Tuesday, November 23, 2021

யோக நரசிம்ஹர்

 ஓம் ஸ்ரீ லஷ்மி நாரஸிம்ஹாய நம‌ 🙏🏻🙏🏻


|| கார்த்திகை மாதத்தில் மட்டுமே கண் திறக்கும் யோக நரசிம்ஹர் ||

சோளிங்கர் கோவிலில் உள்ள நரசிம்ஹர் கார்த்திகை மாதம் கண் திறப்பதாக தலைமுறை தலைமுறையாக பார்த்தவர்கள் கூறுகின்றனர்.. 

ஸ்ரீ அமிர்தவள்ளி தாயார் ஸமேத ஸ்ரீ யோக நரசிம்ம (அக்காரக்கனி) ஸ்வாமி (உற்சவர் - ஸ்ரீ பக்தவத்சல பெருமாள்) திருக்கோயில். 

திருக்கடிகை (சோளிங்கர், சோளிங்கபுரம்),

(64-வது திவ்யதேசம்)

இவ்வூரில் ஒரு கடிகை (சுமார் 1/2 மணி நேரம்) தங்கி இருந்தாலே மோக்ஷம் கிடைக்குமாதலால் கடிகாசலம், திருக்கடிகை என்ற பெயர்கள் ஏற்பட்டனவாம். 

விஸ்வாமித்ரர் இங்கே கடிகையில் நரஸிம்ஹரை ஒரு கடிகை (நாழிகை) துதி செய்து ப்ருஹ்மரிஷி பட்டத்தை பெற்றதாக ஐதீகம்.

நரஸிம்ஹாவதாரத்தை தரிசிக்க விரும்பிய ஸப்த ரிஷிகள் இவ்விடத்தில் தவம் செய்ய ஆரம்பிக்க, ஒரு நாழிகைக்குள் அவர்கள் பயன் பெற்றமையால் கடிகாசலம் என்ற பெயர் பெற்றது. 

இங்கு இவர் நின்ற கோலமும் அல்ல அமர்ந்த கோலமும் அல்ல.

இத்தலத்தில் ஒரு நாள் தங்கினாலும் பீடைகள் தொலைந்து மோக்ஷம் சித்திக்கும் என்று ஸ்தல புராணம் கூறுகிறது.

அதற்கான காரணம் 

மகிமை வாய்ந்த நரசிம்ஹர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர்.

ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் இது. 

அதனால் தான் கடிகாசலம் என்று பெயர் பெற்றது. 

இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். 

தக்கான்குளம் என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, யோக நரசிம்ஹரையும் யோக ஹனுமனையும் வழிபட்டு நோய் நொடி நீங்கி நலம் பெறுகிறார்கள். 

கோவில் இருப்பது மலை உச்சியில் அதனால் இளம் வயதிலேயே கோவிலைப் பார்ப்பது கோடி புண்ணியமாகும்.

ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக கூறுகின்றனர். 

ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

இவருடன் அமிர்தபலவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் ஹனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். 

அதிலும் கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் மட்டும் நரஸிம்ஹரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 

எனவே இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். 

கார்த்திகை ஞாயிற்றுகிழமைகளில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு அபிஷேகமும், பூஜைகளும் நடக்கும்.

வாழ்க்கையில் பயம் அகல முன்னேற்றம் காண ஒரு முறை சென்று பாருங்கள்.

பக்த ப்ரஹ்லாதருக்காக நேரம் காலம் பார்க்காமல் மற்றும் மற்ற அவதாரத்தை போல் கர்ப்பத்தில் அவதரிக்காமல் உடனே தோன்றியவர்.

நமக்காக உடனே வருபவர் நரஸிம்மர் மட்டுமே.

வழித்தடம்

சென்னைக்கு அருகே அரக்கோணத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலும் சோளிங்கர் அமைந்துள்ளது. 

சோளிங்கர் பேருந்து நிலையத்திலிருந்து கொண்டபாளையம், 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

முக்கிய குறிப்பு

வழியில் குரங்கு கூட்டம் அதிகமாக இருக்கும் அதனால் அதற்கு ஏதாவது திண்பண்டம் கொடுத்தால் வழிவிடும்.

ஜெய் ஸ்ரீராம்

ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து



கார்த்திகை மாதம் என்றால் ஒரு ஊரே விழா கொண்டாடும். அது எந்த ஊர் தெரியுமா?

