Monday, June 15, 2020

அப்பா எப்டியிருக்கார்

பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும் அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில் பகவானின் திருவடி பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும் ஸ்ரீ மஹா பெரியவா தர்மமே தெரியல!

ஸ்ரீ மஹா பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு பக்தர் வந்தார். கூட்டம் அதிகம் இல்லை.
"அப்பா எப்டியிருக்கார்?"...
"அப்பாக்கு ரொம்ப ஒடம்பு முடிலே பெரியவா... ப்ரக்ஞை இல்லே; அதுனால ஆஸ்பத்ரில சேத்திருக்கேன்..."
மேலே சொல்லு என்பது போல் ஸ்ரீ மஹா பெரியவா உன்னிப்பாக கேட்டார். பணம் பணம்ன்னு ஆஸ்பத்ரில பிடுங்கி எடுக்கறா... ட்ரிப்ஸ் ஏத்தறதுக்கு பணம் ஆக்ஸிஜன் வெக்கறதுக்கு பணம் அதுக்கு இதுக்குன்னு நின்னா ஒக்காந்தா பணம் ஒண்ணு தான் கேட்டுண்டே இருக்கா பெரியவா! ஏகப்பட்ட செலவாயிடுத்து.
"அப்பாவுக்கு என்ன வயஸ்?"
"ஸதாபிஷேகம் ஆய்டுத்து"
"அவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிண்டு வந்துடு! ஆத்துல ஒரு கட்டில்ல அவருக்கு ஸ்ரமும் இல்லாத படி ஸௌகர்யமா படுக்க வை ஜாஸ்தி சூடு இல்லாம வெது வெதுன்னு கஞ்சி பால் இது மாதிரி நீர்க்க குடு அவரோட காதுல விழறா மாதிரி தெனோமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லு ஆத்துல எல்லாருமா பகவன் நாமாவை சொல்லுங்கோ ஆத்மார்த்தமா ஸுஸ்ருஷை பண்ணு இப்படி பண்ணினியானா ஒனக்கும் பணச்செலவு இல்லே! அவரும் கடைசி காலத்தை நிம்மதியா கழிப்பார். மகன் மன த்ருப்தியோடு ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு சென்றார். அவர் போனதும் பக்கத்தில் இருந்தவர்களிடம் ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார்... இப்போல்லாம் யாருக்கும் தர்மமே தெரியறதில்லே! ஒடம்புக்கு கொஞ்....சம் அஸௌகர்யம் வந்துடுத்துன்னா... ஒடனே ஆஸ்பத்ரில சேத்துடறா! வ்யாதிக்கு மருந்து வேணுந்தான்... வாஸ்தவம். ஆனா... அருமருந்து ஒண்ணு இருக்குங்கறதே யாருக்கும் தெரியறதில்லே!...
பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும் அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில் பகவானின் திருவடிப் பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும்.
எனவே உடல் நிலை ஸரியில்லாதவர்களை குறிப்பாக வயஸான நம் பெற்றோர் தாத்தா, பாட்டி போன்றோரை வயஸான காலத்தில் கஞ்சி குடுத்தாலும் அதை அன்போடு குடுத்து பகவானின் நாமத்தை ஸதா கேட்கவோ சொல்லவோ வைத்து அவர்களை நிம்மதியாக வைத்துக் கொள்வதே கடவுளுக்கு மிகவும் பிடித்த கைங்கர்யம்.
அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் வேண்டாம் விதவிதமான உணவு வகைகள் வேண்டாம். உண்மையான அன்போடு ஒரு பத்து நிமிஷமாவது அவர்களுக்காக ஒதுக்கி ஸாப்பிட்டீர்களா? ஏதாவது வேண்டுமா? என்று கேட்பதே அவர்களை மனஸார நம்மை வாழ்த்த வைக்கும். அவர்கள் வாழ்ந்த வீட்டை விட அது குச்சு வீடாக இருந்தாலும் ஸரிதான் தன் மக்களை விட்டு விட்டு வேறு எந்த பெரிய ஆஸ்பத்ரியிலும் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ காஞ்சி காமகோடி சந்த்ரசேகராய!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !ஜய ஜய சங்கர!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர! ஜய ஜய சங்கர!
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர .. ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சங்கர. 

ஸ்ரீ மஹா பெரியவா எனக்கு அபயம் கொடுத்து காத்து ரக்ஷிப்பாய் பரம கருணா மூர்த்தி.

ஸ்ரீ மஹா பெரியவா சரணார விந்தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள். 

பெரியவா சரணம்!
பெரியவா சரணம்!!
பெரியவா சரணம்!!!

No comments:

Post a Comment