Friday, November 26, 2021

சரம ஸ்லோகம் - 1

 🌹ஸ்ரீ மதேராமானுஜாய நம:🌹🌹🌹🌹🌹🌹🌹.                                                                 

 ஸ்ரீ ஆளவந்தார்                                பரமபதித்தபோது, அவருடைய சிஷ்யர்கள்  இனி  நாங்கள் உய்வதற்க்கு வழி ஏது என்று வினவ, ஆளவந்தார், " அமலாதிபிரான் " அருளிய  திருப்பானாழ்வார் திருவடிகளையே சரணம் என்று பற்றியிருங்கோள் என்று அருளினார்.

 ஆழ்வார்களில் திருப்பனாழ்வாருக்கு அவ்வளவு ஏற்றம்.  ஆழ்வார் பாசுரங்களில்,  பலஸ்ருதி ,     என்றால்  தினமும் இந்த பாசுரத்தை சேவித்தால்  என்ன பலன் கொடுக்கும் என்று வரும்.  ஆனால் அமலாதிபிரானில், பலஸ்ருதிகிடையாது 

இதில், முதல் மூன்று பாசுரங்கள், அ , உ ,  ம என்ற மூன்றழுத்தைக்கொண்டு ஆரம்பிக்கும். அவை மூன்றையும் சேர்த்து படிக்கும்போது, ஓம் என்ற ப்ரணவ மந்திரமான அஷ்டாக்ஷரம் விளங்கும். மற்ற ஐந்து,ஆறு மற்றும் ஏழாவது பாசுரங்கள்  பா, து, கை என்று ஆரம்பிக்கும். இது சரணாகதியைக் குறிக்கும்.

 ரஹஸ்யத்ரயம் என்பது மூன்று ரஹஸ்ய அர்த்தங்களைக் கொண்டது.  "ஓம் நாராயணாய நம:" என்கிற அஷ்டாக்ஷரம் ,  "ஸ்ரீமன் நாராயணாய சரணௌ சரணம்" என்று ஆரம்பிக்கும் த்வய மந்திரம்,மற்றும்  "சர்வ தர்மான் பரித்யச்ச.".. என்று ஆரம்பிக்கும் சரமஸ்லோகம் ஆகும்.

 மந்திரங்களில் மிகச்சிறந்தது த்வய மந்திரம் எனப்படும். "ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே. ஸ்ரீமதே நாராயணாய" என்பது. 

இதன் அர்த்தம் பிராட்டியுடன் கூடிய எம்பெருமானின் இரு திருவடிகளே உபாயம் மற்றும் உபேயம் ஆகும்.

 அதாவது, அடையவேண்டிய பொருள் மற்றும் அடையவேண்டிய வழி இரண்டுமே எம்பெருமானின் திருவடிகளே ஆகும்.

இரண்டாவது வரியில் ஆரம்பிக்கும் "ஸ்ரீ மதே நாராயணாய" என்பது பிராட்டி, எம்பெருமான் இருவரும் சேர்ந்த சேர்த்தியில், சர்வ தேச, சர்வ காலத்திலும்,சகலவிதமான நித்ய கைங்கர்யங்களும் செய்ய ப்ரார்த்திப்பது. த்வய மந்திர சப்தத்தை தவிர, மற்ற சப்தங்கள் எல்லாம் சமுத்ர ஓசையே என்று பிள்ளை லோகாச்சாரியார் கூறுகிரார்.

இந்த த்வய மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும், எந்த காலத்திலேயும் சொல்லலாம்.

நமது சம்ப்ரதாயத்தில் ' சரம ஸ்லோகம் என்பது மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. 

1.  முதலில், வராக அவதாரத்தில், லக்ஷ்மியிடம், எம்பெருமான் கூறியது. "எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும்போது, என்னையே நினத்துக்கொண்டு இருக்கின்றானோ, அவனது கடைசி காலத்தில், மூச்சு, பேச்சின்றி,நாக்கு தடுமாறும் நிலையில், மரக்கட்டையாக இருக்கும்போது, என்னை நினைக்கத்தேவை இல்லை. நானே அவனை வந்து கூட்டிச்செல்வேன். 

ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ஸ்திதே மனஸி ஸூ ஸ் வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –

ஸ்திதே மனஸி-மனம் கலக்கம் இன்றி நிலை நிற்கையில்
ஸூ ஸ் வதே சரீரே சதி -உடம்பு நோயற்று நன்று இருக்கையில்
தாது சாம்யே ஸ்திதே-சதி -வாதம் பித்தம் ச்லேஷ்மம் என்னும் மூன்று தாதுக்களும் ஓரளவாய் இருக்கையில்
யோ நர -எந்த மனிதன்
விஸ்வ ரூபஞ்ச அஜம்-உலகை உடம்பாக உடையவனும் -பிறப்பு முதலான விகாரங்கள் இல்லாதவனுமான
மாம் ஸ்மர்த்தா -என்னை நினைக்கிறானோ
தத் -பிற்காலத்தில்
காஷ்ட பாஷாண சந்நிபம்-கட்டையோடும் கல்லோடும் ஒத்தவனாய் –
ம்ரியமாணம்-மரணம் அடையா நிற்கிற
தம் மத்பக்தம்-அந்த என் பக்தனை
அஹம் ஸ்மராமி -நான் நினைக்கிறேன்
நயாமி பரமாம் கதிம் -உயர்ந்த பதவியை அழைத்துச் செல்கிறேன்.

2.  இரண்டாவதாக, ராமாவதாரத்தில், விபீஷணன சரணாகதியின் போது, "எவ்னொருவன், என்னை நண்பன் என்று சொல்லிக்கொண்டு வருகிறானோ, அவனை, அவன் யாராக இருந்தாலும், ராவணனேயக இருந்தாலும் அவனை காப்பது எனது விரதம்" என்கிறார்.

ஸ்ரீ ராம “சரம ஸ்லோகம்”

ராமாவதாரத்தில், விபீஷணன் சரணாகதியின் போது, ஸ்ரீராமன் கூறியது

சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே
அபயம் சர்வ புதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம

சாரங்கம் என்றால் ஸ்ரீராமர் நினைவுக்கு வருவார். தனுஷ்கோடி (இதுவும் ஸ்ரீராமரின் வில் தான்) என்றால் விபீஷண சரணாகதி நினைவுக்கு வரும்.

குருகுலம் ஒன்றில் மூன்று மாணவர்கள் ஒரு குருவனிடம் படிக்கிறார்கள். ஸ்ரீ ராமாயண பாடம் படித்த பின் குரு ஸ்ரீ ராமாயணத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்ற சிஷ்யர்களைப் பார்த்துக் கேட்டார்.

முதல் சிஷ்யன்: ”ஸ்ரீராமர் மனிதப் பிறவி எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டப்பட்டார் சரீர சம்பந்தமே இருக்கக் கூடாது என்றான்.

குருவும் ”சரி அப்படியானால் இந்தச் சரீர சம்பந்தத்தை அறுக்க நீ தபஸ் முதலிய உபாயங்களைச் செய்யப் புறப்படு” என்று அனுப்பிவிட்டார்.

இரண்டாவது சிஷ்யன் : ”தாய் தந்தையரைப் போற்ற வேண்டும். அவர்கள் சொல்பேச்சு கேட்டு, அவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும்”.

 குருவும் ” நீ திருமணம் செய்துகொண்டு உன் மாதா பிதாவிற்குத் தொண்டு செய்யப் புறப்படு” என்று அனுப்பிய பிறகு கடைசி சிஷ்யனைக் கேட்டார்.

மூன்றாவது சிஷ்யன் : ”ஸ்ரீராமரின் வில்லே நமக்கு உபாயம்” என்றான். குரு சிஷ்யனைத் தழுவிக்கொண்டார்.

3.  மூன்றாவதாக கிருஷ்னாவதாரத்தில், குருஷேத்ர போர்க்களத்தில், அர்ச்சுனனிடம்,  ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது:

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ,
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச

“ஒவ்வொரு உயிரிலும் இருப்பது நானே உயிர்கள் அனைத்தும் எனது பிம்பங்களே” என்று குருச்சேத்திர யுத்தத்தின் போது அர்ஜுனனுக்கு கீதோபதேசத்தில் ஜீவாத்மா – பரமாத்மா தத்துவத்தை விளக்குகிறார். 

அப்போது இந்த சரம ஸ்லோகத்தை அர்ஜுனனுக்கு மந்திரோபதேசம் செய்தார் பகவான் கண்ணன்.

 அன்றாட மனித வாழ்வில் நாமும் பல தரப்பட்ட சூழலை எதிர்கொள்கிறோம். அப்போது சில சமயங்களில் நமது மனோதிடத்தை இழந்து விடுகிறோம். அத்தகைய சூழல்களில் கிருஷ்ணரின் இந்த சரம ஸ்லோகத்தை படிப்பதால் நன்மைகள் உண்டாகும்.

