Monday, February 15, 2021

மிளகாய் வயல்களிடையே ஒரு ஆன்மீகப்பயணம் இறுதிப்பகுதி 8

 🌶🌶🌶🌶🌶🌶🌶மிளகாய் வயல்களிடையே ஒரு ஆன்மீகப்பயணம்.(v.v) இறுதிப்பகுதி 8 

வைணவ நரசிம்ம தலங்களை தரிசித்தபின் மிளகாய் வயல்களின் ஊடாக பன்னிரு ஜோதிர்லிங்க தலமான ஸ்ரீசைலம் நோக்கி பயணம் தொடர்ந்தது..காலையில் தொடங்கிய பயணம் ..வழியில் மாசெர்லா என்ற ஊரில் லட்சுமி சென்ன கேசவ பெருமாளை தரிசித்தோம்...ஆந்திரத்தில் பெருமாள் கோயில்கள் சென்ன கேசவர் என்ற பெயரில் நிறைய உண்டு..நம் சென்னையிலும் உண்டு.. சென்னை என்ற பெயரே சென்ன கேசவ நாயக்கரிடமிருந்து பிரிட்டிஷார் வாங்கியதால் என படித்த நினைவு..வழக்கம்போல் பகலுணவு பழங்களுடன் முடிய மாலை ,4; மணிக்கு போய் சேர்ந்தோம்...திருப்பதி போல் பக்தர் கூட்டமும், விடுதி,சத்திரம்,தேவ. ஸ்தான விடுதி என நிறைந்து ஆன்மீக சூழல்.தெலுங்கு பிராமணர் சத்திரத்தில் .. இடம் கிடைத்தது.இரண்டு வேளை உணவு அனைவருக்கும்..கோயிலிலும் அன்ன தானம் உண்டு..பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமியும், பதினெட்டு சக்தி பீடங்களில் குடிகொண்டுள்ள சக்திகளில் ஒன்றான ஸ்ரீபிரம்மராம்பா தேவியும் கோயில் கொண்ட தலம் திருப்பதி போல் cell phone,camera,அனுமதி இல்லை.ஆனால் லாக்கர் வசதி உண்டு.bio matric card  க்யூவில் நின்று பெற்று உள்ளே செல்ல வேண்டும்..🙏🏼🙏🏼இக்கோவில் வேதங்களின் இருப்பிடம் என்கிறது தல புராணம்.

44 நதிகளுடனும், 60 கோடி தீர்த்த ராஜாக்களுடனும், பராசர, பரத்வாஜ முதலான மகரிஷிகளின் தபோவனத்துடனும், சந்திர, சூரிய தடாகங்களுடனும், செடி கொடிகள், மரங்கள் மற்றும் லிங்கங்களுடனும், மூலிகைகளுடனும் காண்போர் மனதைக் கொள்ளை கொள்கிறது இப்புனிதத் தலம்.

🙏🏼தரிசன பலன்

குருஷேத்திரத்தில் லட்சக் கணக்கான செலவில் தானம் செய்வது; இரண்டாயிரம் தடவை கங்கையில் நீராடுவது; நர்மதை நதிக்கரையில் பல ஆண்டுகள் தவம் செய்வது; காசி ஷேத்திரத்தில் லட்சம் ஆண்டுகள் வாழ்வது; ஆகியவற்றால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு மகா புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமியை ஒருமுறை தரிசனம் செய்வதால் கிடைக்கும் என்கிறது கந்த புராணம்.

🙏🏼அதிசயம்

யுகயுகங்களாகப் பிரசித்தி பெற்ற சைவத் திருக்கோயில் இது. திரேதா யுகத்தில் இரண்யகசிபு இங்கே பூஜை செய்தானாம். ஸ்ரீராமன் வனவாசம் செய்யும் காலத்தில், தம்பதி சமேதராய் ஸ்ரீசைல நாதனை வணங்கி, சகஸ்ரலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறுவர்.

பஞ்ச பாண்டவர்கள் தமது வனவாச காலத்தில் திரெளபதியுடன் இக்கோயிலில் சில காலம் தங்கி இருந்து, லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இத்திருக்கோயிலில் ராமர் பிரதிஷ்டை செய்த சகஸ்ரலிங்கத்தையும், பாண்டவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட “சத்யோஜாத” என்ற ஐந்து லிங்கங்களையும் பக்தர்கள் இன்றும் வழிபட்டுவருகின்றனர் என்பது ஐதீகம். உற்சவ காலங்களைத் தவிர, சாதாரண நாட்களில் பக்தர்கள் தாங்களே மல்லிகார்ஜுன சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம் என்பது இத்திருகோயிலின் சிறப்பு.

