ஶ்ரீராம காவியம்
ராமர் கோவில்கள் -33
91)கோவை கணுவாய் ஶ்ரீசீதாராமர் கோவில்...
★சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் அயோத்தியிலிருந்து இரு முனிவர்கள் இந்தப் பகுதிக்கு வந்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான இந்த கணுவாய் மலையின் அடிவாரத்தில் இவ்விடம் இருப்பதாலும் இயற்கையான சோலைகள் சூழப்பெற்ற பகுதியாக இருந்ததாலும் இந்த இடம் அந்த முனிவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
★தாங்கள் தங்கி இருந்த வீட்டில் தினமும் ராமபிரானை தொழுது வந்ததுடன் தியானமும் செய்து வந்தனர். நாளடைவில் சுற்றிஉள்ள பொது மக்களும் பூஜையில் கலந்து கொண்டனர். பூஜையில் வைத்து பூஜிக்க சீதா, இராம, லட்சுமணர் மற்றும் ஆஞ்சனேயரின் விக்ரகங்களைச் செய்ய முடிவெடுத்து ஏற்பாடு செய்தனர். ஐம்பொன்னால் ஆன விக்ரகங்கள் கிடைத்த உடன் ஒரு நல்ல நாளில் சிறிய கோவில் அமைத்து அதில் பிரதிஷ்டை செய்து தினமும் திருமஞ்சனம் ஆகிய பூஜைகளைச் செய்து வந்ததுடன் விஷேசமான தினங்களில் மிகச்சிறப்பாக
பூஜைகளும் செய்துவந்தனர். அந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாக ராமபிரான் விளங்கினார்.
★நாளடைவில் இந்த கோவில் சிறிது சிறிதாக பூஜைகள் குறைந்து சிதிலமடைந்து மோசமான நிலைக்கு வந்தது. நீண்ட நாட்களாக கேட்பாரற்று இருந்தது. அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் ஒன்றுகூடி இந்தக் கோவிலை சீரமைக்க முடிவு செய்து ஊரில் உள்ள பெரியவர்களை சந்தித்து தங்கள் கோரிக்கை பற்றி தெரிவித்தனர். நல்ல காரியம் என்பதால் அந்த ஊர் பெரியவர்களும் இசைவு தெரிவித்து திருப்பணியைத் துவங்க முடிவுசெய்தனர். இளைஞர்கள் பொருளாதார ரீதியில் உதவி ஏதும் செய்ய முடியாவிட்டாலும் தங்கள் உடல் உழைப்பை நல்குவதாக உறுதியளித்தனர். வசதி படைத்தோர் நன்கொடைகள் வாரி வழங்கினர். இதுவரை இக்கோவிலில் உற்சவ திருமேனியை வைத்துத்தான் பூஜித்து வந்தனர்.
★புதிய கோவில் நிர்மானம் செய்யும் போது கல்லால் ஆன சிலைகளை நிறுவ முடிவு செய்து, அத்திருமேனிகள் செய்ய ஆர்டர் கொடுத்தனர். கோயில் வடிவமைப்பை தயார் செய்து ஒரு நல்ல நாளில் பூமி பூஜை போடப் பட்டது. சுமார் 7 மாத கால கோவில் கட்டிடப் பணிகள் திட்டமிட்டபடி நன்கு நிறைவு பெற்றது. சிலைகளை மந்திர பிரதிஷ்டை செய்து வேத விற்பனர்களைக் கொண்டு 26.1.2015 அன்று சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தது.
★புராதனமான இந்தத் திருக்கோயிலின் காலத்தை கணிக்க எண்ணி இருந்தனர். ஒரு முறை உற்சவர் சிலையின் பீடத்தில் உள்ள குறைபாட்டை சரிசெய்ய வயது முதிர்ந்த சிற்பியிடம் ஒப்படைத்தனர். உற்சவரின் பின்பக்க பீடத்தில் “வாஹி” என்ற பெயர் பொறிக்கப் பட்டிருந்தது. மேலும் சிலையின் அமைப்பை ஆராய்ந்து இச்சிலை 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிவித்தார். மேலும் ஆரம்ப காலந்தொட்டே கோவிலை நிர்வகித்து வரும் குடும்பத்தார் 6 தலை முறைகளுக்கு முன்பிருந்தே கோவில் இருப்பதை உறுதி படுத்தினர். இதிலிருந்து கோவில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான ஒரு கோவில் என்பது உறுதியாக தெரிகின்றது.