நரஸிம்மரை குலதெய்வமா கொண்டவர்களும் சரி, இஷ்ட தெய்வமா கொண்டவர்களும் சரி சோளிங்கரில் வீற்றிருக்கும் யோக நரஸிம்மரை தரிசிக்காமல் இருக்கமாட்டார்கள். கிட்டத்தட்ட 1305 படிகள் ஏறி குரங்குகளின் தொல்லையை கடந்து யோக கோலத்தில் வீற்றிருக்கும் யோகநரசிம்மரை தரிசனம் செய்வது என்பது ஒவ்வொருவருடைய மனதிற்குள் இருக்கும் தீராத தாகம். அதுவும் கார்த்திகை மாதத்தில் அங்கு சென்று நரசிம்மரை தரிசனம் செய்தால் ஒரு வித தைரியம் மனதிற்குள் உண்டாவதை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் 11 மாத காலம் யோகத்தில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் கண்களை திறந்து பார்ப்பதாக ஐதீகம். அதனால் தான் கார்த்திகை மாதம் என்றாலே சோளிங்கர் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். கார்த்திகை சனி, ஞாயிறு என்றால் ஊரே அமளி துமளி தான்.

1305 படிகளை ஏறி துவஜஸ்தம்பத்தை தரிசித்து உள்ளே சென்றால் முதலில் நாம் தரிசிக்க இருப்பது தாயார் அமிர்தபலவள்ளியை. பத்மாசன கோலத்தில் வீற்றிருக்கும் தாயாரை காண கண் கோடி வேண்டும். தாயாரை பார்த்த உடன் விடுமுறைக்கு வரும் குழந்தை கடந்த வருடம் விடுமுறை முடிந்து கிளம்பிய நாள் முதல் இன்று வரை நடந்த விஷயங்களை தனக்கு நடந்த சுக, துக்கங்களை எல்லாம் ஒன்று விடாமல் அம்மாவிடம் கூறுவது போல் அமிர்தபலவள்ளித் தாயாரிடம் கூறத் தோன்றும். அம்பாளின் புன்னகை ததும்பும் முகம் என்னிடம் வந்துவிட்டாய் அல்லவா. இனி உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்வது போல் தோன்றும். பிரிய மனமில்லாமல் தாயாரை தரிசித்து உள்ளே சென்றால் பிரஹலாத வரதன், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன், பானகப் பிரியன், குழந்தை மனம் உள்ளவன், பிரதோஷப்பிரியன், அலங்காரப் பிரியன் என்று அழைக்கப்படும் நரசிம்ம மூர்த்தி யோக கோலத்தில் வீற்றிருப்பதை காணலாம். 

எந்தக் குழந்தையுமே அம்மாவிடம் பேசும் அளவிற்கு தந்தையிடம் பேசுவது கிடையாது. இங்கும் அது போலத்தான் நினைக்கத் தோன்றும். நரசிம்மரை தரிசிக்கும் போதே என்னடா அங்க எல்லாம் ஒப்பிச்சிட்டு வந்துட்டியா என்று நம்மை பார்த்து நரசிம்மர் கேட்பது போன்ற உணர்வு தோன்றும். உட்கார்ந்திருக்கும் அழகு அதற்கும் மேல்.. பிரம்மாண்ட உருவம். பத்மாசனத்தில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்த கோலம். 

மிக்கானை மறையாய் விரிந்த விளக்காய் என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசையிருந்த
அக்கார கனியை அடைந்துயிந்து போனேனே 

விளக்கம்: சிறந்தவனும், வேதமாக விரிவு பெற்ற விளக்கு போன்றவனும், என் நெஞ்சின் உள்ளே புகுந்து இருப்பவனும், கீர்த்தி வாய்ந்தவனும், ஜுவலிக்கின்ற பொன் மலை போன்றவனும், தகவுடையவனும்,  கடிகை என்னும் பெரிய திருமலையின் மீது எழுந்து அருளி இருக்கின்ற அக்காரக் கனியுமான எம்பெருமானை அடைந்து உய்ந்து போனேன்  என்று இத்தலம் திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்றுள்ளது.

இன்னும் எத்தனையோ பெருமைகளை உடைய இத்திருத்தலம் அரக்கோணத்தில் இருந்தும், திருத்தணியில் இருந்தும் 30 முதல் 35 கிமீ தொலைவில் இருக்கிறது. ஒருமுறை சோளிங்கர் வந்து யோகநரசிம்மரை தரிசித்து சென்றால் சோகம் என்பதே வாழ்வில் இருக்காது. நம்பினோரைக் கைவிடுவதில்லை நரசிம்மன். 17.11.21.


No comments:

Post a Comment