Saturday, August 8, 2020

திருத்தண்கா (தூப்புல், காஞ்சி)

🙏   நமஸ்காரம்    

45. திருத்தண்கா (தூப்புல், காஞ்சி)

மூலவர் - தீபப் பிரகாசர், விளக்கொளிப் பெருமாள் திவ்யப் பிரகாசர் (மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.)
தாயார் - மரகதவல்லி
உற்சவர் - திவ்யபிரகாசர்
விமானம் - ஸ்ரீகர விமானம்
தீர்த்தம் - சரஸ்வதி தீர்த்தம்
நாமாவளி - ஸ்ரீமரகதவல்லீ ஸமேத ஸ்ரீ தீபப்பிரகாசய நமஹ.

வழித்தடம்:

காஞ்சி நகரின் மத்தியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ரங்கசாமி குளம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

பாசுரம்:

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற,
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை,
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.
திருநெடுந்தாண்டகம் 14 - (2065)

பாசுரம் பதவுரை:

முளை கதிரை - இளங்கதிரவனைப் போன்றவனும்
குறுங்குடியுள்முகிலை - திருக்குறுங்குடியில்காளமேகம் போல் விளங்குபவனும்
மூவா மூ உலகும் கடந்து - நித்யமாய் மூவகைப்பட்டதான ஆத்மவர்க்கத்துக்கும் அவ்வருகாய்
அப்பால் - பரமபதத்திலே
முதல் ஆய் நின்ற - (உபயவிபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு எழுந்தருளியிருப்பவனும்
அளப்பு அரிய - (ஸ்வரூபரூபகுணங்களில்) அளவிடக்கூடாதவனும்
ஆர் அமுதை - அருமையான அம்ருதம் போன்றவனும்
அரங்கம் மேய அந்தணனை - திருவரங்கமாநகரில் பொருந்திய பரமபரிசுத்தனும்
அந்தணர்தம் சிந்தையானை - வைதிகர்களின் உள்ளத்தை இருப்பிடமாகவுடையவனும்
திருத்தண காவில் விளக்கு ஒளியை - திருத்தண்காவில் விளக்கொளி யெம்பெருமானாய் ஸேவை ஸாதிப்பதிலும்
மரகத்தை - மரகதப்பச்சைப்போல் விரும்பத்தக்க வடிவுபடைத்தவனும்
வெஃகாவில் திருமாலை - திருவெஃகாவில் கண்வளர்ந்தருளுகிற திருமகள் கொழுநனுமான
பாட கேட்டு - ஸர்வச்வனை (கிளி) பாட (அப்பாசுரங்களை)க் கேட்டு
மட கிளியை - அழகிய அக்கிளியைநோக்கி
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று - உன்னைவளர்த்ததனால் பிரயோஜனம் பெற்றேன்; இங்கேவா‘ என்றழைத்து
கை கூப்பி வணங்கினாள் - அதற்கு ஒரு அஞ்சலியும் செய்து நமஸ்கரித்தாள்

பாசுரம் விளக்க உரை:

சொல்லெடுத்துத் தன் கிளியைச் சொல்லே யென்று துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்றது கீழ்ப்பாட்டில். ‘இவள் தானே சில திருநாமங்களை முதலெடுத்துக் கொடுத்துச் சொல்லச் சொல்லுகையாலே சொன்னோம்; நாம் சொன்னதுவே இவளுக்கு மோஹ ஹேதுவாயிற்றே!‘ என்று கவலை கொண்ட கிளியானது, முன்பு இவள் தெளிந்திருந்த காலங்களில் தனக்கு உஜ்ஜீவநமாகக் கொண்டிருந்த திருநாமங்களைச் சொல்லுவோம்  என்றெண்ணி அவற்றை அடையவே சொல்லக்கேட்டு உகந்த பரகாலநாயகி “வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக“ என்று சொல்லி அக்கிளியைக் கைக்கூப்பி வணங்கினமையைத் திருத்தாயார் சொல்லுகிற பாசுரமா யிருக்கிறது.

