திருக்குடந்தை (கும்பகோணம்)
மூலவர் : சாரங்க பாணி, ஆராவமுதன்
தாயார் : கோமளவல்லி
உற்சவர் : சாரங்க பாணி, ஆராவமுதன்
பாசுரம்
ஆராவமுதே! அடியேனுடலம் நின்பாலன்பாயே நீராயலைந்துகரைய உருக்குகின்றநெடுமாலே சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருகுடந்தை ஏரார்கோலந்திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே
சிறப்பு
மொத்தம் 52 பாசுரங்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம். திருமலைக்கும் அரங்கத்திற்கும் அடுத்து இங்குதான் ஆழ்வார்களின் மங்களாசாசனம் அதிகம். அரங்கம் 11, திருமலை 10.
இன்றைக்கும் இத்திருத்தலத்தில் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருக்கோலம் சாத்துகிறார்கள். பெருமாளுக்கு தயார் திருக்கோலம் தாயாருக்கு பெருமாள் திருக்கோலம் இப்படிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா. பெருமாளுக்கு நாச்சியார் திருக்கோலம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனா இந்த ஊரில் மட்டும் கோமளவல்லி தாயாருக்கு சாரங்கபாணி திருக்கோலம் சாரங்கபாணி பெருமாளுக்கு கோமளவல்லி தாயாருக்கு திருக்கோலம். திருக்கோலம் சாத்திவிட்டு அர்ச்சகர் சுவாமி வெளியே வந்துவிடுவார்.சற்று நேரம் கழித்து திரை திறந்து ஆரத்தி பண்ணினா அர்ச்சகர் சுவாமிக்கு தெரியாது யார் கோமளவல்லி தாயார் யார் சாரங்கபாணி அவ்வளவு ஒற்றுமையாக இருப்பார்கள் தாயார் முகம் மாதிரி பெருமாள் முகம் பெருமாள் முகம் மாதிரி தாயார் முகமும்..
தலவரலாறு.
சோழநாட்டு திவ்ய தேசங்களிலே ரொம்ப பிரதான திவ்ய தேசம் 4000 பாசுரங்களும் பிறந்ததற்கு திவ்யதேசம் திருக்குடந்தை. இத்திருக்குடந்தையில் பள்ளி கொண்டுள்ள ஆராவமுதப் பெருமாளைப் பற்றி பிரம்மாண்ட புராணம், பாத்ம புராணம், பவிஷ்ய புராணம் போன்ற நூல்கள் பரக்கப் பேசுகின்றன. பவிஷ்ய புராணம் 32 அத்தியாயங்களில் பேசுகிறது. சோனாட்டில் காவேரி, அரிசொல் ஆறு (அரசலாறு) எனுமிரு நதிகளுக்கிடையேயான அழகான ஷேத்ரமாகும்.
இப்பெருமானின் தோற்றத்தை ஆராயப் புகுங்கால் திருப்பதி சீனிவாசனும், அரவணை கிடந்த ஸ்ரீரங்கநாதனும் தாமே வந்து இங்கு புகுருவர். மும்மூர்த்திகளில் சாந்தம் நிறைந்தவர் யார் என்று அறியச் சென்ற ப்ருகு முனிவர், திருமாலின் நெஞ்சில் உதைக்க இதனால் அவமானம் அடைந்த லெட்சுமி தன் மணாளனை விட்டுப் பிரிந்து இப்பூவுலகிற்கு வந்து மறைந்திருக்கலானார். ப்ருகு முனிவரும் எம்பெருமானை உதைத்த பாவத்தைப் போக்கவும், மனம் நொந்த திருமகளை சாந்தி அடையச் செய்யவும், திருமகளே தனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டுமென்றும், தான் பணிவிடை செய்து தனது பாவத்தைப் போக்கிக்கொள்ள வேண்டுமென்றும் நினைத்து ஹேம மஹரிஷி என்ற பெயரில் இத்தலத்தில் கடுந்தவம் செய்து வரலாயினர். திரு இழந்த லோகத்தில் தாமும் இருக்க வொன்னா எம்பெருமான் லட்சுமி தேவியைத் தேடி பூவுலகிற்கு வந்து திருமலையில் (திருப்பதியில்) ஒரு புற்றில் மறைந்து வசிக்க, பத்மாவதி என்னும் கன்னியைத் திருமணம் செய்து கொண்டார். கலியுகத்தில் பத்மாவதியை மணந்துகொள்வதாக எம்பெருமான் இராமாவதாரத்தில் வாக்கு கொடுத்திருந்தார். இந்த பத்மாவதி தேவியே இராமாவதாரத்தில் வேதவதி என்னும் பெயர் பூண்டிருந்தாள்.
இவ்வரலாற்றினை திருப்பதி ஸ்தல வரலாற்றில் தெளிவாகக் காணலாம்)
ஹோல்காப்பூரில் மறைந்திருந்த லட்சுமி, நாரதர் வாயிலாக பத்மாவதியை மணந்த நிகழ்ச்சியை அறிந்து மிக்க சீற்றத்துடன் திருமலைக்கு வர, லட்சுமியின் கோபத்திற்குப் பயந்து எம்பெருமான் திருமலையினின்றும் ஓடிவந்து இங்கு (கும்பகோணத்தில்) ஒரு பாதாளக் குகையில் தம்மை மறைத்துக் கொண்டார். இன்றும் இக்கோவிலில் பாதாளச் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கடியில் ஒரு திருச்சன்னதி உள்ளது. இவ்விதம் வேங்கடநாதன் இங்கு வந்து சேர்ந்தார்.
எம்பெருமானை தொடர்ந்து இவ்விடத்திற்கு வந்த திருமகள் எங்கு தேடியும் காணமுடியாததால், எவ்விதமாயினும் காணவேண்டுமென்றும் ஏக்கம் மிகுந்து, (பாலா லிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு என்னுமாப்போலே) இனி எம்பெருமானை காண்டற்கு ஒரே வழி அவனைக் குறித்து தவமியற்றலே என்றெண்ணி அவ்விடத்தே இருந்த ஒரு பொற்றாமரையில் ஒரு சிறு குழந்தையாகத் தோன்ற காத்திருந்த தருணம் கண்முன் வாய்த்ததென்று அறிந்து ஹேம மஹரிஷி (ப்ருகு முனிவர்) அக்குழந்தையை வாரியெடுத்து கோமளவல்லி என்ற திருநாமம் சூட்டி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்து வரலானார்.
இஃதிவ்வாறிருக்க, இராமவதாரத்தில் பட்டாபிஷேகம் சூட்டிக்கொண்ட ராமன், இலங்கையின்றும் தன்னுடன் வந்த வீடணனுக்குப் பிரியா விடை கொடுத்தனுப்புங்காலை தம் முன்னோர்களான இட்சுவாகு வம்சத்தாரால் கடுந்தவம் செய்து பிரம்மனிடமிருந்து பெற்று தினந்தோறும் ஆராதிக்கப்பட்டு வந்த (ஆராதன விக்ரஹ) எம்பெருமானைக் கொடுத்துவிட்டார். ப்ரணா வாக்ருதி, வைதீக என்ற இரண்டு விமானங்களால் ஒருங்கேயமைக்கப்பட்ட அவ்வாராதன எம்பெருமானை வீடணன் கொண்டு வருங்கால், காவிரி,கொள்ளிட நதியிடையில் அரங்கநாதனாக அசைக்க இயலாது, அரவணையில் பள்ளிகொண்டுவிட, திகைத்து மலைத்து நின்று செய்வதறியாது கண்ணீர் சிந்தினான். வீடணனை நோக்கி ப்ரணா வாக்ருதி என்னும் விமானத்துடன் யாம் இங்கேயே பள்ளிகொள்ள விரும்பியுள்ளோம். நீ ஆண்டுக்கொருமுறை இங்குவந்து எம்மை வழிபட்டுச் செல்லலாம், என்றார். ப்ரண வாக்ருதியின் இன்னொரு பிரிவான வைதிக விமானத்துடன் யாம் குடந்தை சென்று ஹேம மஹரிஷிக்கு அருள் புரிந்து லட்சுமி தேவியையும் மணக்கவிருக்கிறோம் என்று சொல்லி அர்ச்சா ரூபியானான்.
அப்போதே கையில் சார்ங்கம் என்னும் வில்லுடன் மகர சங்கராந்தியன்று வைதீக விமானத்துடன் குடந்தை வந்திறங்கிய எம் பெருமான் கோமள வல்லியை ஏற்றுக்கொண்டு (மணம் செய்து) ப்ருகு முனிவருக்கும் பேரருள் புரிந்தார்.
இவ்விதம் ஸ்ரீரங்கநாதனும் இவ்விடம்வந்து சேர்ந்தார்.
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ லிங்க் கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://youtu.be/QmSy2purGLM
No comments:
Post a Comment