Monday, May 11, 2020

திருநந்திபுர விண்ணகரம்

திவ்யதேசங்கள்


21-நாதன் கோயில்   (திருநந்திபுர விண்ணகரம்)     

மூலவர்- நாதநாதன், விண்ணகரப் பெருமாள், யோக ஸ்ரீனிவாசன்,

உற்சவர்-  ஜெகன்நாதன்

தாயார்- செண்பகவல்லி

தீர்த்தம் - நந்தை தீர்த்த புஷ்கரணி

திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் கும்பகோணத்திற்குத் தெற்கே சுமார் 3 கல் தொலைவில் உள்ளது.பழங்காலத்தில் செண்பகாரண்யம் என்று பெயர்.மன்னார்குடியிலிருந்து இந்த நாதன் கோயில் முடிய உள்ள பகுதிக்கு :செண்பகாரண்யம்" என்று பெயர்.வீற்றிருந்த கோலத்தில் மூலவர் ஜகந்நாதன்.இறைவி செண்பகவல்லி.

இது காளமேகப் புலவர் பிறந்த ஊர்

சிவபெருமானின் வாகனமாகவும், கயிலாய மலையில் வாயிற்காப்பாலனாகவும், பூதகணங்களின் தலைவராகவும் உள்ளவர் நந்திதேவர்.சிவபக்தியில் சிறந்தவர்.இவர் அனுமதி பெற்றுவிட்டுதான் சிவாலயத்தில் சிவனை தரிசிக்க முடியும்.கயிலையில் அனுமதி இல்லாமல் இராவணன் நுழைய முற்பட்ட போது அவனுக்கும், நந்திதேவருக்கும் வாக்குவாதம் நடந்தது.அப்போது குரங்கு ஒன்றால் உன் நாடு அழிந்து போகும் என சாபமிட்டார்.

சிவனை அவமதிக்கும் வகையில் தாட்சாயணியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான்.அந்த யாகசாலையில் பூத கணங்களுடன் புகுந்து அதகளம் செய்து , தட்சனின் தலை அறுபட்டு விழவும், யாகத்துக்குத் துணை போன தேவர்கள் சூரபத்மனால்  வதை படவும் சாபம் கொடுத்தார்  நந்திதேவர்

அத்தகைய நந்திதேவர் ஸ்ரீவைகுண்டம் வந்த போது அங்குக் காவலாக இருந்த துவாரபாலகர்கள் அனுமதி பெறாது உள்ளே நுழைய முயன்றார்.அவர்கள் தடுத்த போது அதைப் பொருட்படுத்தாது உள்ளே நுழைந்தார்.இதனால் கோபமுற்ற துவாரபாலகர்கள், நந்திதேவர் உடல் முழுதும் வெப்பம் ஏறி சூட்டினால் துன்பப்படுவாய் என சாபமிட்டனர்.அப்படியே ஆக நந்திதேவர் துடித்துப் போனார்.உடன் சிவன் அடஹ்ற்கு ஒரு தீர்வு சொன்னார், "சகலவித பாவங்களையும் போக்கும் செண்பகாரண்யம் எனும் தலம் கும்பகோணத்திற்கு தெற்கே அமைந்துள்ளது.அங்கு போய் மாகாவிஷ்ணுவை நோக்கி தவம் புரிந்து விமோசனம் பெறு' என்று.

