Monday, June 15, 2020

FIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்!

பெரியவா அனுக்ரகம்
 ---------------------------------

ஒரு கல்யாண வீடு. நாதஸ்வரம் தடபுடலாக மேளதாளத்துடன் வாசிக்கும் சப்தம்,  குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு விளையாடும் சப்தம்; காரண,கார்யமே  இல்லாமல் சும்மாவாவது வேகவேகமாக நடந்து கொண்டிருக்கும் உறவும் நட்பும்  என்று களைகட்டிக் கொண்டிருந்தது.

இதோ பையன் காஸி யாத்ரை  கிளம்பினான், பெண்ணைப் பெற்றவர் அவன் காதில் ஏதோ குசுகுசுவென்று சொன்னார்,  திரும்பி வந்தான்; பெண்ணும் பையனும் ஊஞ்சல் ஆனது, த்ருஷ்டி என்று  நாலாபக்கமும் பொத்து பொத்தென்று கலர்சாத உருண்டைகள் வீசப்பட்டன; பையனும்  பெண்ணும் கையைக் கோர்த்துக் கொண்டு மணமேடையில் வந்து உட்கார்ந்தார்கள்.

திடீரென்று அத்தனை சந்தோஷமும் ஏக காலத்தில் நின்றது! ஒரே பரபரப்பு! ஏன் ?

உட்கார்ந்திருந்த கல்யாணப்பெண் அப்படியே மயங்கிச் சாய்ந்தாள்! கூடவே fits  வந்து, கையும் காலும் இழுத்துக் கொள்ள, வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது!  பாவம்! பெற்றவர்களுக்கு உயிரே போய்விட்டது! இரண்டு குடும்பமும் தவித்தன.  யாரோ சொந்தக்கார டாக்டர் உடனே வந்து உள்ளே தூக்கிக்கொண்டு போய் முதலுதவி  பண்ணினார்.
 இனி என்ன செய்வது? கல்யாணம் நடக்குமா? ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

பகவானே! என்ன சோதனை? இப்போதுதான் முதல் முறையாக பெண்ணுக்கு fits வந்திருக்கிறது. அவளுக்கு எதிர்காலமே இனி இல்லாமல் போய்விடுமோ?
 இரண்டு குடும்பமுமே பெரியவாளிடம் பக்தி பூண்ட குடும்பம். பத்திரிகை  அடித்ததும் முதலில் பெரியவாளிடம் சமர்ப்பித்து அவருடைய அனுக்ரஹத்தோடுதான்  நடக்கிறது. பின் ஏன் இப்படி?

கல்யாணம் பண்ணி வைத்துக் கொண்டிருந்த  "ஆத்து வாத்யார்" [வைதீகர்] அம்ருத தாரை மாதிரி ஒரு யோஜனை சொல்லி, எல்லார்  வயிற்றிலும் பாலை வார்த்தார்!

" இங்க பாருங்கோ! யாரும்  அச்சான்யப்படவேண்டாம்! லக்னத்துக்கு இன்னும் நெறைய டைம் இருக்கு. நேக்கு  என்ன தோண்றதுன்னா... நம்ம மாதிரி திக்கத்தவாளுக்கெல்லாம் கண்கண்ட தெய்வம்  பெரியவாதான்! பேசாம, பெரியவாகிட்ட விஷயத்தை சொல்லச் சொல்லி, என்ன  பண்ணலாம்ன்னு கேளுங்கோ!..அவர் என்ன சொல்றாரோ, அந்த உத்தரவுப்படி  நடப்போம்.." என்றதும், உடனே மடத்தின் மானேஜருக்கு விஷயத்தைச் சொல்லி,  அவரும் உடனேயே பெரியவாளிடம் சொன்னார்.

கொஞ்ச நேரம் மெளனமாக இருந்த  பெரியவா, "பொண்ணாத்துக்காராளுக்கு குலதெய்வம்.. ஒரு மஹமாயி! அவளுக்கு  ப்ரார்த்தனை பண்ணிண்டு, ஒரு வேப்பிலைக் கொத்தை எடுத்துப் பொண்ணோட தலேல  சொருகணும்...அனேகமா செரியாப் போய்டும்.."

உடனே மானேஜர் போனில்  விஷயத்தை சொன்னதும், பெண்ணின் அம்மா, குலதெய்வமான மகமாயியை வேண்டிக்கொண்டு,  வேப்பிலைக் கொத்தை பெண்ணின் தலையில் சொருகினாள். ஆச்சர்யமாக மயங்கிக்  கிடந்த பெண்,உடனேயே பளிச்சென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள்!

பையன் குடும்பத்தார், பெரியவாளுடைய உண்மையான பக்தர்கள் என்பதால், எந்தவித  ஆக்ஷேபணையோ, முகச்சுளிப்போயில்லாமல் உடனேயே பெண்ணையும், மாப்பிள்ளையையும்  மணமேடையில் உட்கார வைத்து, குறித்த நேரத்தில் நல்லபடியாக கல்யாணம்  முடிந்தது. சேஷ ஹோமம் ஆனதும், காஞ்சிபுரம் நோக்கி இருவீட்டாரும்  ஓடினார்கள்.

"பெரியவா அனுக்ரஹத்தால கல்யாணம் நன்னா நடந்தது..." நன்றிக் கண்ணீரோடு பெற்றவர்கள் கூறினார்கள்.

"மஹமாயி அனுக்ரஹத்தால...ன்னு சொல்லு!..." புன்னகைத்தார் பெரியவா.

"வந்து.....பொண்ணுக்கு இப்டி fits வந்துடுத்தே பெரியவா! ..." அப்பா இழுத்தார்.

"FIT ...ன்னு சொல்லு!.." சமத்காரமாக பெரியவா சிரித்துக் கொண்டே  சொல்லிவிட்டு, "க்ஷேமமா இருப்பா!" என்று திருக்கரங்களைத் தூக்கி ஆசீர்வாதம்  பண்ணினார். இது போறுமே !

Fits வந்தது, தெய்வ குத்தம்; FIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்!

 ஹர ஹர சங்கர  ஜெய ஜெய சங்கர🙏🙏🙏

No comments:

Post a Comment