முளைக்கதிர் என்றும் குறுங்குடியுள் முகில் என்றும், மூவாமூவுலகுங்கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரியவாரமுது என்றும் அரங்கமேய வந்தணன் என்றும் அந்தணர் தம் சிந்தையான் என்றும் விளக்கொளி என்றும் திருத்தண்காவில் மரகதமென்றும் வெஃகாவில் திருமாலென்றும் இவையாயிற்று இவள் கற்பித்து வைத்த திருநாமங்கள். இவற்றை அடையவே சொல்லத் தொடங்கிற்று மடக்கிளி.

முளைக்கதிர் = சிற்றிஞ் சிறுகாலை உதிக்கின்ற ஸூரியனைப் போலே கண்ணாலே முகந்து அநுபவிக்கலாம்படி யிருக்கிற திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையவன் என்றபடி. “ப்ரஸந்நாதித்யவர்ச்சஸம்“ என்றதுங் காண்க. தன்னை அடியிலே அவன் விஷயாந்தரங்களில் நின்று மீட்டதும் தன் பக்கலில் ருசியைப் பிறப்பித்தது வடிவைப் காட்டியாதலால் அதனையே கிளிக்கு முந்துற உபதேசித்து வைத்தாள் போலும். ‘முளைக்கதிர்‘ என்பதை வினைத்தொகையாகக் கொண்டால் ‘முளைக்கதிர்‘ என்று இயல்பாக வேண்டும்; தகரவொற்று இருப்பதனால் ‘முளைத்தலையுடைய கதிர்‘ என்று பொருள் கொள்ளவேணும்; அப்போது, முளை – முகனிலைத் தொழிற்பெயர்.

குறுங்குடியுள் முகில் = கீழ்ச்சொன்ன வடிவைப் பிரகாசித்தது சாஸ்திர முகத்தாலுமன்று, ஆசார்யோபதேசத்தாலுமன்று. திருக்குறுங்குடியிலேயாயிற்றுப் பிரகாசிப்பித்தது. இன்னமலையிலே மேகம் படிந்ததென்றால் மழைதப்பாதென்றிருக்குமாபோலே, திருக்குறுங்குடியிலே நின்றானென்றால் உலகமெல்லாம் க்ருதார்த்தமாம்படி யிருக்குமென்க. ஒருகால் தோன்றி வர்ஷித்துவிட்டு ஒழிந்துபோம் மேகம்போலன்றியே சாச்வதமாய் நிற்கும் மேகம் என்பதுதோன்ற ‘உள்முகில்‘ எனப்பட்டது.

திருக்குறுங்குடியில் வந்து நின்றருளின சீலாதிகனுடைய அடிப்பாடு சொல்லுகிறது மூவா மூவுலகுமென்று தொடங்கி. பரமபதத்தில் நின்றும் திருக்குறுங்குடியிலே போந்தருளினான் ஆயிற்று. ‘மூவா மூவுலகுங் கடந்து‘ என்றது – பத்தாத்மாக்களென்றும் முக்தாத்மாக்களென்றும் நித்யாத்மாக்களென்றும் மூவகையாகச் சொல்லப்படுகின்ற ஆத்மவர்க்கங்களுக்கு எம்பெருமான் அவ்வருகுபட்டிருக்கின்றமையைச் சொன்னவாறு. மூவா என்றது ஒருகாலும் அழிவில்லாமையைச் சொன்னபடி. நித்ய முக்த்ர்களுக்குத் தான் அழிவு இல்லை; பத்தர்களெனப்படுகிற ஸம்ஸாரிகளுக்கு அழிவு உண்டே யென்று சிலர் சங்கிப்பர்கள்; ஆத்மாக்கள் கருமவசத்தால் பரிக்ரஹித்துக் கொள்ளுகிற சரீரங்களுக்கு அழிவுண்டேயன்றி ஆத்மாக்களுக்கு ஒரு போழ்தும் அழிவில்லை யென்றுணர்க. முதலாய் நின்ற என்றது – உபயவிபூதிக்கும் ஸத்தாஹேதுவாய் நின்ற என்றபடி. நித்யஸூரிகளுக்கு போக்யதையாலே ஸத்தாஹேதுவாய், ஸம்ஸாரிகளுக்குக் கரணகளேபர ப்ரதாநத்தாலே ஸத்தாஹேதுவா யிருக்குமென்க. அளப்பரிய ஆரமுது = ஸ்வரூபரூப குணங்களால் எல்லை காண வெண்ணாதவனாய் அமுதக்கடல்போலே இனியனா யிருக்குமவன்.

