Sunday, April 11, 2021

நீலவண்ணப்பெருமாள்_திருக்கோயில் நன்மங்கலம்

 அருள்மிகுநீலவண்ணப்பெருமாள்_திருக்கோயில்

நன்மங்கலம் 

சென்னை

திருவிழா

பிரம்மோற்சவம், புரட்டாசி மாதம், வருடத்தின் முக்கிய விஷேசங்கள் நடைபெறும்.  

தலசிறப்பு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலய அபிமானத் தலமாகவும் இது விளங்குகிறது.  

பொதுதகவல்

கோயில் பிரகாரத்தில் லக்ஷ்மி ஹயக்ரீவர், நரசிம்மர், சடகோபர், சுதர்சனர் அருள்பாலிக்கிறார்கள். சென்னையில் கோயில்கள் நிறைந்த நங்கநல்லூர் பகுதியும் இப்பகுதியும் அருகிலேயே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழ்க்கட்டளையில் சில புராதனக் கோயில்களும் மேடவாக்கத்தில் புகழ்பெற்ற தேனுபுரீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது சிறப்பு.  

தலபெருமை

காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் கோயிலுக்கருகில் பச்சைவண்ணர்-பவளவண்ணர் திருக்கோயில்கள் அமைந்திருப்பதைப் போல, இங்கும் காமாட்சியம்மை சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கருகில் நீலவண்ணப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது சிறப்பாகும். 

கண்ணன் குழலினை நண்ணும் மனமுடையவரான நம்மாழ்வாருக்கு இத்திருக்கோயிலில் மூலவர் மற்றும் அர்ச்சா விக்ரகம் அமைந்துள்ளதும் 108 திவ்ய தேசங்களில் தொண்டைநாட்டுத் தலங்களில் புகழ்பெற்ற திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள் திருக்கோயிலின் ஓர் அங்கமாக இத்திருக்கோயில் விளங்குவதும் இத்தலத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களாகும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலய அபிமானத் தலமாகவும் இது விளங்குகிறது. 

2010 ல் சத்யநாராயணஸ்வாமி, சக்கரத்தாழ்வார், வேதவல்லித் தாயார் சன்னிதிகள் அமைக்கப்பட்டன.  2013 ஜூலை பக்த ஆஞ்சநேயர் சன்னிதி அமைக்கப்பட்டு சம்ப்ரோஷணம் நடந்தேறியது கேட்பாரற்றுக் கிடந்த கோயிலில் தற்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதற்குக் காரணம் நீலவண்ணப் பெருமாள்தான் என்றால் மிகையாகாது.   

தலவரலாறு

இவ்வாலயம் சுமார் 800 வருடங்கள் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. கோயிலின் தளத்தில் மீன் வடிவங்கள் அமைந்துள்ளதிலிருந்து இதை உணரலாம். சில கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.  

வைணவ சமுதாயத்தின் ஒரு பிரிவினரான அரசானி பாலையைச் சார்ந்த தாத்தாச்சாரியர் பரம்பரையினர் சிலர் இக்கோயிலுக்கருகில் சிறிது காலத்துக்குமுன் வசித்துவந்தார்கள் என்றும்; இத்திருக்கோயிலுக்குக் கைங்கர்யம் செய்தார்கள் என்றும் அரசாங்கக் குறிப்பேடுகளில் நன்மங்கலம் நீர்வணப் பெருமாள் என்று இந்தப் பெருமாள் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment