#NGஇலக்கியம்
@மயக்கம்
ஏம்மா எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்கறியே , எதுக்கு இந்தப் பிடிவாதம்? இந்தப் பிடிவாத குணத்தை விடு , இது சரியில்லே என்றார்
சரி சரி விடுங்க என்னாலே முடிஞ்சுது செஞ்சேன் அதுக்கு ஏன் இப்பிடிக் கத்தி உடம்பைக் கெடுத்துக்கறீங்க என்றாள் அவள்
அது சரி என் மேலே அக்கறை இருந்தா இப்பிடிக் கத்த விடுவியா. எத்தனை முறை சொல்றேன் இந்த மாதிரி வயசான காலத்திலே இவ்ளோ கனமான தண்ணிர் பாட்டிலை இவ்ளோ உயரமான மேஜை மேலே தூக்கி வைக்காதே எங்கேயாவது முதுகிலேயோ இடுப்பிலேயோ பிடிப்பு ஏற்பட்டா நீதானே அவஸ்தைப் படவே என்றார்.
இதோ பாருங்கோ ஶ்ரீரங்கத்திலே காலங்காத்தாலே எழுந்து காவேரிக்கு போயி பித்தளைக் குடத்தை நன்னா பளீர்ன்னு தேச்சு நாங்களும் குளிச்சிட்டு காவிரியை சேவிச்சுட்டு அந்த கனமான குடத்தை தண்ணீரோட இடுப்பிலே வெச்சிண்டு ஒரு கிலோமீட்டர் நடந்துதானே வீட்டுக்கு வருவோம் ,
எங்களுக்கு இதெல்லாம் பழக்கம், அதுமட்டுமில்லே லாவகமாத்தான் தூக்கி மேஜை மேலே வைக்கறேன் எனக்கு வெயிட்டே தாக்காம அதுனாலே நான் பாத்துக்கறேன் நீங்க கத்தாம இருங்க என்றாள் அவள்
இதோ பாரு அப்போ உனக்கு 16 வயசு இப்போ 61 வயசு புரிஞ்சுக்கோ என்றார் அவர்
அங்கே வந்த அவர் மகன் ஏம்பா எப்போ பாத்தாலும் அம்மாவை ஏதேனும் சொல்லிண்டே இருக்கீங்களே என்றான்,
அவள் டேய் நீ சின்னப் பையன் உனக்கு ஒண்ணும் புரியாது நீ அப்பாவை எதுவும் சொல்லாதே என்று அவனை அடக்கிவிட்டு
அவருகே வந்து மெல்லிய குரலில் எனக்கு நீங்க இது மாதிரி வெயிட்டை எல்லாம் தூக்கினா மனசாகாது, அதுனாலேதான் நீங்க எழுந்து வரதுக்குள்ளே நானே செஞ்சுடறேன் என்றாள்.
அது புரியறதும்மா அதுனாலேதான் கத்தறேன் அப்போ எனக்கு உம்மேலே அக்கறை இருக்கே அது பொய்யா என்றார் அவர்
நானும் உன் மேலே இருக்கற அக்கறையினாலேதானே சொல்றேன்
ஏதோ உன் மேலே அவனுக்குத்தான் அக்கறை இருக்கா மாதிரி இப்பிடிக் கேள்வி மட்டும் கேக்கறானே உன் பிள்ளை ஒரு நாளாவது அம்மாவுக்கு உதவியா எதையேனும் செய்வோம்ன்னு தோண்றதா இந்தக் காலத்து பசங்களுக்கு , ரொம்ப புரிஞ்சா மாதிரி நமக்கு அறிவுறை சொல்ல மட்டும் வந்துடறாங்க என்றார் அவர்
அது சரி இப்போ என்மேலே இவ்ளோ அக்கறை காட்றீங்களே என்னிக்காவது உங்க அம்மாவுக்கு நீங்க உதவணும்ன்னு நெனைச்சு எதையேனும் செஞ்சிருக்கீங்களா என்றாள் அவள்
சுருக்கென்றது அவருக்கு விழித்தார்!
ஒண்ணும் கவலைப்படாதீங்க , அவனுக்கு கல்யாணம் ஆகட்டும் அப்புறம் பாருங்க அவன் பொண்டாட்டி மேலே எவ்ளோ அக்கறையா எல்லாம் செய்யறான்னு!
,இதெல்லாம் ஒரு சுழற்சி புரியறதா சுழற்சீன்னா மயக்கம்ன்னு அர்த்தம் என்றாள் புன்னகை புரிந்தபடி
இந்த இரக்கமும் பாசமும் கருணையும் இந்தப் பெண்கள் மனதிலே எப்போதும் காவேரி போல ஓடிக்கொண்டிருக்கிறதே , மேற்பரப்பிலே தண்ணீரே இல்லாமல் வற்றிப் போன காவிரி ஆறு போலத் தோற்றமளித்தாலும் உள்ளே அடியாழத்திலே அப்படியே பொங்கிப் பெருக்கெடுத்து கருணை ஊற்றாகப் பொங்கிக் கொண்டேதான் இருக்கிறது அதனால்தான் இந்தப் பெண்களை தாயாய் மதித்து வாழ்கிறோம் என்று தோன்றியது அவருக்கு
அவர் மயங்கிப் போனார் அந்த 70 வயதிலேயும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
No comments:
Post a Comment