5.சரணாகதி என்பது ஐந்து அங்கங்களைக்கொண்டது.

 1. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணணே சர்வ ரஷகன் என்ற நினைப்பு. 

2. அவன் மட்டுமே நம்மைக்காப்பான் என்கிற மஹாவிஸ்வாசம்,( உன்னாலல்லால் வேறு யாவராலும் குறை வேண்டேன்).

3. நம்மால் மற்றும் நம் முயற்ச்சியால் ஆவது ஒன்றும் இல்லை என்கிற ஆகின்ச்யம் ( நமது கையாலாகத்தனம்). 

4. ப்ரதிகூல்ய வர்ஜனம் - எப்பொழுதும் எம்பெருமான்  வகுத்த சாஸ்திரங்களிலுருந்து அகல மாட்டேன் என்கிற திட எண்ணம்.

5.  அனுகூல சங்கல்ப்பம் = எம்பெரும்மானையும் அவன் வகுத்த சாஸ்திரங்களை மட்டுமே சார்ந்திருப்பேன் என்கிற்  சங்கல்ப்பம். இவை ஐந்தையும் சேந்த்து, ஆராவதாக ஆத்ம சமர்ப்பணம் செய்யவேண்டும். 

இவை ஐந்தும் சரணாகதிக்கு தேவையான அடிப்படை எண்ணங்கள். இது மட்டுமே சரணாகதியாகாது. 

ஆனால் இது, பலப்பல ஜன்மங்களாக நாம் செய்த கர்ம்வினைகளால் எம்பெரும்மானுக்கு ஏற்ப்பட்ட சீற்றத்தை குறைப்பதற்க்கு இவை உதவும். ஆத்ம சமர்ப்பணம் என்பது பிராட்டியை முன்னிட்டுகொண்டு, எம்பெருமான் திருவடிகளையே உபாயமாகவும் உபேயமாகவும் பற்றிக்கொள்வது. இதுவே சரணாகதியாகும்.

நமது பூர்வாசார்யர்கள் சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் சமர்த்தர்கள்.  

கடுகுக்குள் கனகமலையை புகுத்துவதுபோலே. . அஞ்சைச்சுருக்கி மூன்றாக்கி, மூன்றை சுருக்கி ஒன்றாக்கி என்பர்.  

இதில் அஞ்சு என்பது அர்த்தபஞ்சகத்தையும், மூன்று என்பது தத்வம், ஹிதம், புருஷார்த்தம் என்பதையும் ஒன்று என்பது "ஓம்" எனும் ப்ரணவ மந்திரத்தையும் குறிக்கும்.  

அர்த்தபஞ்சகம் என்பது ஐந்து உயர்ந்த நிலைகளை விவரிப்பது. ஸ்ரீயப்பதியாகிய, எம்பெருமானை அடையக்கூடிய வழிகளைக்காண்பிப்பது. அவையாவன:

1. எம்பெருமான் இருக்கும் மிக உயந்த்த நிலை.

2. ஜீவன்களாகிய நாம் இருக்கும் மிக தாழ்ந்த நிலை.

3. எம்பெருமானை அடையக்கூடிய வழிகள்.

4. எம்பெருமானை அடைய தடுக்கும்  தடைகள்.

5. எம்பெருமானை அடைந்தபிறகு ஏற்படும் ப்ர்ம்ம ஆனந்தம்.

இவை ஐந்தையும் சுருக்கி தத்வம்,  ஹிதம், புருஷார்த்தம் மூன்றாக கூறுவர். 

முதல் இரண்டு நிலைகள் " த்த்வம் " என்றும், மூன்று மற்றும் நான்கு நிலைகள் " ஹிதம் ", அதாவது வழிகள் மற்றும் தடைகளைக் கூறுவது.  அந்த வழிகளாவன:- கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் மற்றும் ப்ரபத்தி ஆகும். 

ஐந்தாவது நிலை புருஷார்த்தம் எனப்படும் மோக்ஷ சாம்யத்தைக் குறிக்கும்.  இதை மீண்டும் ஒன்றாகச்சுருக்கி, ஓம் எனும் அஷ்டாக்ஷர மந்திரமாக கூறுவதுண்டு. இந்த தத்துவங்களைப்பற்றி எண்ணுவதே ப்ரம்ம விசாரம் எனப்படும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment