108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் காட்டுமன்னார்குடி வீரநாரயண பெருமாள் திருத்தலம் மகிமை
******
நாம் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்ய வேண்டிய திருத்தலம்
நம் நாதமுனிகளார் திரு அவதார ஸ்தலம்
108 வைணவ திவ்ய தேசங்களையும், எப்படியாவது தங்கள் வாழ்நாளில் தரிசிக்க வேண்டும் என்கிற விருப்பம் கொண்டு, திவ்ய தேசங்களுக்கு சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம், ஒருமுறை, இருமுறை என செல்பவர்கள், இன்றைய காலத்தில் அநேகம் பேர் உண்டு.
ஆனால், இந்த உடலில் உயிர் உள்ளபோதே, எத்தனை தலங்களை முடியுமோ, அத்தனை தலங்களையும், தரிசித்துவிடவேண்டும், என எண்ணி வைணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முடிவு செய்து கிளம்புபவர்கள், முதலில் செல்லவேண்டிய கோவில் தான் இது
காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில்.
காரணம், இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும்.
இது 108 வைணவ திவ்ய தேசத்தில் ஒன்று அல்ல, ஆனால் அதனினும் பெருமை மிக்கது.
நாலாயிர திவ்ய பிரபந்தம் கண்டெடுக்க வித்திட்ட தலம் இது
எனவே, இந்த தலத்தை முதலாவதாக தரிசித்துவிடுவது மிகவும் சிறந்தது.
ஈரேழு வகையான பிறவிகளில், நமது மனித பிறவிக்கு மட்டுமே பல்வேறு சிறப்புக்கள் உண்டு
ஒளவையார் கூட ‘அரிதரிது மானிடராதல் அரிது’ என்கிறார்.
மேலும், இனி பிறவி வேண்டாம், ஆசாரியன் திருவடியே பகவத் சரணம் ஒன்றே போதும் என்று கருதி , அதை அடையக் கூடிய வாய்ப்பும், இந்த மனிதப் பிறவிக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.
மற்றெந்த பிறவியெடுத்தாலும், அது சாத்தியமில்லை
காரணம், மனிதப் பிறவிக்கு உள்ள பல்வேறு தனித்தன்மைகளில் ஒன்றான ‘இறைபக்தி’ பகவத் நாம சங்கீர்தனம், திவ்ய கைங்கர்யம்
நித்ய திருவாராதனம், ஆலய தரிசனம் செய்யும் பாக்கியங்கள், அதனால் கிட்டும் பலன் என மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும், தங்கள் வாழ்நாளில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும் என எண்ணுவது நல்லதுதான்
மனத்தால், உடலால், நேரத்தால் அனைத்து தலங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும், தங்களால் எத்தனை முடியுமோ அத்தனை தலங்களை தரிசிக்கலாம்
இந்த உடல் நன்றாக இயங்கிக்கொண்டு உள்ள போதே, இளமையிலேயே புண்ணிய தலங்களையும், திருத்தலங்களையும் தரிசிக்க முடியுமானால் தரிசித்து விடலாம்
"நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப்படும் "
என்று வள்ளுவர் கூறுவது
அறச்செயல்களுக்கு மட்டுமல்ல, நாம் வசிக்கும் ஊரின் அருகிலுள்ள திருத்தலங்களை தரிசிப்பதற்கும் தான் 'நல்வினை’ என்று அவர் கூறியிருக்கிறார்.
வைணவ திவ்ய தேசங்களை தரிசிக்க, முதலில் செல்லவேண்டிய கோவில் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் என்று கூறினேன்
காரணம்
இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும் என்பதால்.
ஏன் அப்படி ஒரு பதில் என கேட்கிறவர்களுக்கு பதில் இதோ
அதாவது பன்னிரு ஆழ்வார்கள், மகாவிஷ்ணுவைப் பற்றி மனமுருகி பாடிய பாடல்களின் தொகுப்பே, நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனப்படும்.
