Sunday, April 10, 2022

சங்கராம்ருதம் - 117

 சங்கராம்ருதம் - 117

(வாங்கின சந்தோஷத்துல சாளக்ராமத்தை வேகமா ஒரு கடி கடிச்சுது.குழந்தை, பல்லு வலிச்சதும்,அது பழமில்லைன்னு தெரிஞ்சுண்டு திருப்பிக் குடுத்துட்டு விளையாட ஓடிடுத்து.

சின்னச் செடியா,மரத்தை நடறச்சே யாரும் அது நேரா முளைக்குமா,சாய்வா முளைக்குமான்னு பார்க்க மாட்டா!

ஒரு கதை சொல்லி மகத்தான அறிவுரை தந்த ஸ்ரீ மஹா பெரியவா)

"சின்னப்பையன் பூஜை செய்ய சிபாரிசு செய்த ஸ்ரீ மஹா பெரியவா"

ஸ்ரீ மஹா பெரியவா பூஜை,புனஸ்காரம்,ஆசாரம், அனுஷ்டானம்னு எல்லா விஷ்யத்தைப் பத்தியும் விவாதிக்கவும், வேத, புராணாத்தைப் பத்தி  விளக்கங்கள் சொல்லவும், மத்தவா தெரிஞ்சுக்கவும் வித்வத் சபைகளை திடீர் திடீர்னு கூட்டச் சொல்வார்.

அப்படி ஒரு சமயம் வித்வத் சபை நடந்துண்டு இருக்கறச்சே,அதைப் பார்க்கறதுக்காக தன் பையனோட வந்திருந்தார் ஒரு பக்தர்.அவர் பையனுக்கு அஞ்சு ஆறு வயசு இருக்கும். சின்னக் குழந்தைகளுக்கே உரிய குறுகுறுப்பு இருந்தாலும்,அளவுக்கு மீறி சுட்டித்தனம் பண்ணாம, அமைதியா அப்பாகூடயே இருந்து அவனும் எல்லாத்தையும் கேட்டுண்டு இருந்தான்.

பகவானுக்கு ஆராதனை செய்யறச்சே ஆசாரம் மீறக்கூடாது.. ரொம்ப சிரத்தையா பண்ணணும்..இப்படியெல்லாம் பலரும், பரமாசார்யா முன்னிலையில சொல்லிண்டு இருந்தா.

அதையெல்லாம் கேட்டுண்டு இருந்த அந்த பக்தருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கு.

வித்வத்சபையோட இடைவேளியில பரமாசார்யா எல்லாருக்கும் தரிசனம் குடுத்துண்டு இருந்த சமயத்துல அவரை நமஸ்காரம் பண்ணின அந்த பக்தர், தன்னோட சந்தேகத்தை அவர்கிட்டேயே கேட்டார்.

"பெரியவா எனக்கு ஒரு சந்தேகம். நான் தெனமும் பூஜை செய்யறதைப் பார்த்துட்டு எம் புள்ளையும் பூஜை செய்யணும்கறான். சமீபத்துல கொஞ்சநாளா, ஏதாவது புஸ்தகத்துலயோ,பேப்பர்லயோ சுவாமி படம் ஏதாவது இருந்தா, அதைக் கிழிச்சு எடுத்து வைச்சுண்டு,கலர் பென்சிலால் பொட்டு வைச்சு, கையில கிடைக்கற பேப்பரை பூ'ன்னு சொல்லிக் கிழிச்சுப் போட்டு விளையாட்டா பூஜை பண்றான்.

இங்கே எல்லாரும் பேசினதைக் கேட்டதும், இவன் சிரத்தை இல்லாம பூஜை பண்ணி பாவத்தை சேர்த்துக்கறானோன்னு தோணறது. இவ்வளவு நாளா கண்டிக்காம இருந்துட்டேன். இதனால் ஏதாவது தோஷம் வந்துடுமோன்னு பயமா இருக்கு!" என்று சொன்னார்.

அமைதியா கேட்டுண்ட ஸ்ரீ மஹா பெரியவா."குழந்தே,உன் பேர் என்ன?' அப்படின்னு அந்தச் சிறுவன்கிட்டே கேட்டார்.

"எம்.பிச்சுமணி!" சொன்னவனை வாத்ஸல்யமாகப் பார்த்தார்,

ஸ்ரீ மஹா பெரியவா. "ஒனக்கு உம்மாச்சிக்கு பூஜை  செய்யப்பிடிக்குமோ?" என்று கேட்டார்.

"ஓ...ரொம்ப பிடிக்கும்.அப்பா செய்யற மாதிரியே நானும் செய்யணும்னு ஆசை...ஆனா,அப்பாதான் சம்மதிக்க மாட்டேங்கறார்!" அப்பாவியாகச் சொன்ன சிறுவன் கையில் கொஞ்சம் கல்கண்டைக் குடுத்தார். பரமாசார்யா.

"நீ ஒண்ணும் கவலைப்படாதே...நான் உன் தகப்பனார்கிட்டே ஒனக்காக ரெகமண்ட் பண்றேன்!" சொன்னவர் பக்தரின் பக்கம் பார்வையை நகர்த்தினார்.

"ஒனக்கு ஒரு கதை சொல்றேன்.கவனமாகக் கேளு

பழைய காலத்துல ஒரு பாட்டி சாளக்ராமம் வைச்சு பூஜை பண்ணிண்டு இருந்தாளாம். அவளோட பேரன் அதை வேடிக்கை பார்த்துண்டு இருந்தானாம்.

ஒரு நாள், குழந்தையோட தகப்பனார்,குண்டுகுண்டா கொஞ்சம் நவாப்பழம் வாங்கிண்டு வந்தாராம். அதுல கொஞ்சத்தை குழந்தைக்கும் குடுத்தாராம்.

நவாப்பழத்தை அப்போதான் மொதமொதலா பார்த்த குழந்தை அதை ரசிச்சு,ருசிச்சு தின்னுதாம். அடுத்த நாள் வழக்கம்போல பாட்டி பூஜை பண்ணறச்சே,சாளக்ராமத்தைப் பார்த்த குழந்தைக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்துடுத்தாம்.

'இது நாம தின்ன நவாப் பழம் மாதிரியே பெருசா இருக்கே. இதுக்கு ஏன் பாட்டி பூஜையெல்லாம் பண்ணறா?ன்னு தோணித்தாம். அதை ஒடனே பாட்டிகிட்டே கேட்டிருக்கான்

குழந்தை. பாட்டி, சாளக்ராமம்னா என்ன, அதை ஏன் பூஜை செய்யணும்னெல்லாம் சொல்லியிருக்கா. ஆனா,குழந்தைக்கு அதெல்லாம் முழுசா புரியலை. அதனால, "நீ சொல்றதை நான் நம்ப மாட்டேன். அதை எங்கிட்ட குடு.நான் கடிச்சுப் பார்த்து அது நவாப் பழமா? இல்லையான்னு தெரிஞ்சுக்கறேன்'னு அடம்பிடிக்க ஆரம்பிச்சுடுத்து.

எவ்வளவோ சொல்லிப் பார்த்தா பாட்டி. குழந்தை சமாதானமாகலை. இதுவும் பகவானோட லீலைன்னு நினைச்சுண்டு, " இதோபாரு, ஒரே ஒருதரம்தான் கடிச்சுப் பார்க்கணும்!" அப்படின்னு சொல்லி அதைக் குடுத்திருக்கா.

வாங்கின சந்தோஷத்துல சாளக்ராமத்தை வேகமா ஒரு கடி கடிச்சுது.குழந்தை, பல்லு வலிச்சதும்,அது பழமில்லைன்னு தெரிஞ்சுண்டு திருப்பிக் குடுத்துட்டு விளையாட ஓடிடுத்து.

அதேகுழந்தை வளர்ந்து பெரியவனானதும் சாளக்ராமத்தைப் பார்த்தான். அதுக்கு பூஜை செய்யறதைப் பார்த்தான். இப்போ அவனுக்குப் பழைய விஷயம் ஞாபகம் வருது. அட்டா அன்னிக்கு நாம சுவாமியோட திருமூர்த்தத்தை தெரியாமக் கடிச்சுட்டோம்னு வருத்தப்பட்டான்.

இப்போ இந்தக் கதையில் வந்த குழந்தைக்குப் பாவம் உண்டா?

நிச்சயமா கிடையாது.பகவானோட ருசியைப் பார்த்ததாலதான் பெரியவனானதும் தான் சின்ன வயசுல செஞ்சதுக்காக வருத்தப்படணும்னு அவனுக்குத் தோணியிருக்கு. அந்த எண்ணம் வந்துட்டாலே போதும்.சின்ன வயசுல தெரியாமப் பண்ணின பாவம் எல்லாம் போயிடும்.

சின்னச் செடியா,மரத்தை நடறச்சே யாரும் அது நேரா முளைக்குமா,சாய்வா முளைக்குமான்னு பார்க்க மாட்டா.

நன்னா தழைச்சு வரணும்னு மட்டும்தான் நினைப்பா.அப்புறம் வேர்விட்டு, கிளைவிட்டு வளர வளர படிப்படியா செதுக்கி எடத்துக்கு ஏத்தபடி வளர்த்துப்பா.அப்படித்தான் பக்தியையும் சின்னக் குழந்தையா இருக்கறச்சே மனசுல வெதைச்சுடணும்.

அதுல, ரூல்ஸ் எல்லாம் சொல்லி பயமுறுத்தக் கூடாது.

வளர வளர அவாளே ரெகுலரைஸ் பண்ணி, ரூல்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுடுவா.

ஒம் புள்ளைக்கு பால்யத்துலயே பகவான் மேல பக்தி வந்திருக்கு.அவனை அவன் போக்குல விடு. அவன் தெரியாமச் செய்யறதால எந்தப் பாவமும் வந்துடாது!"

No comments:

Post a Comment