Monday, November 15, 2021

பாண்டவதூதப்பெருமாள்திருக்கோயில்_ காஞ்சிபுரம்

ஆலயதரிசனம்


பாண்டவதூதப்பெருமாள்திருக்கோயில்_ காஞ்சிபுரம்

************

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான "அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவில்" அமைந்துள்ளது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 49 வது திவ்ய தேசம் ஆகும்

இந்தக்கோவிலில் #மூலவராக வீற்றிருக்கும் பாண்டவ தூதப் பெருமாள், 25 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் மிகப் பிரமாண்டமாக திருக்காட்சி தருகிறார். 

#தாயார்கள்: 

சத்யபாமா மற்றும் ருக்மணி தேவியர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். 

#மங்களாசாசனம்:

பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

#தீர்த்தம் : மத்ஸ்ய தீர்த்தம்.

#விமானம் : சக்கர விமானம், வேத கோடி விமானம். பத்ர விமானம்.

#தலச்சிறப்பு : 

இத்தலம் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.   இந்த இடம் முன்பு #திருப்பாடகம் என்று அழைக்கப்பட்டது.  

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இத்தலத்தில் 25  அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் புன்னகையோடு காட்சியளிப்பதோடு  வேறு எங்கும் காண முடியாத வகையில் அழகுடன் அருள் பாலிக்கிறார்.  

கண்ணன்  பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் "பாண்டவ தூதப்பெருமாள்" என  அழைக்கப்படுகிறார்.  

இங்குள்ள கல்வெட்டுக்களில் இப்பெருமானை #தூதஹரி என்று  குறிக்கப்பட்டுள்ளது.  

#வரலாறு

இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கபட்டதாக இங்கு  உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.    

இந்த ஆலயத்திற்கு அருளாளப் பெருமாள் என்ற ஆச்சாரியார் வந்திருந்தார். அப்போது அவர் ராமானுஜருடன் 18 நாட்கள் வாதம் செய்தார். பின்னர் ராமானுஜரை சரணடைந்தார். இவர் நிறைய மகான்களுக்கு ஆச்சாரியராக இருந்திருக்கிறார். 

அதே போல் மணவாள மாமுனிகளும் இந்த ஆலயத்திற்கு எழுந்தருளியுள்ளார்.

இத்தலம் #ரோகிணி நட்சத்திரக் கோவில் ஆகும்.  

27 நட்சத்திரங்களில் ஒருத்தியான ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக கிருஷ்ண பகவானை வழிபாடு செய்தாள். அதன்படி சந்திரனை மணம் முடித்தாள். 

ஆனாலும் அவளோடு மற்ற 26 நட்சத்திர தேவியரையும் மணம் முடிக்கும் சூழல் சந்திரனுக்கு ஏற்பட்டது. அப்போதும் கூட ஞான சக்திகளைக் கொண்ட ரோகிணியை முதலாவதாகவும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையை அடுத்ததாகவும் மணந்த பிறகே, ஏனைய நட்சத்திர தேவிகளை சந்திரன் மணந்தான். 

ரோகிணி இந்த ஆலயத்தில், தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனத்தையும் தந்தருளிய பெருமாளை சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

எனவே, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் புதன்,  சனிக்கிழமைகளிலும், அஷ்டமி திதி எட்டாம் தேதிகளில் இங்கு வந்து அர்ச்சனை செய்தால்,  அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

#தலவரலாறு :

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் சிறப்பு மிக்கதாக இருப்பது, கிருஷ்ண அவதாரம் என்றால் அது மிகையல்ல. இந்த அவதாரத்தின் போது, பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் தொடக்கம் முதலே பிரச்சினையாக இருந்தது. 

மஹாபாரதத்தில், பாண்டவர்களில் மூத்தவரான தருமர் சூதாட்டத்தில்  கௌரவர்கள் சூழ்ச்சியால் தன் செல்வங்களையும் நாட்டையும் இழந்தார்.

ஒரு கட்டத்தில் பாண்டவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, 13 வருடம் வனவாசம் மேற்கொள்ளச் செய்தனர். 