அரங்கம் மேய் அந்தணன்– அந்த அமுதக்கடலில் நின்றும் ஒரு குமிழி புறப்பட்டு ஒரு தடாகத்திலே வந்து தேங்கினாற்போலேயாயிற்று திருவரங்கம் பெரியகோயிலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறபடி. அந்தண னென்றது பரிசுத்தனென்றபடி; தன் வடிவழகைக் காட்டி அஹங்காரமும் விஷயாந்தர ப்ராவணயமுமாகிற அசுத்தியைப் போக்கவல்ல சுத்தியை யுடையவனென்றவாறு.

அந்தணர்தம் சிந்தையான் – “நின்ற தெந்தை யூரகத்து இருந்த தெந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம், என்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன், நின்றது மிருந்ததும் கிடந்தது மென்னெஞ்சுகளே‘! என்கிறபடியே பரிசுத்தருடைய ஹ்ருதயத்திலே நித்யவாஸம் பண்ணுமவன். எம்பெருமானுக்கு, பரம பதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமாலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞசிலே வந்து சேர்வதற்கதாகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகிறனென்றும், ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும், விடுமென்றும் உணர்க.

விளக்கொளியை – விளக்கின ஒளியானது எப்படி வெளிச்சத்தை யுண்டாக்கிப் பதார்த்தங்களை விளங்கச்செய்யுமோ அப்படி ஸ்வஸ்வரூபம் ஜீவாத்மஸ்வரூபம் உபாயஸ்வரூபம் விரோதி ஸ்வரூபம் ஆகிற அர்த்த பஞ்சகத்தையும் தனக்கு விளங்கச் செய்தருளினவன் என்றவாறு. மேலே ‘திருத்தண்கா‘ என வருகையாலே இங்கு விளக்கொளியென்றது அத்தலத்து எம்பெருமானாகிய தீபப்ரகாசனை என்றுங் கொள்ளலாம்; திருத்தண்கா ‘விளக்ககொளி கோயில்‘ என்றே வழங்கப்பெறும். இத்தலத்துப் பெருமான் பண்டைக்காலத்தில் சயன திருக்கோலமாக எழுந்தருளி யிருந்ததாகப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினாலும் அரும்பதவுரையினாலும் மற்றும் சில சாதனங்களாலும் விளங்குகின்றது.

திருத்தண்காவில் மரகதத்தை – இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் காண்மின்:- “அருமணவனானை என்னுமாபோலே திருத்தண்காவில் மரதகம் என்கிறார். இன்ன தீவிலேபட்ட ஆனையென்றால் விலக்ஷணமாயிருக்குமாபோலே திருத்தண்காவில் கண்வளர்ந்தருளுகிறவனுடைய வடிவென்றால் விலக்ஷணமாயிருக்கிறபடி. * பச்சைமா மலை போல் மேனி என்கிற வடிவையுடையவன். வடதேசத்தினின்றும் பெருமாளை யநுபவிக்க வருமவர்கள் இளைத்து விழுந்தவிடத்திலே அவர்களை எதிர்கொண்டு அநுபவிப்பிக்கக் கிடக்கிற கிடை.“

வெஃகாவில் திருமாலை-“வில்லறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தா யென்றும் வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே யென்றும்“ என்று பிராட்டியைத் திருமணம் புணர்ந்த மணக்கோலத்தோடே கூட இருவரும் வந்து கிடக்கிற கிடையாகக் கீழே அருளிச் செய்தாரிறே; திருவெஃகாவிலே வந்து திருக்கண் வளர்ந்தருளின பின்பு ச்ரியபதித்வம் நிறம் பெற்றபடி.

ஆக இப்படிப்பட்ட திருநாமங்களை மடக்கிளி எடுத்துப் பாடினவளவிலே ஆனந்தமாகக் கேட்கலுற்ற என்மகளானவள் ‘கிளிப்பிள்ளாய்! உன்னை வளர்த்ப்ரயோஜனம் பெற்றேன்; ஆபத்துக்கு உதவுபனென்று பேர்பெற்ற அவன் ஆபத்தை விளைவித்துப்போனான், அந்தநிலைமையில் நீ உதவப்பெற்றாயே!, அருகேவந்திடாய்‘ என்று சொல்லி உபகாரஸ்மிருதி தோற்றக்கையெடுத்துக் கும்பிட்டாளென்றதாயிற்று.

