Sunday, February 20, 2022

எண்ணப்பறவை_9

 எண்ணப்பறவை_9

மறுநாள் ஏழு மணிக்கே ஆஃபீஸுக்கு கிளம்பிவிட்டாள் அமுதா.  பரந்தாமன் எட்டு மணிக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்.

அலுவலகம் வந்தவுடனேயே வேலையில் மும்முரம்.

பதினோரு மணிக்கு அபிராமியிடமிருந்து ஃபோன்.  அப்போதுதான் அமுதாவுக்கு ஞாபகம் வந்த்து அவளுடைய ப்ரக்னன்ஸி ரிசல்ட் பற்றி.

'ஏண்டி.  நீதான் எனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னவளா? ஆசையா ஸ்வீட் வாங்கிண்டு பஸ் ஸ்டாப்புக்கு வந்தா உன்ன காணும்.'

'சாரி அக்கா.  வேலை ரொம்ப கெடுபிடி இங்க.  பை த பை, மை கங்க்ராஜுலேஷன்ஸ் டு யூ.  ஸன்டே நான் நேரில வந்து பார்கரேன் உங்கள.  உடம்ப பார்த்துக்கோங்கோ அக்கா.'

ஒரு வழியாக எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிலிருந்தும் க்ரைம் டீடெய்ல்ஸ் வாங்கியாகி விட்டது. இப்ப அதையெல்லாம் கம்பைல் பண்ணனும்.  கொலைகள் எவ்வளவு, கொள்கைகள் எவ்வளவு, கற்பழிப்பு எவ்வளவு, சாதாரண திருட்டு எவ்வளவு, ஜேப்படி கேஸ்கள் எவ்வளவு... இத்யாதி இத்யாதிகள்.

ஃபோன் கனெக்‌ஷன்ஸ் கிடைத்தவுடன் கையில் அகப்பட்ட பேப்பர்களில் அவசரம் அவசரமாக எழுதிய குறிப்புகள்.  பரந்தாமன் எழுதியதையும் அவள் எழுதியதையும் வைத்து ஒரு ஷேப்புக்கு கொண்டு வர வேண்டும்.

சில விவரங்கள் அவசரமாக எழுதியதில் அவர்கள் கையெழுத்துக்களை அவர்களே படிக்க முடியாமல் இருந்தன.  அவைகளை மீண்டும் உறுதி செய்துவிட்டு கம்ப்பைலேஷன் ஒர்க்கை ஆரம்பித்தார்கள்.

ப்ரேமா அவள் சீட் அருகே வந்தாள்.

'என்ன அமுதா, படு பிஸியா?'

'ம்ம்ம்... பார்ரத்தா எப்படி தெரியுது?  மண்ட காயுது.'

'நான் கொஞ்சம் ஃப்ரீதான் இன்னிக்கு.  நான் வேணா கொஞ்சம் ஹெல்ப் பண்ணட்டுமா?'

'தெய்வமே!  கோடி புண்ணியம்மா உனக்கு.  லஞ்சுக்கு பிறகு வரயா?  அதுக்குள்ள கம்ப்பைலேஷன ஒரு ஷேப்புல வெச்சுடறோம்.'

'லஞ்சுக்கு சேர்ந்து சாப்பிட வருவியா?'

'இல்லடா, நீங்க சாப்பிடுங்க.  நான் சீட்டுலேயே சாப்பிட்டுக்கறேன்.'

ப்ரியா சென்றபின் பரந்தாமன் ஒரு கோரிக்கை வைத்தார்.

'மேடம், அவங்க வந்தோண்ண நான் என் ஸீட் ஒர்க்கை ஒரு மணி நேரம் பார்த்துட்டு வரட்டுமா, இஃப் யூ டோண்ட் மைண்ட்.'

'ஒரு மணி நேரத்துக்குள்ள வந்துடுவீங்க இல்ல.  சீக்கிரம் முடிச்சுட்டா நாம ஸன்டே வர வேண்டியிருக்காது, அதான்.'

லஞ்ச் முடித்துவிட்டு ப்ரியாவோடு வேலையை துவக்கினாள் அமுதா.  இடையில் ப்ரியா அமுதாவிடம் சாரி கேட்டாள்.

'எதுக்கு சாரி?'

'நான் அவசரப்பட்டு அரவி வந்த விஷயத்தை எல்லார் முன்னாடி கேட்டுட்டேன்.  எல்லாரும் உன்ன கலாட்டா பண்றதுக்கு நான் காரணமாயிட்டேன்.  நேத்திலேந்து எனக்கு உறுத்தலாவே இருந்தது.'

'அதனால என்ன ப்ரியா.  நான் தப்பா எடுத்துக்கல.  நான்தான் எல்லார் கிட்டேயும் அவர் ஏன் வந்தார்னு சொல்லிட்டேனே.  டோண்ட் ஒர்ரி.'

'அது கிடக்கட்டும்.  அரவிந்தை உனக்கு எப்படிடா தெரியும்?'

கேட்டுவிட்டு உன்னிப்பாக ப்ரியாவை கவனிக்க துவங்கினாள்.

