Thursday, July 22, 2021

பஞ்ச துவாரகா பயணம் பகுதி 16

 பஞ்ச துவாரகா பயணம் பகுதி 16

(பிராச்சி)

சோமநாத்தில் இருந்து சுமார் 22  கி.மீ தூரத்தில் குஜராத் காசி என்றழைக்கப்படும் இப்புண்ணியத் தலம் அமைந்துள்ளது. “ஏக் பார் பிராச்சி சௌ பார் காசி” அதாவது ஒரு தடவை பிராச்சி செல்வது நூறு தடவை காசி செல்வதற்கு சமம்“  என்பது இவர்களின் நம்பிக்கை. மஹா பாரதப் போருக்குக் பிறகு கௌரவர்களுக்கு பாண்டவர்கள் இத்தலத்தில்தான்  நீத்தார் காரியம் செய்தனர். எனவே  பித்ரு தர்ப்பணம் அளிப்பதற்கு உகந்த தலம். கயா செல்ல முடியாதவர்கள் இத்தலத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அது கயா சென்றதற்கு சமம். கங்கை, யமுனை, காசி பிராச்சி ஆகியவை முக்தி தலங்கள்  என்பது இவர்கள் ஐதீகம்.

இத்தலத்தின் சிறப்பு இதன் ஆலமரம். இம்மரத்தை “பிராச்சி பிப்லா“ என்று இவர்கள் அழைக்கின்றனர். ஒரு தடவை ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களைத் தேடிக்கொண்டு இத்தலம் வந்த போது இம்மரத்தினடியில் அமர்ந்து உத்தவருக்கு பாகவதத்தின் இரகசியார்த்தங்களை உபதேசித்தாராம். 

நாசிக்கின் பஞ்சவடி ஆலமரங்கள், அலகாபாத்தின் அக்ஷய வடம்,  பிருந்தாவனத்தின் பம்சி வடம், உஜ்ஜயினியின் சித்த வடம் மற்றும் கயாவின் போதிமரம்  போன்று  பிராச்சி வடத்திற்கும் தனி சிறப்பு உள்ளது. இந்த ஆலமரம் "மோக்ஷவாலி பீபல் பேட் "அதாவது "முக்தியளிக்கும்  ஆலமரம்" என்றும் அழைக்கப்படுகின்றது.

இங்கு நீத்தார் காரியம் செய்வதும் மிகவும் எளிது. ஒரு தாமிர சொம்பில் தண்ணீர் வைத்துக் கொண்டு சங்கல்பம் செய்து வைக்கின்றனர். பின்னர் அத்தண்ணீரை ஆலமரத்தின் மேல் ஊற்றச் சொல்கின்றனர். அவ்வளவுதான் முன்னோர்கள் அனைவரும் மோட்சம் அடைகின்றனர் என்பது ஐதீகம்.

நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது ஆலமரம். வண்டியில் இருந்து இறங்கியவுடன் பிராச்சி பிப்லா என்ற பெயர் பலகையை காணலாம். சுற்றிலும் கருங்குரங்குகள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தன.  ஆல மரத்திலும் நிறைய குரங்குகள் தாவிக்கொண்டிருந்தன. மரத்தின் அடியில் ஒரு  வயதான பண்டிட் நின்று கொண்டிருந்தார். அவர் அனைவரையும் அருகில் இருந்த ஒரு ஆற்றில்  இருந்து  சொம்பில் தண்ணீர் முகர்ந்து வரக் கூறினார்.  அனைவருக்கும் பொதுவாக சங்கல்பம் செய்து வைத்து நீரை மரத்தின் மேல் ஊற்றச் சொன்னார். அவ்வளவுதானாம்.  ஆனால் அன்னதானத்திற்கு ஏதாவது நன்கொடை தாருங்கள் என்று அனைவரிடமும் கேட்டார். விருப்பமுள்ளவர்கள் தங்களால் இயன்றதை அளித்தனர். 

அருகில் இருந்த ஆறு சரஸ்வதி ஆறு பூமிக்குள் சென்ற ஆறு பின்னர் இவ்விடம் மீண்டும் வெளியே வந்து தரையில் ஒடி சோமநாதத்தில்  திரிவேணி சங்கமமாகி பின்னர் கடலில் கலக்கின்றது என்று கூறினார்கள். நீர் ஓடுவது போல தோன்றவில்லை, மாசடைந்து பாசி படர்ந்திருந்தது. அதன் மறு கரையில் ஒரு ஆலய வளாகம் உள்ளது. அதில் மூன்று சிவாலயங்கள் உள்ளன. பிரதான சிவாலயத்தில் நந்தியெம்பெருமான் தனி மண்டபத்தில் அருள் பாலிக்கின்றார். இவ்வாலயத்தின் விமானமும் சற்றி வித்தியாசமாக பிரமிட் வடிவத்தில் அடுக்கடுக்காக இருந்தது.  

