"உப்புக் குறவன்-னு கேள்விப்பட்டிருக்கியோ?.."
சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம்.
வாழ்க்கையில் ஒரு பெரிய துக்கம்-தாங்க முடியாத சோகம்-ஏற்பட்டது, எனக்கு. நாலு மாதங்கள் போல, நான் ஸ்ரீ மகா பெரியவாளைத் தரிசிக்கப் போகவில்லை. பெரியவாள் கூப்பிட்டனுப்பினார். பெரிய உத்தியோகத்திலிருந்த இரண்டு-மூன்று அன்பர்கள் தான் என்னை அழைத்துச் சென்றார்கள்.
இரவு மணி பத்து.
தனிமை.பெரிய அகல் விளக்கின் வெளிச்சம். மெதுவாகப் பெரியவாள்;"...நிபுணௌ.."என்றார்கள்."சொல்லு.."
நான்காவது சுலோகம். 'த்வதன்யப் பாணிப்யாம்.."
பெரியவாள், மெதுவாக, "எல்லோருக்கும் அடைக்கலம் அம்பாள்தான், அவளுக்குத் தெரியும்-யாருக்கு,எப்படி, எப்போ,என்ன கொடுக்கணும்னு..."
மௌனம்.
"சாம்பமூர்த்தி, சந்தை-ன்னா,உனக்குத் தெரியுமோ?"
"தெரியும்.
பல வியாபாரிகள், பல சாமான்களைக் கொண்டு வந்து விற்பனை செய்வா. ஒவ்வொரு ஊரிலும், வாரத்தில் ஏதாவது ஒருநாள்,சந்தை. இன்னிக்கு இந்த ஊர்,நாளைக்கு அந்த ஊர் என்று போய்க் கொண்டிருப்பார்கள்.
உப்புக் குறவன்-னு கேள்விப்பட்டிருக்கியோ?.."
"ஆமாம். பரம்பரையா, சந்தைகளுக்குப் போய் உப்பு வித்துப் பொழைப்பு நடத்தறவா.."
"ஆமாம். அப்படி ஒரு உப்புக் குறவன்."
பரம்பரையா,காமாக்ஷியிடத்திலே பக்தியுள்ளவா.
ஒரு தடவை, ஒரு சந்தை முடிஞ்சு,அடுத்த ஊருக்குப்போற வழியிலே, காட்டுப் பிரதேசம். இவன் கழுதை மேலே உப்பு மூட்டை ஏத்திண்டு போறதை சில திருடர்கள் பார்த்தா. "டேய் இவன் நாளைக்கு உப்பை வித்துட்டு, பணம்,காசு எடுத்துண்டு இந்த வழியா திரும்பிப் போவான்.
அப்போ, புடுங்கிக்கலாம்"ன்னு பிளான் பண்ணிண்டா.
"உடனே,-வெடி,வெடிப்பானே, தெரியுமோ,உனக்கு?.."
"கோயில்ல உத்ஸ காலங்களிலே வெடி மருந்து போட்டு, கெட்டிச்சு,நீளமா திரி போட்டு வைப்பா.
திரி முனையிலே நெருப்புப் பத்த வெச்சா, அது மெல்ல போய் வெடி மருந்திலே படும். அது, படீர்னு சத்தம் போட்டு வெடிக்கும்.."
"ஆமா..திருடர்கள் என்ன பிளான் பண்ணினான்னா,- வெடி மருந்து போட்டு வெடிச்சா, கழுதை மிரண்டு ஓடும்; உப்புக் குறவன் பயந்து அலறுவான்;மூர்ச்சை போட்டு விழுவான்,அப்போ,அவன் மடியிலேர்ந்துபணத்தை எடுத்துக்கலாம்..."
"அன்னிக்கு, சந்தையிலே உப்புக்குறவன் கடை விரித்ததும், பெரீசா மழை பெய்து,உப்பெல்லாம் கரைஞ்சு போச்சு.
அவனுக்கு நஷ்டம்;மனக்கஷ்டம். காமாக்ஷியை, என்னென்னமோ சொல்லித் திட்டினான்.
காசே இல்லாமே வீட்டுக்குப் போகணுமேன்னு ஆத்திரம் வேற. திரும்பி காட்டு வழியே வந்தான்.
அவனைப் பார்த்துவிட்டு, திரியிலே நெருப்பு வெச்சானகள், திருடர்கள், திரியிலே நெருப்பு பத்திண்டு, மருந்துக்குழாய்வரை போச்சு.
இதோ,
வெடிக்கப் போறதுன்னு சந்தோஷப்பட்டா. ஆனா, வெடிக்கல்லே! என்ன காரணம்னு கிட்ட வந்து பார்த்தா, காலையிலே பெய்த மழையிலே, வெடி மருந்து நனைஞ்சு போச்சு.
தீப்புடிக்கல்லே, உடனே, உப்புக் குறவனைப் பார்த்து !,"சுவாமி உன்னைக் காப்பாத்திடுத்து, உன் நன்மைக்காகத்தான் மழை பெய்திருக்கு, வீட்டுக்குப் போயி, சாமி கும்பிடு"ன்னு சொன்னா.
உப்புக் குறவன் திடுக்கிட்டுப் போனான்.
'அப்போ அம்பாள் எனக்கு துரோகம் பண்ணிட்டான்னு நினைச்சது, தப்புத் தானே? காமாக்ஷி என்னை மன்னிச்சுடு.
எனக்கு எப்போ, என்ன வேணும்னு உனக்குத் தெரியும். மழை பெய்யாமல், நான் உப்பு வித்துப் பணத்தோட வந்திருந்தா, இந்தத் திருடன்கள் என்னை அடிச்சுப் போட்டிருப்பா,நல்லவேளை,காப்பாத்தினே!.
பெரியவாள்; "அதனாலே, நமக்கு என்ன கிடைச்சாலும்,அது அம்பாள் பிரசாதம்தான். நாம் எதையும் கேட்காமல் இருக்கிறதே, நாம் நமக்குச் செய்து கொள்ளும் நன்மை.."
மகாப் பெரியவாளுடைய, மெல்லிய, தகுந்த இடைவெளிகளோடு கூடிய நீண்ட நேரப் பேச்சு முடிவுக்கு வந்தது, இரவு இரண்டரை.
"என் தலைமேலே இருந்த பத்து டன் இரும்பு இறங்கிடுத்து" என்றேன்.
சந்தையில் ஆரம்பித்து, அம்பாளிடம் முடிந்த கதை. என் மன ஆறுதலுக்காகத்தான் என்றாலும், அதே நிலையிலுள்ள எல்லாருக்கும் பொருந்துவது தானே?
பெரியவாள், " நீ, விடாம ராமாயணம் படி, மனச்சாந்தி கிடைக்கும்" என்றார்.
இன்று வரை ராமாயண பாராயணமும்,மனச்சாந்தியும்இணைபிரியாமல் தொடர்கின்றன.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Jaya Jaya Shankara Hare hare Shankara
No comments:
Post a Comment