அந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை சிதம்பரத்துக்கு அருகிலுள்ள காட்டுமன்னார்குடி (காட்டுமன்னார் கோவில்) குப்பங்குழியில் அவதரித்த நாதமுனிகள் ஒருநாள் தான் கேட்ட "ஆயிரத்துள் இப்பத்தும்" என்ற வரிகளை பாகவதர்கள் வாயால் கேட்டு, அதை உணர்ந்து தேடி இந்த நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும், குறுகூர் சென்று தன்னாழ்ந்த பக்தியால், நம்மாழ்வாரின் திருவருளால் மீட்டு, அடியார்களாகிய நமக்கு வழங்கினார்.அதன் பிறகே நமக்கு 108 திவ்யதேசத்தின் மகிமை தெரிந்தது நாமும் விருப்பமாக சென்று சேவிக்கிறோம்
நாலாயிர திவ்யபிரபந்தம் கிட்டவும் அதன் மூலம் இன்று நாம் தரிசிக்க நினைக்கும் திரு வைணவ 108 திவ்ய தேசங்களை தந்தருள காரணமான இக்கோவிலை, இவ்வூர் பெருமாளை சேவித்தால் 108 திவ்யதேச பெருமாளை தரிசித்த பலன் உண்டு என கல்வெட்டு கூறுகிறது
நாதமுனிகளை முதல்வராகக் கொண்டே ஶ்ரீவைணவ ஆச்சார்யர்களின் பரம்பரை துவங்குகிறது!
எனவே முதல்வரை, தரிசனம் செய்தால் பரன்பறையை சேவித்த பலனும், அவரால் நமக்கு காட்டியருளப்பெற்ற, திவ்யதேசங்களை சேவித்த பலனும் உண்டு அல்லவா? கண்டிப்பாக முடிந்தால் சேவியுங்கள்
இந்த ஊரின் பெயர், வீரநாரயணபுர சதுர்வேதிமங்களம், என்று கல்வெட்டுகளில் உள்ளது.
வீரநாராயணன், என்ற பேர் பெற்ற முதலாம் பராந்தகன் இவ்வூரை அமைத்தார்.
இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26 கி. மீ தூரத்தில் இருக்கிறது.
இதன் அருகில் தான் தமிழகத்திலேயே சென்னைக்கு குடிநீர் தரும் மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரி இருக்கிறது.
'வீரநாராயண ஏரி' என்பதே நாளடைவில் 'வீராணம் ஏரி' என்று மருவிட்டது.
பெருமாளுக்கும், பிராட்டியாருக்கும் திருகல்யாணம் நடைபெற்ற போது,
இது வீரநராயண பெருமாளுக்கு சீராக கொடுக்கப்பட்டதாம்.
காட்டுமன்னார்கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம்.
மூலவர்
ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள்.நின்ற திருக்கோலத்தில்
சங்கு சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.
மரத்தினாலான நெடிய, வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் சிலை உருவாக அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மூலவரின் சந்நிதிக்கு, இடப்புறம் நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் சந்நிதிகள் உள்ளன.
பெருமாள் பெயர் : வீரநாராயணப்பெருமாள்.
உற்சவர் : ஸ்ரீ ராஜகோபாலன் சுந்தரகோபாலன் ஸ்ரீனிவாசர்.
தாயார் : மஹாலக்ஷ்மி மரகதவல்லி.
தீர்த்தம் :வேதபுஷ்கரணி காவேரி நதி.
தலவிருட்சம் : நந்தியாவட்டை.
இந்தத் திருக்கோவிலில்
ஸ்ரீ யோக நரசிம்மரையும்,
ஸ்ரீ வராகரையும்
நாம் தரிசிக்கலாம்.
பிரகாரத்தில், ஆளவந்தார் சந்நதியும் உள்ளது.
உற்சவ தாயார்,
ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் என்று அழைக்கப் படுகிறாள்.
அடுத்து,
ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் ஆகியோரையும் காணலாம்.
பெருமாள் சன்னதியின், வலது புறம் யோக நரசிம்மர் இருக்கிறார்.
தவிர,
அருள்மிகு அனுக்கிரஹ ஆஞ்சநேயர் சன்னதி உண்டு.
கோவில் பற்றிய கல்வெட்டும், அதன் அருகில் ராமர் சீதையும், அனுமனும் உள்ளனர். இதன் எதிரில் ராமர் சன்னதி உள்ளது.
வைணவத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றிய ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பேரர் யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதரித்த தலம் இது
"லக்ஷ்மி நாத சமாரம்பாம்" என்ற தனியன் ஏற்படுத்திய ஸ்தலம் என்பார்கள்
நேரம் கிட்டினால், இந்த தலத்தை தரிசித்து 108 திவ்ய தேசங்களை சேவித்த பலன் பெறுங்கள்
ஜெய் ஶ்ரீராம்
நற்பவி சுபமஸ்து
No comments:
Post a Comment