'தாம்பரத்தில் இருக்கேன்னு தெரியுமோன்னோ உனக்கு?  எங்காத்துக்கு பக்கத்துல தான் அரவி ஆம் இருக்கு.  ரொம்ப நல்ல பையன்.  அந்த ஏரியாவில உள்ள கல்யாணமாகாத பொண்களுக்கெல்லாம் இவன் மேல ஒரு kக்ரேஸுனா பார்த்துக்கோயேன்.'

அமுதா வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டாள்.  'இவன் அட்ராக்டிவா இருந்ததால தானே நானே இவனுக்கு உதவி செய்யப்போனோம் அன்னிக்கி.'

'நன்னா கிரிக்கெட் ஆடுவானாம். சினிமா பாட்டெல்லாம் அருமையா பாடுவான்.   ரொம்ப ஜோவியல் வேற.  எல்லார் கிட்டேயும் கல கலன்னு  பேசுவான். ரொம்ப டீஸன்ட் பிஹேவியர்.'

'போதும் போதும் நிறுத்து.  விட்டா ஒரு பாராட்டு விழாவே நடத்துவ போல இருக்கே?'

அமுதாவின் மனதுக்குள் ஒரு முக்கியமான கேள்வி கேட்க வேண்டும் என்ற உந்துதல் இருந்து கொண்டேதான் இருந்தது ப்ரியா அவனைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது.

அவனுடைய பர்ஸில் அவள் பார்த்த அந்தப் பெண் யாரென்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்காதா என்ன?  ஆனால், நேராக அப்படி கேட்டு விடமுடியுமா?  வேறு மாதிரி கேட்க வேண்டும்.

'அரவிக்கு கல்யாணம் ஆயிடுத்தா?'

'அதை ஏன் கேட்கிற? அது ஒரு பெரிய கதை.  பாவம்.'

அமுதாவின் புருவங்கள் சற்று தூக்கிக் கொண்டன.  ஆர்வம் அதிகரித்தது.  'பாவம்னு முடித்திருக்கிறாளே?  அப்படி என்ன கஷ்டம் அவனுக்கு?  லவ் ஃபெயிலியர்?  சாதாரணமா கேட்கப் போய் பாவம்னு சொல்ற அளவுக்கு குண்ட தூக்கிப் போடறாளே?'

அந்த சமயம் ப்ரியாவின் செக்‌ஷனிலிருந்து ஒருவர் வந்து அவளை ஸி.ஏ.ஓ. கூப்பிடுவதாக கூறினார்.

'பரவாயில்ல ப்ரியா.  நீ போயிட்டு வா.  பரந்தாமன் இப்ப வந்துடுவார்.  நான் பார்த்துக்கறேன்.'

அவள் நகர்ந்த பின் கொஞ்சம் நடந்து ஒரு டீ சாப்பிட்டு விட்டு வந்து வேலை பார்க்கலாம் என்று நினைத்தால் அமுதா.

'அடடா இன்னிக்கும் சஸ்பென்ஸ் தொடருதே?'

கேண்டீனுக்கு வந்தும் அதே சிந்தனைகள்.  அன்று அவனைப் பார்த்ததிலிருந்து இப்போது ப்ரியாவோடு பேசிக் கொண்டிருந்த்து வரை.

'நன்னா கிரிக்கெட் ஆடுவானாம், நன்னா பாடுவானாம், நன்னா பழகுவானாம், பொண்ணுங்களுக்கெல்லாம் இவன் மேல ஒரே kக்ரேஸாம், ரொம்ப டீஸன்ட்டாம்.  வேற ஏதாவது இருக்கா என்ன?'

'ச்சான்ஸ் கெடச்சா இந்த ப்ரியாவே கடத்திண்டு போயிடுவா போல இருக்கே!'

இப்படி கூட சிந்தனை.  மனம் இருக்கிறதே அது பருவத்தில் வில்லங்கமா சிந்திக்க தொலைக்கும்.

'ச்சே... ப்ரியாவுக்குதான் கல்யாணம் ஆயிடுத்தே.  என்ன சிந்தனை இது.  ஆம் ஐ பிகமிங் மேட் ஆஃப் ஹிம்?'

அவளை அவளை திரும்பிப் பார்க்கிறாள் மனதில்.  'நேற்றைய நான் எங்கே?'

'அழகாய் இருந்தான்.  ஈர்ப்பு இருந்த்தென்னவோ வாஸ்தவம்தான்.  உதவி செஞ்சதும் அப்புறம் வந்த குறும்பும் மனசு தானே தந்தது.  இப்போது ஒரு படியை ஏன் மேலெடுத்து வைக்கிறேன்.  அவனை அவன் அறியாமலேயே ஏன் தேடுகிறேன்?'

'மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.  முடியுமா?  ஏன் முடியாது?'

'நான் என்ன இப்ப தப்பு செஞ்சுட்டேன் பெரிசா?  எதேச்சயாக நிகழ்வுகள் அவனைச் சுற்றி என்னிடத்தில் நடக்கிறது.  நான் என்ன செய்ய?'

அவள் அவளிடம் அவளையும் அறியாமல் இருக்கும் இரு மனங்களோடு பேசியது ஆச்சர்யமாக இருந்தது.

தொடரும்....

No comments:

Post a Comment