைந்தால் போதும்.

 கற்கண்டு வடை செய்ய மாவை அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து செய்தால் எண்ணெய் குடிக்காது. தண்ணீர் அதிகம் ஆகி எண்ணெயைக்  குடித்தால் சிறிது பச்சரிசி மாவு சேர்த்து பிசைந்து தட்டவும்.

 மைசூர்பாகு செய்யும்போது சிறிது பாதாம்பருப்பை ஊற வைத்து கடலை மாவுடன் கிளறினால் கடை மைசூர்பாகு போல் நைசாக வரும்.

 உளுந்து வடைக்கு ஊற வைக்கும் போது ஒரு ஆழாக்கு உளுந்துக்கு ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து அரைத்து தட்டினால் வடை  மொறு மொறுப்பாக இருக்கும்.

 மைசூர்பாகு செய்யப் போகிறீர்களா? கடலை மாவை நெய் விட்டு லேசாக வறுத்துப் பிறகு மைசூர்பாகு செய்தால் மணம் தூக்கலாக  இருக்கும். மைசூர்பாகினை இறக்கும்போது ஒரு சிட்டிகை சமையல் சோடா தூவி கிளறிக் கொட்டினால் மைசூர்பாகு  பொறு பொறுவென்று இருக்கும்.

 தேங்காய் பர்ஃபி செய்யப் போகிறீர்களா? முக்கால் பதம் வந்தவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் அரை கப் விட்டுக் கிளறினால்  மிருதுவாகவும் மைசூர்பாகு போன்ற அபார ருசியுடனும் இருக்கும்.

 ரவா லட்டு செய்யும்போது அதனுடன் அவலையும் மிக்சியில் ரவை போலப் பொடித்து நெய்யில் வறுத்துச் சேர்த்து 3 டேபிள்ஸ்பூன் பால் பவுடரையும் கலந்தால் டேஸ்ட்டியான ரவா லட்டு பிடிக்கலாம்.

 நாடா பக்கோடா செய்யும்போது அரிசி மாவு, கடலை மாவுடன் 2 டீஸ்பூன் உளுந்து மாவையும் சேர்த்து செய்தால் எண்ணெய் அதிகம்  குடிக்காது. கூடுதல் கரகரப்பாகவும் இருக்கும்.

 லட்டு பிடிக்கும் போது ஏதாவது பழ எசென்ஸை விட்டுக் கலந்து பிடித்தால் லட்டின் சுவையும், மணமும் கூடுதலாக இருக்கும்.

 தேங்காய் பர்ஃபி தயாரிக்கும் போது சில சமயங்களில் பதம் தவறி முறுகி விடலாம். அச்சமயம் அதைப் பாலில் ஊற வைத்து மீண்டும்  கிளறி இறக்கும் சமயம் நெய்யில் வறுத்த கடலை மாவைச் சிறிது தூவி இறக்கினால் தேங்காய் பர்ஃபி கெட்டியாகவும், சரியான பதத்திற்கும் வந்து  விடும்.

 பாதுஷா செய்யும்போது சர்க்கரையை இரட்டைக் கம்பிப் பாகு வரும்வரை காய்ச்சியதும் அரை மூடி எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்து  விடுங்கள். இதனால் பாகு திரவ நிலையிலேயே இருக்கும். பொரித்த எல்லாப் பாதுஷாக்களையும் சுலபமாகப் பாகில் ஊற வைக்கலாம்.

 சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய்ப்பால் விட்டுச் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். முறுக்கு மாவு  பிசையும்போது அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி மாவை நன்கு பிசைந்து முறுக்கு செய்தால் நெய் மணத்துடன் இருக்கும்.

 இரண்டு பங்கு பாசிப்பருப்பு, ஒரு பங்கு கடலைப்பருப்பு என்ற விகிதத்தில் அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் மைசூர்பாகு  மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

 சிப்ஸ், காராபூந்தி ஆகியவற்றை தயார் செய்யும்போது காரத்திற்கு மிளகாய்த்தூள் போடுவதற்குப் பதிலாக மிளகுத்தூள் போடலாம். காரமும்  குறைவாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

 ரவா கேசரி, சேமியா கேசரி, அவல் கேசரி செய்யும்பொழுது வெள்ளரி விதை சேர்த்தால் வித்தியாசமான சுவையோடு இருக்கும்.

 ஜாங்கிரி செய்த பிறகு அதன் மீது வண்ண தேங்காய்ப்பூ துருவலை தூவி பிறகு கொடுத்தால் வித்தியாசமான சுவையோடு பார்க்க அழகாக இருக்கும்.

 குலோப்ஜாமூன் மிக்ஸுடன் சர்க்கரை பொடி கலந்து பிசைந்து சற்று தடிமனான சப்பாத்திகளாக திரட்டி சிறிய டைமண்டு வடிவில் வெட்டி நெய் அல்லது டால்டாவில் பொரித்து எடுத்தால் சூப்பர் ருசியாக இருக்கும்.👍

✶✶⊶⊷⊷❍ 𝑴K ❍⊶⊶⊷✶✶





No comments:

Post a Comment