புத்திரனாகவுமாம், சிஷ்யனாகவுமாம், பகவத் விஷயத்திற்கு உசரத்துணையாகப் பெற்றால் கௌரவிக்கவேணும் என்னுமிடம் ஈற்றடியால் அறிவிக்கப்பட்டதாயிற்று. “கணபுரங்கைதொழும் பிள்ளையைப் பிள்ளையென்றெண்ணப் பெறுவரே“  என்றதும் நோக்குக.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

ஸ்தல வரலாறு:

இத்தலம் பற்றி பிரம்மாண்டபுராணத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. பிரம்மன் தொடர்ந்து யாகம் நடத்தினான். (மும்மூர்த்திகள் தமது துணைவியரின்றி தொடர்ந்து செயல்பட முடியும் என்பதைக் காட்ட பிரம்மன் தனது தேவியின் துணையின்றி இவ்விடத்தில் யாகத்தை துவக்கினான்). பிரம்மனின் யாகத்தை தொடரவிடாமல் அதனைத் தகர்க்க எத்தனையோ முயற்சிகள் செய்தும், அத்தனையும் பயனின்றிப் போகவே இனிமேல் என்ன செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்து இந்த உலகத்தையே இருட்டில் மூழ்கடிக்க எண்ணினாள். உடனே சூரிய, சந்திரர்களின் ஒளியை இழக்கச் செய்து பூவுலகை இருளில் ஆழ்த்தினாள். திடீர் இருட்டிற்கான காரணத்தை தமது ஞான திருஷ்டியால் உணர்ந்த பிரம்மன், வழக்கம்போல் உதவி வேண்டி மகாவிஷ்ணுவைத் துதித்தார். உடனே மஹாவிஷ்ணு (அன்றையதினமான சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று) ஜோதி மயமாய்த் தோன்றி பிரம்மனின் யாகத்தை தொடர்வதற்கு ஒளி கொடுத்து சூரிய சந்திரர்களின் ஒளியை மறைத்த தடையை நீக்கி உலகத்தை மீண்டும் வெளிச்சத்தின் மடியில் வைத்தார்.  ஜோதிமயமான வெளிச்சத்தில் தனது யாகத்தை தொடர்ந்தான் பிரம்மன். யாக சாலையை மேலும் விரிவு படுத்த எண்ணிய பிரம்மன் விஸ்வகர்மாவை நினைக்க தேவர்கள் புடைசூழ வந்த விஸ்வகர்மா யாக சாலையை மிக நுட்பம் வாய்ந்ததாக அமைத்துக் கொடுத்தான். விஸ்வகர்மாவுடன் தேவர்கள் வந்ததைக் கண்ட அசுரர்கள் தாமும் கூட்டம் கூட்டமாய் அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தனர். ஆனால் பிரம்மனோ தேவர்களை மட்டும் எதிர்கொண்டழைத்து அசுரர்களை கண்டும் காணாமல் இருந்ததால் அவர்கள் மிகவும் சினங்கொண்டனர். யாக சாலையை விட்டு வெளியேறிய அவர்கள் பிராமண வடிவம் கொண்டு நேராக சரஸ்வதிதேவியின் இருப்பிடம் வந்து சேர்ந்தனர். பத்னி இல்லாமல் யாகம் செய்ய பிரம்மன் தனது மமதையால் தங்களைப் பழித்துச் செயல்படுவது போலல்லவா இது இருக்கிறது என்று பலவிதமாகக் கூறி வாணியின் கோபத்தைக் கிளற மிகவும் சினந்த சரஸ்வதி நானும் பலவிதமான முயற்சிகள் செய்துவிட்டேன். என்ன செய்யலாமென நீங்கள் கூறுங்கள் என்று கேட்க, அதற்கவர்கள் கொடிய அரக்கன் ஒருவனை அக்னி பிழம்பாய் படைத்து அனுப்பினால் அவன்யாக குண்டலியின் வேள்வித் தீயைத் தன்னுள் கிரஹித்துக் கொண்டு வந்துவிடுவான் என்று சொல்ல தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து ஒரு கொடிய அரக்கனைப் படைத்தாள் சரஸ்வதி மாய நலன் என்பது அவனது பெயர்.  கொடிய அக்கினி ரூபத்தில் யாகத்தை அழிக்க வந்த அந்த அக்கினி ரூப அசுரனை அவ்விடத்தில் பிரவேசித்த பெருமாள் தனது கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம் நல்கினார். இவ்வாறு அக்கினியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால் தீபப்பிரகாசர் ஆனார். தூய தமிழில் விளக்கொளிப் பெருமாள் ஆனார்.

