🙏 நமஸ்காரம்
திருவிண்ணகர் என்னும் ஒப்பிலயப்பன் கோவில்
மூலவர் : ஒப்பிலயப்பன் (ஒப்பற்றவன்)
தாயார் : பூமிநாச்சியார்
உற்சவர் : ஸ்ரீனிவாசன்
பாசுரம் & பொருளுரை
பண்டெல்லாம்வேங்கடம் பாற்கடல்வைகுந்தம்
கொண்டங்குறைவார்க்குக்கோயில்போல்
வண்டு வளங்கிளரும்நீள்சோலை வண்பூங்கடிகை
இளங்குமரன் தன்விண்ணகர்.
முன்பு வைகுண்டத்திலிருந்த திருமால், அடியார்கட்கு அருள்புரியும் பொருட்டு திருவேங்கடம் திருப்பாற்கடல், அழகிய புஷ்பங்களில் வண்டுகள் கிளரக்கூடிய திருக்கடிகை, திருவிண்ணகர் ஆகிய திவ்ய தேசங்களில் இளமை குன்றாது திகழ்கின்றான் என்று பேயாழ்வாரால் திருவாய் மலர்ந்தருளப்பட்டஇந்த திருவிண்ணகர்.
இத்தலத்தையும், பெருமானையும் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரம், திருமங்கையாழ்வார் 34 பாசுரம், பொய்கையாழ்வார் 1, பேயாழ்வார் 2. மங்களாசாசனம். செய்துள்ளார்கள்.
சிறப்பு:
108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுந்தான் உப்பில்லா நிவேதனம்.
சிரவண நட்சத்திரத்தன்று (திருவோண நட்சத்திரம்) சிரவண தீபம்எடுத்துக் குறி சொல்லுவது இங்குவிசேஷம்.
நம்மாழ்வார் இருந்த இடத்திலேயே இருக்க பல ஸ்தலங்களில் இருக்கும் பெருமாள்கள் அவருக்கு காட்சி கொடுக்க அவர் ஆனந்தித்து பாடியதாக ஐதீஹம். இத்தலத்துப் பெருமான் தானே மிகவும் உகந்து ஆழ்வாரை அணைந்து ஐந்து திருக்கோலங்களில் காட்சி கொடுத்தார். அவையாவன. பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன், இவ்வைந்து பெயரிட்டு, என்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாயப் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய்
என்னப்பனெனக்காயிகுளாய் என்னைப்பெற்றவளாய்
பொன்னப்பன்மணியப்பன்முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப்பொன்மதிள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தவப்பன்
தன்னொப்பாரில்லப்பன் தந்தனன்தனதாள்நிழலே.
-என்பது திருவாய்மொழி நம்மாழ்வாரின் பாசுரம்
தலவரலாறு.
பிரம்மாண்ட புராணத்தில் தன் தந்தையாகிய பிரம்மனிடம் நாரதர் இத்தலத்து மேன்மையை வினவ, நாரதனுக்குச் சொல்வது போல் இத்தல வரலாறு பேசப்படுகிறது.
ஒரு சமயம் திருத்துழாய்த் தேவி, திருமாலிடம் இலக்குமி பிராட்டியை மட்டும் மார்பில் தாங்கியுள்ளீர்கள், எனக்கும் அதுபோன்ற சிறப்பு வேண்டுமெனக் கேட்க, கடுந்தவம் புரிந்து என் மார்பில் இடம் பெற்ற இலக்குமி மீண்டும் பூவுலகு சென்று பூமிதேவி என்ற பெயருடன் காவிரிக்கரையில் தோன்ற விருக்கிறாள். அவளுக்கு முன்பாகவே நீ சென்று துளசிச் செடியாக அங்கே தோன்றவும், உன் மடியில் (நிழலில்) இலக்குமி அவதரிப்பாள். பின்னொரு நாள் நான் இலக்குமி தேவியை ஏற்றுக் கொள்வேன். இலக்குமி அவதரிப்பதற்கு நீ ஆதாரமாக இருந்தபடியால் இலக்குமியை விட சிறந்த பேற்றினை பெறுவாய். இலக்குமி தேவியின் அருளைக் கூட கடுந்தவத்திற்குப் பின்பே ஒருவன் அடைய முடியும். ஆனால் உன் இதழ்களால் (துளசியால்) என்னை பூசிப்பவர்கள் அசுவமேத யாகத்திற்குண்டான பலனைப் பெறுவார்கள். உன் வனத்தை உறைவிடமாகக் கொண்டு உறைபவர்கள் வைகுண்டம் பெறுவார்கள்.எப்போதும் நீ என் நெஞ்சை அலங்கரிக்கும் மாலையாவாய். துளசி மாலையை ஏற்றுக்கொண்ட பின்புதான் நான் இலக்குமி தேவியை மணம் புரிவேன் என்று அருள, திருத்துழாய் தேவி உடனே அவ்விடம் வந்து துளசிச் செடியாய் மலர்ந்தாள். இந்த துளசியின் மகிமையைப் பற்றி நம்மாழ்வார் திருவிருத்தம் 53வது பாசுரம் பரக்கப் பேசுகிறது.