வனவாசம் முடிந்து வந்ததும், பாண்டவர்கள், தாங்கள் ஆட்சி செய்ய 5 ஊர்களை வாங்கித் தரும்படி கிருஷ்ணரிடம் முறையிட்டனர். அப்படி 5 ஊர்களைத் தரவில்லை என்றால், 5 வீடுகளையாவது கேட்டுப் பெற்று வரும்படி கூறினர்.

பாண்டவர்கள் கேட்ட 5 வீடுகளைக் கூட கொடுக்கவில்லை என்றால், பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையில் போர் மூண்டுவிடும். 

அதைத் தவிர்க்கும் பொருட்டு  அவர்களுக்கு ஒரு  வீடாவது தர வேண்டும் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், துரியோதனனிடம் கேட்டு வாங்கத் தூது  சென்றார்.  

துரியோதனன் ஸ்ரீ கிருஷ்ணரை அவமானப்படுத்த ஒரு யுக்தி செய்தான்.  பகவான் அமர உள்ள ஆசனத்தின் கீழே ஒரு பெரிய பாதாளத்தை உண்டாக்கி, அதன் மேல் பசுந்தழைகளைப்  போட்டு, அவர் அமர்ந்தவுடன் கீழே விழும்படி செய்தான்.  

அவன் சூழ்ச்சிப்படியே, பகவான் ஸ்ரீ  கிருஷ்ணரும் ஆசனத்தில் அமர்ந்தவுடன், பாதாளத்தில் விழுந்தார்.  அப்பொழுது அவரைத் தாக்க  சில வீரர்களை அங்கு துரியோதனன் ஏற்பாடு செய்திருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களை வீழ்த்தி, அழித்து, தன் விஸ்வரூப தரிசனம் காட்டினாராம்.   பாண்டவர்களுக்காக தூது சென்றதால் அவரைப் பாண்டவதூத பெருமாள் என அழைக்கப்படுகிறார்.  

பாரதப் போர் முடிந்த பின்பு பல ஆண்டுகள் சென்ற பிறகு, ஜனமேஜயர் என்ற அரசன், வைசம்பாயனர் என்ற  மகரிஷியிடம் பாரதக் கதைகளைக் கேட்டு வந்தார். 

அப்பொழுது அரசனுக்கு ஸ்ரீ  கிருஷ்ண பகவானின் விஸ்வரூப தரிசனத்தைக் காண வேண்டும் என்ற ஆவல் வந்தது.  அவர்  மஹரிஷியிடம், தான் கிருஷ்ண பகவானின் விஸ்வரூபத்தைக் காண வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளைக்  கூறும்படியும் வேண்டினார்.

அந்த மகரிஷியின் அறிவுரையின்படி, காஞ்சிபுரம் வந்து மத்ஸ்ய தீர்த்தத்தில் நீராடி தவமிருந்தார் அரசர்.  தவத்தின் பயனாக  இத்தலத்தில் பெருமாள் தன் பாண்டவ தூதுக் கோலத்தைக் காட்டி அருளினார்.  

மேலும்,  திருதராஷ்டிரனுக்கும்  கண் பார்வை தந்து தனது விஸ்வரூப தரிசனத்தை இத்தலத்தில் காட்டி  அருளியதாகக் கருதப்படுகிறது.  

இந்தத் தலத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், தம் பாதங்களை பூமியில் அழுத்தி  தமது விஸ்வபாத யோக சக்திகளை செலுத்தியதால், இத்தலம் மிகவும் சக்தி  வாய்ந்ததாகக் கருதப்படுறது.  

ஆகவே, இங்கு அங்கப்பிரதட்சணம் செய்வோருக்கு சகல  துன்பங்களும் நீங்கும், பாவ விமோசனம் கிட்டும் என்பது நம்பிக்கை.

#திருவிழாக்கள் :
கிருஷ்ண ஜெயந்தி,
தீபாவளி,
முக்கோட்டி ஏகாதசி,
பங்குனி உத்திரம், கார்த்திகைப் பரணி.

#தலப்பெருமை 

திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.

ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

வாழ்க வளமுடன் 🙏🙏🙏

#லீலா

18/10/2021

No comments:

Post a Comment