Friday, March 12, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −15

 (தெரிந்து கொள்ளலாமா?..)

தர்ம சாஸ்திரம் பகுதி −15

(ஆசிரியர் − திரு. Vராஜகோபால கனபாடிகள்.)


201. விக்ரஹங்களுக்கும், படங்களுக்கும் மஞ்சள் குங்குமம் வைக்கும்போது ஆட்காட்டிவிரலைப் பயன்படுத்தக்கூடாது.

மோதிர விரலையே உபயோகிக்க வேண்டும்.

202. பொங்கலன்று செய்கின்ற சூரியபூஜையில் அர்ச்சனைக்கு வில்வ இலைகளைப் பயன்படுத்தக் கூடாது.

203. அர்ச்சனைக்குப் பயன்படுத்துகின்ற பூக்குடலையை மடியில் வைத்துக்கொண்டு பூஜை செய்யக் கூடாது.

இடுப்பிற்குக் கீழுள்ள பகுதி தூய்மையற்றதாக சாஸ்திரம் கூறுகிறது.

204. அர்ச்சனைக்குரிய புஷ்பங்களை இடது கையால் எடுத்து, வலது கையால் இடக்கூடாது.

205. நவராத்திரி தினங்களில் அம்பாளுக்குச் செய்கின்ற பூஜைகளை இரவு ஒன்பது மணிக்கு முன்பாக முடித்துவிட வேண்டும்.

206. எருக்கு, ஊமத்தம் பூக்களைக் கொண்டு மஹாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்யக் கூடாது.

207. சந்தன கல்லில் அரைக்கின்ற சந்தனத்தை கட்டை விரலால் சேகரிக்கக் கூடாது. நகம் படாமல், மீதியுள்ள வலது கை விரல்களால்  சேகரிக்கலாம்.

208.இறந்து போன முன்னோர்களின் படங்களை பூஜையறையில் வைக்கக் கூடாது. 

209. பூஜைக்கு உபயோகப்படுத்தவுள்ள 

நீர், பால், தேன், தயிர், சந்தனம் ஆகியவற்றில் தூசு விழுந்தால் நகம்படாமல் வலதுகை விரல்களைக் கொண்டு எடுக்க வேண்டும்..

நகம் தீண்டிய பொருட்கள் பூஜைக்கு உகந்ததல்ல.

210. திருக்கோயில்களில் புஷ்பிக்கின்ற பூக்களை வீட்டிற்கு எடுத்துவந்து, அவற்றால் நம்வீடுகளில் பூஜை செய்யக்கூடாது.

211. ஹோமத்தீயில், அக்னியின் வெம்மையைக் குறைப்பதற்காக ஈர சமித்து குச்சிகளை இடக்கூடாது.

அக்னியும், தண்ணீரும் எதிர்எதிர் துருவங்களாக இருப்பதால், ஒரே சமயத்தில் உலர்ந்த மற்றும் ஈர சமித்து குச்சிகளை இடுவது, வீடுகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

212. ஹோமத் தீ நன்றாக எரிவதற்காக, அதில் கற்பூரத்தை இடக்கூடாது. அவ்வாறு செய்தால் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு தோன்றும்.

213. இரும்பினால் செய்யப்பட்ட ஹோமகுண்டங்களை வைத்து  ஹோமங்களைச் செய்யக் கூடாது. 

214. கை தவறுதலாக ஹோமகுண்டத்திற்கு வெளியே விழுந்த பொருட்களை எடுத்து மீண்டும் ஹோமகுண்டத்தில் இடக் கூடாது. வெளியே விழுந்த பொருள் வேறொரு தேவதைக்கு உரியதாக ஆகிவிடுவதால், இது தவிர்க்கப்பட வேண்டும்.

215. ஹோமம் செய்கின்றபோது கண்எரிச்சலைத் தவிர்ப்பதற்காகக் கண்களை மூடிக்கொண்டு ஹோமம் செய்யக்கூடாது.

(வளரும்..)

No comments:

Post a Comment