Tuesday, August 18, 2020

ஏரியில் கண்டெடுத்த பிள்ளையார்,..

ஏரியில் கண்டெடுத்த பிள்ளையார்,.....                                                                                                                           ஒரு கிராமத்தில் இருந்து முக்கியஸ்தர்கள் சிலர் தரிசனத்துக்கு வந்தார்கள்.

கிராமத்திலிருந்த விநாயகர் சிலை திருட்டு போய்விட்டது. பெரியவாள் வேறொரு சிலை கொடுத்து உதவ வேண்டும் என்று பிராத்தித்தார்கள்.

"உங்க கிராமத்திலே ஏரி இருக்கா?" என்று பெரியவாள் கேட்டார்கள்.

'பஞ்சாயத்திலே தூர் வாரலே. தண்ணி ரொம்பக் கொஞ்சமா இருக்குங்க..."

"ஏரியில் நிறைய தண்ணீர் இருந்தால் எல்லா ஜனங்களுக்கும் சௌகரியம்; கன்று - காலிகளுக்கும் உபயோகப்படும். இல்லையா?"

"ஆமாங்க..."

"முதல்லே ஏரியை ஆழபடுதுங்கோ..." என்று சொல்லிவிட்டு பிரசாதம் கொடுத்துவிட்டார்கள்.

அதாவது, "போய் வாருங்கள்" என்று அர்த்தம்.

வந்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம். 'விநாயகர் சிலை தற்சமயம் கைவசம் இல்லை' என்று சொல்லியிருந்தால் கூட கொஞ்சம் சமாதானமாக இருந்திருக்கும்.

சிலையை பற்றி பேசவே இல்லையே?

ஏரியை ஆழப்படுத்துவது கவர்ன்மென்ட் வேலை. அதைப் போய் நாம் செய்வானேன்?

ஆனால், கிராமத்தில், சில வயோதிகர்கள் இருந்தார்கள். "பெரியவங்க சொன்னப்படி செய்யலேனா அது பெரிய குத்தம். நமக்கு கஷ்டம் வரும்' என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்கள்.

வேறு வழி இல்லை. விலை கொடுத்து வம்பை வாங்கிகொண்டு வந்தாகிவிட்டது!

இனியும் தாமதப்படுத்துவதில் அர்த்தமில்லை.

குறிப்பிட்ட நாளில், வாட்டசாட்டமான பேர்கள் சிலர் மண்வெட்டியும் கூடையுமாக ஏரியில் இறங்கினார்கள்.

ஒரு மணி நேரத்துக்குபின் ஒரு 'டங்' .

"அண்ணே, என்னமோ சத்தம்..."

ஜாக்கிரதையாக கையை விட்டு துழாவினார்கள்.

பிள்ளையார்! (கெட்டுப்போனவர் அல்ல; இவர் ரொம்ப பழமையானவர்!)

அடுத்து ஒரு 'டங்' . சிவலிங்கம்!

அடுத்து, நந்தி, அம்பாள், முருகன், பலிபீடம், துர்க்கை...

ஒட்டோட்டமாக காஞ்சிபுரம் வந்தார்கள்.

நெஞ்சம் குதூகலிக்க, பெரியவாளிடம் விண்ணப்பித்து கொண்டார்கள்.

'சாமிகிட்டே ஒரு பிள்ளையார் சிலை தான் கேட்டோம்.. இப்போ ஒரு கோயிலே கிடைச்சிருக்கு...'

பெரியவாள், " ஏரிக்கரையிலே ஒரு கீற்று கொட்டகை போட்டு, சிலைகளை வைத்து, விளக்கு ஏற்றி, பழங்கள் நிவேதனம் செய்து வாருங்கள்" என்று உத்திரவிட்டார்கள்.

"கோயில்...?" என்று இழுத்தார்கள் கிராமவாசிகள்.

"பிள்ளையார் வந்துட்டாரே ... அவர் பார்த்துப்பார்..."

ஏரியிலிருந்து இபோதுதான் வெளியே வந்திருக்கிறார் பிள்ளையார். நாளைடிவில் சிவலிங்கத்துக்கு ஓர் அரண்மனை (அரனுக்கு ஒரு மனை - சிவன் கோயில்) கட்டி கொடுக்கமாட்டரா, என்ன?

No comments:

Post a Comment