ஆன்மீக தரிசனம் (திலீப் குமார்)
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தவிட்டு பானையில் கை விட்டால், அந்த தவிட்டும் பொன்னாகும், பானையும் பொன்னாகும் என்று சொல்லுவார்கள். அத்தனை சிறப்பு பெற்றவர்கள், அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். வாழ்நாளில் ஒரு நாளாவது, இந்த கோயிலுக்கு செல்லுங்கள். அவ்வளவு அற்புதமான, பழமை வாய்ந்த கோயில் இது, அதுதான் அருள்மிகு பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில்.
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ,தங்ளது பிறந்த நட்சத்திர நாளிலோ, ஆவணி அவிட்டத்தன்றோ தஞ்சாவூர் மாவட்டம், கீழ்க்கொருக்கை புஷ்பவல்லி சமேத
பிரம்மஞானபுரீஸ்வரர் கோயிலில் அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது ஐதீகம்.
இவ்வளவு சிறப்பு பெற்ற, பழமை வாய்ந்த கோயிலை பற்றி கதையை படிப்போமா? வாங்கோ தொடருங்கள், உங்களை அந்த கோயிலுக்கு உள்ளே இந்த பதிவுகள் மூலம் அழைத்து செல்கிறேன் .
முன்னொரு காலத்தில் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் இப்பகுதியில் உள்ள அட்டவீரட்டத் தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது இருட்டிவிடவே, இங்கிருந்த பொது மடத்தில் தங்கினார். இந்த மடத்தில் ஏற்கெனவே நிறைய பக்தர்கள் தங்கியிருந்தனர். பல சிவத்தலங்களுக்கு சென்று வந்த அசதியில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவு வேளையில் திடீரென கண்விழித்த கோரக்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் இவரைப்போலவே இந்த மடத்தில் தங்கியிருந்த சிவபக்தை ஒருவரின் சேலைத்தலைப்பு இவரது கை மேல் கிடந்தது. சித்த புருஷரான இவர் மிகவும் வருந்தினார். உடனே இதற்கு பிராயச்சித்தம் தேடி, அரிவாளால் தன் இரு கைகளையும் வெட்டிக்கொண்டார். பின் இந்த மடத்திலேயே சில காலம் தங்கி, தனது இந்த தோஷம் நீங்க இங்கிருந்த சந்திர புஷ்கரணியில் நீராடி, தனது குறுகிய கையால் தாளம் போட்டு,
இத்தல ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லியையும் தினமும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியில் மகிழ்ந்தார் சிவன். சிவனின் அருளால் சித்தரின் கை கொஞ்ம், கொஞ்சமாக வளர்ந்தது. கோரக்கர் கை வெட்டுப்பட்டதால் இத்தலம் கோரக்கை எனவும், சிறிது காலம் குறுகிய கைகளில் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பட்டு தற்போது கொற்கை ஆனது.
பிரம்மனிடம் இருந்த வேதத்திரட்டுக்களை மது, கைடப அசுரர்கள் எடுத்துக்கொண்டு போய் கடலுக்கடியில் ஒளித்து வைத்துக்கொண்டனர். இதை மகாவிஷ்ணு காப்பாற்றி கொடுத்தார். இருந்தாலும் பிரம்மனால் முன்பு போல் இயல்பாக படைப்புத்தொழிலை செய்ய முடியவில்லை. எனவே அவர் விஷ்ணுவின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, அடிப்பிரதட்சணம் செய்து சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நாளில், சிவன் பிரம்மனுக்கு ஞானம் கொடுத்தார். இதனால் பிரம்மா மீண்டும். சிறப்பாக படைப்புத்தொழில் புரிந்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆனார்.
பிரம்மனுக்கு அவிட்ட நட்சத்திர தினத்தில் ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்ட நட்சத்திரத்திற்குறிய தலமானது. குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்க, தோஷங்கள் நிவர்த்தியாக இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
கல்வியில் சிறக்க, திருமண தடை நீங்க, மூளை வளர்ச்சி, குடும்ப ஒற்றுமை வளர இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
முந்திரிப்பருப்பு, நிலக்கடலை இரண்டையும் கலந்து மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.
கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் வழியிலும் கொருக்கை என்னும் ஊரில் அமைந்துள்ள, பழமை வாய்ந்த, அழகான சிற்பங்களை கொண்ட, அற்புதமான கோயில் இது.
நான் சென்றப்போது, வட இந்தியாவில் இருந்து , குடும்பத்தோடு வந்து இருந்த தம்பதியினர் ஒரு சிறப்பு பூஜை அல்லது பரிகார பூஜை செய்து கொண்டு இருந்தார்கள், சிவசாரியார்கள் , சிறப்பாக மந்திரங்களை சொல்லி, அக்னி குண்டம் மூட்டி, ஹோமம் பண்ணி கொண்டு இருந்தார்கள்.
அவிட்டம் மட்டுமின்றி எந்த நட்சத்திரத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், இங்கு உள்ள இரட்டை நந்தியின் காதில், தங்களது குறையை சொன்னால், அவர் அதை அங்குள்ள சிவப்பெருமானிடம், தெரிவித்து , நம் குறையை போக்குவார் , என்று அங்குள்ள, ஒரு சுமார் 85 வயது பாட்டி என்னிடம் சொல்ல, அவரை வணங்கி விட்டு, அந்த அழகான கோயிலை விட்டு வர மனமில்லாமல், அங்கு இருக்கும் சிவபெருமானை ஏக்கத்தோடு பாத்துக்கொண்டே, அந்த இரட்டை நந்தியியின் காதுக்கு அருகில் சென்று, மறுபடியும் இந்த கோயிலுக்கு வந்து, ஆசை தீர சிவப்பெருமானை , சேவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ( ஆன்மீக பயணம் தொடரும்).
No comments:
Post a Comment