Sunday, April 10, 2022

ஐஸ்க்ரீம் ஸாப்படறேளா

 ஐஸ்க்ரீம் ஸாப்படறேளா?..”

“தான் பெற்ற, பெறும் இன்பம்.. பெறுக இவ்வையகம்” இந்த நல்ல வசனத்தை, ஏதோ பெரிய பெரிய கார்யங்களுக்குத்தான், தம்பட்டம் அடித்துக் கொண்டுதான், செய்து காட்ட வேண்டும் என்பதில்லை. யாருக்குமே தெரியாமல் நாம் செய்யும் நல்லதைத்தான், உண்மையிலேயே பகவான் அங்கீகரிக்கிறான்.

காஞ்சிபுரத்தில், பெரியவா சில பாரிஷதர்களுடன் ஸ்ரீமடத்தின் வாஸலில் வந்து நின்று கொண்டிருந்தார். நல்ல வெய்யில் நேரம்! சற்று தள்ளி, ஒரு ஐஸ்க்ரீம் வண்டிக்காரன் நின்று கொண்டிருந்தான். ஒரு சின்ன பெண்குழந்தை, அந்த ஐஸ்க்ரீம்காரனிடம்….

“எனக்கு ஒரு… கப் ஐஸ்…..”

ஐஸ்க்ரீமை வாங்கிக் கொண்டு, அவனிடம் காஸை நீட்டியது. மிகுந்த ஆவலோடு அந்த கப்பை திறந்து, குட்டி ஸ்பூனால் ஐஸ்க்ரீமை நாக்கில் தடவிக் கொள்ள ஆரம்பித்த போதுதான் பெரியவா அங்கே நின்று கொண்டிருப்பதை கவனித்தது!

“தாத்தா !……ஐஸ்க்ரீம் ஸாப்படறேளா?…….”

துளி கூட, விகல்பமே இல்லாமல், தன் கையிலிருந்த ஸ்பூனையும், கப்பையும் பெரியவாளிடம் நீட்டியது. நம்ம குழந்தைதான், மஹா குழந்தையாச்சே!….. சிரித்துக் கொண்டே….

“அப்டீன்னா…. என்னன்னே எனக்கு தெரியாதேம்மா!…. எனக்கு வேணாம்..”

“என்ன தாத்தா நீங்க? கொஞ்சூண்டு ஸாப்டுங்கோ!…”

கல்மிஷம் இல்லாத அந்தக் குழந்தையின் முகம் சுண்டிவிட்டது! தாங்குவாரா தாயுமானஸ்வாமி?……

“நா…..எனக்குத்தான், ஐஸ்க்ரீம் வேண்டான்னேன்!…. நா…. சொல்ற, வேற ரெண்டு கொழந்தேளுக்கு வாங்கித் தரியா?….”

“ஓ!….. தரேனே.!….”

ஸந்தோஷமாக கத்தியது!

அங்கே ஸ்ரீமடத்தின் வாஸலில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீமடத்தின் துப்புரவு தொழிலாளியின் ரெண்டு குழந்தைகளையும் அழைத்தார்.

“இந்தா…. இவாளுக்கு வாங்கிக் குடு…”

ஐஸ்க்ரீம் கையில் கிடைத்ததும், குழந்தைகளின் கண்கள் ஸந்தோஷத்தில் விரிந்தன. மூன்று குழந்தைகளும் ஆனந்தமாக ஐஸ்க்ரீம் ஸாப்பிடுவதை சிரித்துக் கொண்டே கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு, உள்ளே சென்றார் நம் பெரியவா.

இது ரொம்ப சின்ன ஸம்பவம் என்றாலும், பெரிய ஸமத்துவம் போதிக்கப்பட்டிருக்கிறது! பகிர்ந்து உண்டால் கிடைக்கும் ஆனந்தத்தால், பரஸ்பர அன்பு, விட்டுக் குடுக்கும் மனப்பான்மை, பிறநலம் எல்லாமே அன்று அந்த குழந்தைகளின் பிஞ்சு மனஸில், பெரியவாளுடைய வாக்கு மூலம், அழுந்தப் பதிக்கப்பட்டது.

அதோடு அந்த சின்னக் குழந்தைக்கு, பெரியவாளும், பெரியவாளின் வாக்கும் ஸமமாகவே இருந்தது! நாமும் இன்றும் கூட, பெரியவாளின் வாக்குப்படி நடக்க நம்மாலான யத்தனத்தை செய்தாலே, பெரியவா நம்முடனேயே இருப்பதை நிச்சயமாக உணரலாம் !

Jaya Jaya Shankara hare hare shankara

No comments:

Post a Comment