🙏🏼புனித நதி

பிரம்மகிரி, விஷ்ணுகிரி, ருத்ரகிரி ஆகிய மூன்று மலைகளுக்குப் பாதாபிஷேகம் செய்வதுபோல, கிருஷ்ணா நதி, பாதாள கங்கை என்ற பெயர் தாங்கிப் புனித நதியாக ஓடுகிறது.மறுநாள் அமாவாசை தர்ப்பணம் நதியில் செய்தேன். நதி 1 கிமீ தூரம்..நதிக்கு 700படிக்கட்டுகள் இறங்கி( விஞ்ச் வசதியும் உண்டு) பாதாளத்தில் நீராட வேண்டும்.தெளிவான நீர் ..மீன்கள் துள்ளிக்குதிக்க ரம்மியமான சூழல்.

🙏🏼இந்த ஆலய பிராகாரத்தில் நான்கு பக்கங்களிலும் நான்கு கோபுரங்கள் இருக்கின்றன. இந்த நான்கு கோபுரங்களுக்கு இடையில் தங்கச் சிகரமாக மல்லிகார்ஜுன சுவாமியின் பிரதான சன்னிதி ஆலய விமானம் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

🙏🏼கீர்த்தி பெரியது

சுவாமியின் கர்ப்பக்கிரகம் சிறியது. இதிலுள்ள மல்லிகார்ஜுன லிங்கம் மிகச் சிறியது. இந்த ஜோதி லிங்கத்தைத் தரிசிக்கும் பக்தர்கள், சுவாமி மீது தலையை முட்டி வேண்டிக்கொள்வது இங்கு சம்பிரதாயம். உற்சவ நாட்களில் தூரத்தில் நின்று தரிசிக்க மட்டுமே அனுமதி.

🙏🏼நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், மேரு பர்வதம் வில்லாகவும், ஆதிசேஷன் அதன் நாணாகவும், பாற்கடல் அம்பாரியாகவும், மன்மதன் பாணமாகவும், பிரம்மா சாரதியாகவும், தேவர்களைப் பரிவாரமாகவும் ஆக்கிக் கொண்டு ராட்சசர்களை அழிக்கப் புறப்பட்ட சிவன், நள்ளிரவுக்குள் அவர்களை சம்ஹாரம் செய்தார்.

திரிபுராசுரர்களின் சம்ஹாரம் இங்கு நடந்ததால், அன்னை ஜகதாம்பாள் திரிபுரசுந்தரியாக அக்னித் தடாகத்தில் உருவானாள். சுவாமியும் திரிபுராந்தகராக இங்கே நிலைத்தார்.

🙏🏼ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர் இத்தலத்தில் தங்கி இருந்தபொழுது சிவானந்தலஹரி உருவானதாகக் கருதப்படுகிறது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள புனித நகரம் இது.

திருமலை, அஹோபிலம், ஸ்ரீசைலம் ஆகிய புண்ணிய தலங்களை கொண்ட மலைத் தொடராய் ஆதிசேஷன். ஆதிசேஷனின் தலைப்பகுதியில் திருமலையும், உடற் பகுதியில் அஹோபிலமும், வால் பகுதியில், ஸ்ரீராமபிரான் சீதையுடன் வலம்வந்த, ஸ்ரீசைலமும் அமைந்துள்ளன.

பாண்டவர்கள் இங்கே ஐந்து லிங்கங்களைப் ப்ரதிஷ்டை செய்ததாக ஐதீகம். இன்றும் இங்கு இவற்றைக்காணலாம்..சம்பந்தரும், சுந்தரரும் திருக்காளத்தியை வணங்கிய பின்னர், அங்கிருந்தே வடக்கு நோக்கித்தொழுது பாடிப் பரவினர். அப்பர் பெருமான் தம்முடைய கயிலையாத்திரையில் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டுப் பாடியுள்ளார்.

சம்பந்தர், அப்பர் திருப்பதிகங்களில் இத்தலம் "திருப்பருப்பதம்" என்றும், சுந்தரர் திருப்பதிகத்தில் "சீபர்ப்பதம்" என்றும் குறிக்கப்படுகிறது.

தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம் மற்றும் திருக்கேதாரம் ஆகும்.

இத்தலம் அர்ஜுனத் தலமாகும். மருதமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் மூன்று; அவை அர்ஜுனத் தலங்கள் எனப்படுகிறது. இத்தலம் அவற்றுள் மல்லிகார்ஜுனம் எனப்படும். ஏனையவை (1) திருவிடைமருதூர் - மத்தியார்ஜுனம், (2) திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூர் - புடார்ச்சுனம் என்பனவாகும்..🙏🏼🙏🏼🙏🏼சைவமும் வைணவமும் இணைந்த அடியோங்களின் தல யாத்திரை அனுபவத்தை பகிர, படித்த அனைவருக்கும் நமஸ்காரங்கள்..🙏🏼





No comments:

Post a Comment