அப்படியே நந்திதேவர் வந்து தவம் செய்து பேறு பெற்ற்தால் நந்திபுரம்,  திருநந்திபுர விண்ணகரம் என்றும் இத்தலம் பெயர் பெற்றது.
திருமாலின் திருமார்பில் திருமகள் உறையும் பாக்கியம் பெற்றதும் இங்குதான்.திருப்பாற்கடலில் பரந்தாமனின் பாதங்களையேப் பற்றி எந்நேரமும் அவரது திருவடியிலேயே இருந்த அன்னை ஒளி வீசும் அவர் மார்பைப் பார்த்தி பிரமித்தார்.தான் எந்நாளும் அங்கு வாசம் செய்ய வேண்டும் என விரும்பினார். அதற்காக செண்பகாரண்யம் எனப்படும் இத்தலம் வந்து திருமாலை வேண்டி கடும் தவம் செய்தார்.பாற்கடலில் திருமகளைப் பிரிந்து தனித்திருந்த திருமாலும் அவருக்குக் காட்சியளித்தார்.அன்னை மனம் மகிழ்ந்தாள். "உம் விருப்பப்படி எம் மார்பில் இனி உறையும்" என ஆசிர்வதித்தார்.கிழக்கு நோக்கி திருமகளை எதிர் கொண்டதால் இங்கு பெருமாள் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.

சிபி சக்கரவர்த்திக்குப் பெருமாள் காட்சி தந்ததும் இத்தலமேயாகும்.தன்னிடம் அடைக்கலம் அடைந்த புறாவிற்காக ,அதன் எடைக்கு சமமாக தானே தராசின் மறுதட்டில் அமர்ந்து, தன்னை காணிக்கை ஆக்கியவருக்கு பெருமாள் காட்சி தந்தார்.

ஸ்ரீதேவிக்குத் தன் மார்பில் இடம் கொடுத்ததால் ஸ்ரீநிவாசன் என்றும் அரக்கர்களின் கொடுமையிலிருந்து ஜகத்தோர் அனைவருக்கும் விமோசனம் அருளியதால் ஜகந்நாதன் என்றும் பெயர் கொண்டிருக்கிறார் இந்தப் பெருமாள். உற்சவ  மூர்த்தியின் வலது கரம் அபய மளிக்கிறது; இடது கரமோ ‘வா’ என நம்மையெல்லாம் வாஞ்சையோடு அழைக்கிறது. ‘ஆஹ்வான முத்திரை’ எனப்படும் இந்தக் கோலம் சிறப்பானது!

ஸ்ரீதேவி, பூதேவி, செண்பகவல்லித் தாயார் மற்றும் ஆண்டாள் சமேதராக இந்த உற்சவர் சேவை சாதிக்கிறார். ‘வாளும், வரிவில்லும், வளை ஆழி, கதை, சங்கம் இவை அங்கை உடையான்’ என்ற திருமங்கை ஆழ்வார் ரசித்துப்பாடிய நேர்த்தியின்படி, இவர் வாள், வில், சக்கரம், கதை, சங்கு ஆகியவற்றை ஏந்தி, தன் பக்தர்களை எந்தத் துன்பமும் நெருங்கவிடாமல் காக்கிறார்.

தலத்தின் சிறப்புகள்!

108 திருப்பதிகளில் 21 ஆவது திருப்பதி.

நவக்கிரங்களில் சந்திரனுக்கான திருத்தலம். 

பெருமாளின் விண்ணகரங்கள் ஐந்து. விண்ணகரம் - வைகுண்டத்துக்கு இணையாக மண்ணில் உள்ள கோவில்கள். 

1. திருஅரிமேய விண்ணகரம் (குடமாடு கூத்தன் பெருமாள். )

2. திருவைகுந்த விண்ணகரம் - (வைகுந்தப் பெருமாள், திருநாங்கூர்.)

3. திருகாழிச்சீராம விண்ணகரம் - (தாடாளன் பெருமாள், சீர்காழி.)

4. திருப்பரமேச்சுர விண்ணகரம் - (பரமபதநாதன் கோவில், காஞ்சிபுரம்.)

5. திருநந்திபுர விண்ணகரம் - நாதன் கோவில்.

ஐந்து விண்ணகரங்களில் ஒன்று!

கும்பகோணம் பட்டீஸ்வரத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது ஜகந்நாதப் பெருமாள் கோவில். நாதன் கோவில் என்று விசாரிக்கவும்.

No comments:

Post a Comment