கொடினார் 

நவதுவாரகைகள் எவை  என்று கூகுளில் அடியேன் தேடிய போது மூலதுவாரகை கொடினாரின் அருகில் உள்ள அம்புஜா சிமெண்ட் தொழிற்சாலையின் அருகில் உள்ளது என்று படித்தேன்.  முன்னரே கூறியது போல குஜராத்தில் மூன்று தலங்கள் மூலதுவாரகை என்று போற்றப்படுகின்றன.  துவாரகையில் இருந்து சோமநாத் வரும் வழியில் விசாவாடாவில் அடியோங்கள்  ஒரு முக்தி துவாரகையை தரிசித்தோம்.தற்போது மூன்றாவது….

மூலத்துவாரகையில் தற்போது கர்ப்பகிரகம் மட்டுமே,  அதுவும் பாழடைந்த நிலையில் எஞ்சியுள்ளது. விமானம் முற்றிலுமாக சிதைந்து விட்டது. சுற்றுப்பாதையும் சரியாக இல்லை.   சபா மண்டபம் இருந்ததற்கான சின்னங்கள் உள்ளன.  ஒரு பூசாரி இருக்கின்றார். அவர் தரிசனம் செய்து வைத்தார். கர்ப்பகிரகத்தின் உள்ளேயே செல்ல அனுமதி அளித்தார். உள்ளே சென்று சிறிது  நேரம் அமர்ந்து தியானம் செய்தோம். மனதில் அப்படியொரு அமைதி.

மதுராவில் இருந்து துவாரகை நோக்கி வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் இங்கு தங்கினாராம். அதற்கு பிறகு கடல் வழியாக துவாரகைக்கு சென்றார் எனவே இத்தலம் மூலதுவாரகை ஆனது என்றார். ஸ்ரீகிருஷ்ணர் இங்கு தங்கிய போது குளித்த இடம் அர்த்த சந்திர வடிவில் கிருஷ்ண குண்ட் என்று அழைக்கப்படுகின்றது என்று காண்பித்தார்.  ஆலயத்திற்கு பின் பக்கம் கடல் அவ்வாறே இருந்தது அருகில் உள்ள கடற்பகுதியில் அலைகள் ஆர்பரிக்க இக்குளப் பகுதியில் மட்டும் அலைகள் குறைவாக இருந்தது அந்தி சூரியன் மறையும் வேளை என்பதால் சூரியக் கதிர்கள் பொன் போல மின்ன அக்குளப்பகுதி பொன் குளம் போல காட்சி தந்தது.

 அன்று ஸ்ரீகிருஷ்ணன் நீராடிய போது இவ்வாறுதான் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக்கொண்டோம்.  அருகில் ஒரு பாழடைந்த வட்ட வடிவ கட்டிடம் உள்ளது. ஒரு காலத்தில் கலங்கரை விளக்கமாக இருந்திருக்கலாம். கடலுக்கடியில்  அகழ்வாராய்ச்சிகள் பழைய கல் நங்கூரம் கிட்டியுள்ளது. அங்குள்ள பூசாரிக்கு அம்புஜா நிறுவனத்தினரே சம்பளம் வழங்குகின்றனர். அவர் வசிப்பதற்கு ஒரு இல்லமும் கட்டிக்கொடுத்துள்ளனர்.

சதுர்புஜங்களில் கதை, சக்கரம், சங்கு, அட்ச மாலை தாங்கி எழிலாக கரு நீல வண்ணன், காயா மலர் வண்ணன், கார் முகில் போல் வண்ணன், கருங்கடல் முந்நீர் வண்ணன், கடல் வண்ணன், நீல முகில் வண்ணன், நீரார் முகில் வண்ணன் என்று பலவாறெல்லாம் ஆழ்வார்கள் அனுபவித்து பாடியபடி நீல வண்ணத்தில் நின்ற கோலத்தில்  சேவை சாதிக்கும்

பல்லவம் திகழ் பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில்

ஒல்லை வந்திறப்பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர் கோனை அருமையாக சேவித்தோம்

. மலர் மாலைகள் எதுவும் சூடியிருக்கவில்லை ஆனால் பட்டு பீதாம்பரத்தில் சேவை கிட்டியது. அடியோங்கள் எடுத்துச் சென்றிருந்த உலர் பழங்களை படைத்தோம்.  பூசாரி அவர்கள் எம்பெருமான் எந்தவித மாற்றமும் செய்ய வேண்டாம் என்று பணித்த்தால் அப்படியே பராமரித்துக்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.

அடுத்து ஆகமதாபாத் திரும்பும் வழியில்  மீண்டும் 

ஒரு சிவாலயம். 

(கட்டுரையில் பகிரும் சில தகவல் உதவி நடராஜர் ப்ளாக் ஸ்பாட்)





No comments:

Post a Comment