l: இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம்மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்
தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு என்றும் ஸ்வாமி துணை நிற்பார் 🙏
131. திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை)🙏*
சிவஸ்தலம் பெயர்
திருக்கலயநல்லூர் (தற்போது சாக்கோட்டை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
எப்படிப் போவது
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் சாக்கோட்டை என்ற இடத்தில் இத்தலம் இருக்கிறது. சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. ஊர் மக்கள் இத்தலத்தை கோட்டை சிவன் கோவில் என்று அழைக்கிறார்கள்.
ஆலய முகவரி
இவ்வாலயம் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும்.
தல வரலாறு
மக்கள் வழக்கில் சாக்கோட்டை என்ற பெயரில் வழங்குகிறது.
ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் பெற்றதாக தலவரலாறு சொல்லப்படுகிறது.
ஞானசம்பந்தர் தம் பதிகத்தில் இப்பகுதியில் சாக்கியர் (பௌத்தர்) வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளதால் 'சாக்கியர் கோட்டை' என்று பெயர் வழங்கி அதுவே பின்பு சாக்கோட்டையாக மாறி வழங்கிற்று என்பர்.
இத்தலம் இருந்த பகுதியில் சாக்கியர்கள், (பெளத்தர்கள்) அதிகமாக வாழ்ந்து வந்ததால் இவ்விடம் சாக்கியர் கோட்டை என்று அழைக்கப்பட்டு பின் மருவி சாக்கோட்டை என்று பெயர் பெற்றது. தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் கோவிலைச் சுற்றி அகழியும், கோட்டையும் இருந்ததாக சொல்லப்படுகிறது. கோட்டை சிவன் கோவில் என்று கேட்டால் ஊர் மக்கள் உடனே வழி சொல்வார்கள்.
சாக்கியநாயனார்: காஞ்சிபுரம் அருகே மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கியநாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப்பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார். எப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்ற போது வழியில் ஒரு சிவலிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். லிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்ட அவருக்கு அந்த இடத்தில் பூஜைக்குரிய பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது. சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து "நமசிவாய" மந்திரத்தை உச்சரித்து லிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், அவர் விசியெறிந்த கல்லை மலராக ஏற்றுக்கொண்டார். இதே போல் தினமும் லிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என்று நினைத்தார்கள். ஆனால் இறைவன் ஒருவருக்குத் தான் இவர் உணமையான பக்தியால் இவ்வாறு செய்கிறார் என்பது புரியும். இந்நிலையில் ஒருநாள் சாக்கிய நாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று கல் எறிந்து சிவபூஜை செய்தார். சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது.
ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக தலவரலாறு கூறுகிறது. கும்பகோணம் தலபுராணத்துடன் தொடர்புடைய இத்தலம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை, பிரமதேவர் வழிபட்டுப் பேறு பெற்றார் என்பதை சுந்தரரின் பதிகம் 10-வது பாடல் மூலம் அறியலாம்.
கோவில் அமைப்பு: இது ஒரு கிழக்கு நோக்கிய கோவில். முதலில் நம்மை வரவேற்பது மதிற்சுவருடன் உள்ள ஒரு நுழைவாயில். நுழைவாயில் மேற்புறம் அமர்ந்த நிலையில் சிவன், பார்வதி, அவர்களுக்கு இருபுறமும் நின்ற நிலையில் விநாயகரும், முருகரும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர். அதைக் கடந்து உள்ளே சென்றால் 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. நுழைவாயிலுக்கும் 3 நிலை இராஜ கோபுரத்திற்கும் இடையில் நந்தி மண்டபம் உள்ளது. உள்ளே கருவறையில் இறைவன் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். அம்பாள் கோவில் தெற்கு நோக்கியுள்ளது. ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ள சப்தமாதர்கள் சிற்பங்கள் பார்த்து ரசிக்கத் தக்கது. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பம் சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும் இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாக விளங்குகிறது. இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள லிங்கோத்பவர் சிற்பம் பச்சை மரகதக் கல்லால் ஆனது. தபஸ்வியம்மனின் புடைப்புச்சிற்பம் மிகவும் அழகானது. வலக்கால் தரையில் ஊன்றி, இடக்காலை வலது தொடையில் பொருந்த மடக்கி மேல் நோக்கிய நின்ற நிலையில் வைத்து, வலக்கரம் உச்சிமீது உள்ளங்கை கவித்துவைத்து, இடக்கரம் வயிற்றின்கீழ் அங்கைமேல் நோக்கி வைத்துத் தவம் செய்கின்ற கோலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் புடைப்புச் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.
சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் ஆகியன செய்து கொள்ள இத்தலம் ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது.
சுந்தரர் பதிகத்தின் 10-வது பாடலின் படி இத்தலம் சுந்தரர் காலத்தில், அதாவது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இக்கோயில் பெருங்கோயில் அமைப்புடையதாய் இருந்தது என்பதும், குளிர்ச்சியை உடைய தாமரைக் குளங்கள் நான்கு புறத்திலும் சூழப்பெற்று அமைந்திருந்தது என்பதும் புலனாகிறது. மேலும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தின் இயறகை வளத்தையும் தனது ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்.
சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் காரணமாக ஓசை எழுந்தத்தால், கரிய எருமைகள் மிரண்டு அரிசலாற்றின் நீரில் புக, அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள் தாமரை மலரின்மேல் நெருங்கி விழ, தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூர் என்றும்,
தாமரைப் பொய்கைகளில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூர் என்றும்,
பின்னிக்கிடக்கின்ற முல்லைக் கொடியோடு, மல்லிகைக் கொடி, சண்பகமரம் என்னும் இவைகளும் அலைகளால் உந்தப்பட்டு வருகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில், கன்றுக்கூட்டம் நல்ல கரும்பின் முளையில் கறித்தலைப் பழக, பசுக் கூட்டம் மணம் வீசுகின்ற செங்கழுநீர்க் கொடியை மேய்கின்ற வயல் களையுடைய திருக்கலயநல்லூர் என்றும்,
நீரில் அலைகள் மேல் எழுந்து சென்று, ஏலம், இலவங்கம் என்னும் மரங்களோடே இருகரைகளையும் மோதியழிக்கின்ற அரிசிலாற்றின் தென் கரையில், பசிய புன்னை மரங்கள் வெள்ளிய முத்துக்களை அரும்பி, பொன்னை மலர்ந்து, பவளத்தினது அழகைக் காட்டுகின்ற நறுமணச் சோலைகள் சூழ்ந்த திருக்கலயநல்லூர் என்றும்,
வெண்மையான கவரி மயிரும், நீலமான மயில் இறகும், வேங்கை மரம், கோங்கமரம் இவற்றினது வாசனை பொருந்திய மலர்களும் கலந்து வருகின்ற நீரையுடைய அரிசிலாற்றின் தென்கரையில், கணுக்களையுடைய கமுக மரத்தின் அழகிய பாளையில் வண்டுகள் சேர்த்த தேனின் வாசனையோடு கலந்த பல மணங்களை வீசும் தென்றல் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூர் என்றும்,
பலவாறு கலயநல்லூர் தலத்தின் இயற்கை வளத்தை வர்ணிக்கிறார்.
சிறப்புகள்
மக்கள் இக்கோயிலை "கோட்டைச் சிவன்கோயில்" என்று சொல்கின்றனர். ஒரு காலத்தில் கோயிலைச் சுற்றிக் கோட்டை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்று அதன் இடிபாடுகளே மேடாகக் காணப்படுகின்றன. கோயிலுக்கு வெளியிலும் உள்ளுமாக இரு அகழிகள் உள்ளன. இதனால் பண்டை நாளில் இது சோழ மன்னர்களின் முக்கிய இடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள சப்தமாதர் சிற்பங்கள் ஒரே கல்லில் புடைச் சிற்பமாகவுள்ளன; தரிசிக்கத்தக்கது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி - புதிய திருமேனி அதிசயமான அமைப்புடையது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராக்ஷ மாலையும், இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாகி விளங்குகின்றது.
லிங்கோற்பவர் - பச்சைக்கல்லால் ஆனது. இதன் பாதத்தில் திருமால் மகுடமணிந்த வராகமாகவும், மேலே அன்னமும் பக்கத்தில் திருமாலும், பிரமனும் (சுமார் 2 அடி உயரத்தில்) வணங்கி நிற்கின்றனர்.
இங்குள்ள அர்த்தநாரி வடிவமும், தபஸ்வியம்மன் வடிவமும் புடைப்புச் சிற்பங்களே.
இக்கோயில் இராசராசனுக்கு முன்பே கற்கோயிலாகக் கட்டப்பட்டது. எனினும் 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாம் குலோத்துங்க மன்னனாலும், மீண்டும் 16 (அ) 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்க மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
இக்கோயில் கீழ்ப் பகுதியில் உள்ள மண்டபத் தூணில் உள்ள மனித வடிவம் மூன்றாம் குலோத்துங்கனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
தொடரும்

No comments:
Post a Comment