சிறப்பு:

தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை. குளிர்ச்சி பொருந்திய சோலையைத் தெரிவு செய்து பிரம்மன் வேள்விச்சாலை அமைத்த இடமாதலால் திருத்தண்கா என்றாயிற்று. பாண்டிநாட்டுத் திருப்பதியில் திருத்தங்கல் என்பது ஒன்றுண்டு. அது வேறு இது வேறு. 

வைணவ சம்பிரதாயத்தில் பாஷ்யகார சித்தாந்தம் என்பதைப் போதித்த மாமேதை ஸ்ரீஸ்வாமி தேசிகன் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் அவதரித்தார். அதாவது (இத்தலம்) தூப்புல் என்னும் பகுதியே அவரது அவதார ஸ்தலமாகும். அவர் "தூப்புல் வேதாந்த தேசிகன்" என அழைக்கப்பட்டார். பெருமாள் சன்னிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. 

வைணவ ஆச்சார்யாரான இவரது தாய் தனக்கு குழந்தை வரம் வேண்டி பெருமாளை வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற திருப்பதி பெருமாள் தனது கையிலிருக்கும் மணியையே இவருக்கு குழந்தையாக பிறக்கும் படி அருள்பாலித்தார். பெருமாளின் கையிலுள்ள மணியே "வேதாந்த தேசிகர்" ஆக அவதரித்தது. வேதாந்த தேசிகர் 1268 ஆம் ஆண்டு முதல் 1369 ஆண்டு வரை நூற்றாண்டுகளுக்கு மேல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். பல நூல்களை வடமொழியிலிருந்து மொழி பெயர்த்தார். அத்துடன் காஞ்சி வரதராஜ பெருமாள் மீது "அடைக்கலப்பத்து" என்ற பாமாலையைப் பாடியுள்ளார். இவரது புதல்வர் நயின வரதாச்சாரியார் என்பவர் இந்த "தீபப்பிரகாசராகிய பெருமாள்" கோவிலை முழுவதுமாகக் கட்டி முடித்தார் என்றும் கூறுவர்.

கோவிலுக்கு வெளியே தெற்கு முகமாக சுவாமி தேசிகர் சன்னிதி அமைந்துள்ளது. சித்திரை ரேவதி நட்சத்திரத்தில் இவருக்கு அவதார உற்சவம் சிறப்பாக நடக்கிறது.. இங்குள்ள வேதாந்த தேசிகரின் சன்னதியில் உட்புறச் சுவர்களில் எல்லாம் ஸ்வாமி தேசிகனின் ஜெனனம் முதலான வரலாற்றை சித்தரிக்கும் நிகழ்ச்சிகள் அழகோவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. இச்சன்னதியில் தேசிகன் ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார். இங்குள்ள ஸ்வாமி தேசிகனின் திருமேனியை அவரது குமாரர் நயினவராதாச்சாரியார் தான் பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீஸ்வாமி தேசிகர் தனது வாழ்நாளெல்லாம் வைத்து வழிபட்ட திருவாராதனப் பெருமாளான ஸ்ரீலெட்சுமி ஹயக்ரீவர் தற்போது இச்சன்னதியில்தான் உள்ளார். தேசிகன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்ததாகும். 

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/RiAurAj48Ws

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://www.facebook.com/102047988262304/posts/117277310072705/?sfnsn=wiwspmo&extid=qRTOxGwQ0XoJPGdK

No comments:

Post a Comment