Saturday, March 5, 2022

அனுமனை விழுங்கிய முதலை

 ஶ்ரீராம காவியம்

326/03-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-6

அனுமனை விழுங்கிய முதலை...

 ★ராமாயண யுத்தத்தின் போது ராவணன் மகன் இந்திரஜித் மற்றும் லட்சுமணனுக்கு இடையே நடைபெற்ற போரில், இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சையாகி மயங்கி விழுந்தார். இலங்கை அரச மருத்துவர் சுசேனர் லட்சுமணனை குணப்படுத்த இமயமலையில் வளரும் அபூர்வமான, சஞ்சீவினி எனும் மூலிகை மருந்துச் செடிகளை பறித்து வர அறிவுறுத்தினார். சஞ்சீவினி மூலிகை மருந்தினை இமயமலையில் இருந்து கொண்டு வருவதற்காக பெரும் பலவானாகிய அனுமன் விரைந்து சென்றார். 

★இதை அறிந்த ராவணன், அனுமனுக்கு பல்வேறு விதமான தடைகளை ஏற்படுத்த, அவற்றை எல்லாம் கடந்து அனுமன் அந்த சஞ்சீவினி மலையைச் சென்று  அடைந்தார். அங்கு அனுமனைக் கொல்ல காலநேமி என்னும் அரக்கனை இந்திரஜித் அனுப்பி வைத்தான். காலநேமி, அசுரன் மாரீசனின் மகன் ஆவார். அனுமன் இமயமலையின் சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அடைந்து, சஞ்சீவினிச் செடிகளை அடையாளம் காண  முற்படுகையில், முனிவர் வேடம் போட்ட காலநேமி அனுமன் முன்னிலையில் சென்றார். 

★முனிவரைக் கண்ட அனுமன் அவரை வணங்கினார். அப்போது அருகில் இருக்கும் குளத்தை காண்பித்த முனிவர் வேடத்தில் இருந்த காலநேமி, இந்தப் புனிதக்குளத்தில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள். அப்போது ராம காரியம் வெற்றி பெறும் என்றார். அனுமனும் அந்தக் குளத்தில் குளிக்கையில் காலநேமி ஏவிய மாய முதலை அனுமனை விழுங்கியது. அனுமன் அம்முதலையின் வயிற்றைக் கிழித்துக் கொன்றார். அனுமன் கையால் இறந்த முதலை உடனே ஒரு தேவனாக மாறி அனுமனை வணங்கி நின்றான். 

★எனது பெயர் தான்யமாலி. ஒரு சாபத்தால் முதலையாக இங்கே இத்தனை ஆண்டு காலம் நான் இருந்தேன். இன்று  உங்களால் கொல்லப்பட்டதால் எனது சாபம் நீங்கி விமோசனம் பெற்றேன். இங்கு நீங்கள் முனிவர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ஒரு அசுரன். முனிவர் வேடத்தில் உங்களை கொல்ல திட்டம் தீட்டி இருக்கின்றான் என்று முனிவர் வேடத்தில் அங்கு நின்றிருந்த காலநேமியின் சதித் திட்டத்தை, அனுமனுக்கு எடுத்துரைத்து காலநேமியைக் கொன்று, விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து லட்சுமணனைக் காக்குமாறு தேவன் அனுமனிடம் கூறினான். 

★அனுமனும் காலநேமியைக் கொன்று சஞ்சீவினி மூலிகைச் செடிகளை அடையாளம் காண முடியாததால், அந்த  மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து, இளவல்  லட்சுமணனின் மூர்ச்சையை தெளிய வைத்தார். ராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள சேஷராயர் மண்டபத்தில் உள்ள தூணில் மிக அழகிய சிற்பங்களாக அமைக்கப்பட்டு உள்ளது.

நாளை.....................



No comments:

Post a Comment