★இத்திருக்கோவில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. முன்மண்டபம் , மகாமண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறையுடன் கூடிய ஒரு அமைப்பில் அமைத்து உள்ளனர். முன்மண்டபத்தில் இருந்து மகா மண்டபத்தை அடைந்தால் மையத்தில் மூலவரின் எதிரே தனது இருகரங்களை கூப்பிய நிலையில் நின்ற கோலத்தில் உள்ள ஶ்ரீஅனுமன் சேவை சாதிக்கின்றார். மகாமண்டப தென்மேற்குப் பகுதியில் தும்பிக்கை ஆழ்வார் அருள் புரிகின்றார். அர்த்த மண்டப நுழைவாயிலின் முன் ஜெயன் விஜயன் ஆகியோர் மிகவும் கம்பீரமாக நின்ற கோலத்தில் காவல் புரிகின்றனர்.
★கருவறையில் லட்சுமணன், ராமர் சீதா மூவரும் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். மூலத் திருமேனிகளின் கனிவான பார்வையில் புன்னகை ததும்பும் முகத்தை மலர் அலங்காரத்தில் தரிசிப்பது ஒரு பேரானந்தமே. மூலவர் அருகே பல நூறு வருடங்கள் பூஜிக்கப்பட்ட உற்சவ திருமேனிகள் சேவை சாதிக்கின்றனர்.
★கருவறைமீது ஶ்ரீநரசிம்மர், பெருமாளுடன் கூடிய சுதைச் சிற்பங்களுடன் கூடிய ஒரு விமானத்தை நிர்மானித்து உள்ளனர். அங்குள்ள மகா மண்டபத்தின்மேல் நான்கு மூலைகளிலும் ஆஞ்சநேயர் சுதைச் சிற்பங்கள் நன்கு அலங்கரிக்கின்றன.
★இக்கோயிலில் அனைத்து சனிக்கிழமைகள் தோறும திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் முழுதும் சிறப்பு பூஜைகள் உண்டு. புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் விஷேச தினங்களாகும். அதுபோல நவராத்திரியின் போது கொலு வைக்கப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெறும். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி மூன்று தினங்கள் விழா கொண்டாடப்படும் முதல்நாள் காலையில் அருகில் உள்ள ஈசன் கோவிலிருந்து தேன், பால், பன்னீர், தீர்த்தம், சந்தனம் நிரப்பிய குடங்களை எடுத்து வந்து யாகசாலையில் வைத்து பூஜித்தபின் சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடைபெறும்.
★மாலையில் அதே சிவன் கோவிலில் இருந்து சீர்வரிசைப் பொருட்களை திருவீதி உலாவாக எடுத்து வந்து சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இரண்டாம் நாள் தங்க கவச அலங்காரத்தில் சுவாமி சேவை சாதிப்பார். மூன்றாம்நாள் மஞ்சள் நீர் திருவிழா. இரண்டாம் நாள் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். இத்தலத்தில் வருடத்திருவிழாக்களில் முதன்மையானது ராமபிரான் பிறந்த தினமான “ராமநவமி” விழாவாகும். அன்று அதிகாலை மூலவருக்கும் உற்சவருக்கும் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதிப்பர். அன்று நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு சுவாமியிடம் வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறுவதாக பரவலாக சொல்லப்படுகிறது. எனவே அன்று அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
★திருமணத் தடை, குழந்தை பேறு ஆகியவற்றுக்காக பிரார்த்தனை செய்து பலன் பெற்றோர். ஏராளம் என்று கூறுகின்றனர். திருமணத் தடைக்கு பூஜைப் பொருட்கள் உடன் ஜாதகத்தின் நகலை சுவாமியின் பாதத்தில் வைத்து 9 சனிக்கிழமைகளில் வேண்டிவர விரைவில் திருமணம் நடைபெற்று விடுகிறதாம். அவ்வாறே குழந்தைப்பேறும். பின்னர்
சீதா ராமருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.
★காலை 7.30 முதல் 9.00 மணி வரை. மாலை 6.30 முதல் 7.30 மணி வரை. சனிக்கிழமை காலை 7.30 முதல் 11.00 மணி வரை தரிசன நேரம் ஆகும். அருள்மிகு சீதா ராமர் திருக்கோவில் கணுவாய் - 641 108 கோயம்புத்துார்.
போன்: +91 99430 41089,
92453 43356
★கோவை தடாகம் பிரதான சாலையில் உள்ள கணுவாய் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த ஶ்ரீராமர் திருத்தலம். பஸ் நிறுத்தத்திலிருந்து 1/2 கி.மீ. நடைதூரம்தான். ரயில் நிலையத்திலிருந்து தடம்எண் 11 மூலமும் காந்திபுரத்தில் இருந்து தடம் எண் 78 மூலமும் கோவிலை அடையலாம்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
நாளை....................
No comments:
Post a Comment