மிருகண்டு மகரிஷியின் புதல்வரான மார்க்கண்டேயர் திருமகள் தனக்கு மகளாகவும், திருமால்தனக்கு மாப்பிள்ளையாகவும் வரவேண்டும் என்றெண்ணி நீண்ட நாள் பேராவல் கொண்டவராயிருந்தார். அவர் தீர்த்தாடானம் செய்து ஷேத்ரயாத்திரை செய்து வருங்காலத்தில் இவ்விடத்திற்கு வந்ததும், தனது எண்ணம் ஈடேற தவமியற்ற தகுந்த இடம் இதுதான் என்றுணர்ந்து இவ்விடத்து திருமாலைக் குறித்து 1000 ஆண்டுகள் தவமியற்ற, பக்தருக்கருளுமுகத்தான் இலக்குமி தேவி, மழலைக் குழந்தையாக திருத்துழாய்ச் செடி மடியில் தோன்ற தாம் எண்ணியிருக்கும் திருமகளே இவள் என்றுணர்ந்து எடுத்து வளர்த்துவர பருவத்தின் எல்லையில் திருமகள் நிற்கும் ஓர்நாள் (பங்குனி மாதம் ஏகாதசி திருவோண நாளன்று) திருமால் கிழப்பிராமணன் வேடங் கொண்டு வந்து பெண் கேட்டார். நீரோ முதியவர். என் மகளோ சின்னஞ் சிறியவள். இவ்விதங் கேட்பது உமக்கழகல்ல என்றார் மார்க்கண்டேயர். யாம் அனைத்தும் அறிந்தவர். முதுமை உடம்பிலேதானன்றி உள்ளத்திலில்லை. நீரே கதியென்று கிழப்பிராமணன் கூற, என் மகள் சமைக்கக் கூட தெரியாதவள். மறந்து போய் உணவில் லவணம் (உப்பு) சேர்க்கத் தவறினால் கூட நீங்கள் சினந்து சபிக்கக்கூடும். இது ஒத்துவராது என்றார் முனிவர். உம் மகள் சமைக்கும் உப்பிலா பண்டமே எமக்கு உகப்பு. நான் இப்பெண்ணை மணந்து கொள்ளாமல் இவ்விடம் விட்டு நகர மாட்டேன் என்று கூறி பெருமாள் அமர்ந்துவிட்டார். செய்வதறியாது திகைத்த மார்க்கண்டேயர் ஆபத்தில் உதவும் பரந்தாமனை வேண்டி நிஷ்டையிலமர்ந்தார். தமது தபோ வலத்தால் வந்திருப்பவர் திருமாலே என்று நினைத்து கண் திறக்கும் வேளையில் சங்கு சக்கர தாரியாக பெருமாள் காட்சியளிக்க தண்டனிட்டு வணங்கிய மார்க்கண்டேயர் கன்னிகாதானம் செய்வித்து தமது மாப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு.
உப்பில்லா பண்டத்தை உகந்து நாம் ஏற்போம் என்று பெருமாள் சொன்னதாலேயே இன்றும் உப்பிலா நிவேதனமே பெருமாளுக்கு படையலாகச் சமர்ப்பிக்கப்படுகிறது. உப்பு சம்பந்தப்பட்ட பதார்த்தங்களை இக் கோவிலுக்குள் எடுத்துச் செல்பவர்கள் கடும் நரக வேதனை பெறுவர் என்று புராணங்கள் உரைக்கின்றன. இதனாற்றான் இப்பெருமானுக்கு உப்பிலியப்பன் எனவும் திருநாமம் அமைந்த தென்பர்.
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
https://youtu.be/CxZa1-XlJw8
No comments:
Post a Comment