Friday, May 8, 2020

கடன் பாக்கி

பெரியவா திருவடியே சரணம். 

அன்று காஞ்சி மடத்தில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்துக்கும் அதிகமாகவே இருந்தது. சுவாமிகளை தரிசிக்க வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். கருமேகங்கள் கூடியிருந்தன. ‘ஹரஹர சங்கர...’ கோஷம் விண்ணை முட்டியபடி இருந்தது.

பக்தர்களுக்கு தரிசனமும், பிரசாதமும் வழங்கிக்கொண்டிருந்த மகா பெரியவரின் பார்வையில், 20 வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞன் தென்பட் டான். சுவாமிகளுக்கு அடுத்த கணமே புரிந்துவிட்டது. அணுக்கத் தொண்டர் ஒருவரை அழைத்தார்.

“பெரியவா...”

“இங்க வரிசையில பதினைஞ்சாவது ஆசாமியா, குள்ளமா, கொஞ்சம் கறுப்பா நின்னுண்டிருக்கானே ஒரு பையன்... நீ கவனிச்சியா?”

“ஆமா பெரியவா..”

“நீ என்ன பண்றே... உடனே பக்கத்துல ஜவுளிக் கடைக்குப் போய், அந்தப் பையன் சைஸுக்கு சரியா இருக்கற மாதிரி ரெடிமேட் சட்டை, பேன்ட் வாங்கிண்டு வா. நல்ல ஒஸ்தி துணியா இருக்கட்டும்” என்று பணித்தார் சுவாமிகள்.  

மடத்து அலுவலகத்தில் பணம் வாங்கிச் சென்று, பெரியவா சொன்னபடி டிரஸ் வாங்கி வரப்பட்டது.

“ஒரு மூங்கில் தட்டுல நெறைய பழங்கள், மட்டைத் தேங்காய் வைத்து இந்தத் துணிகளையும் வை. நான் சொன்னேன்னு மடத்து மானேஜரிடம் சொல்லி ஆறாயிரத்து இருநூத்தம்பது ரூபாயை ஒரு கவர்ல போட்டு எடுத்துண்டு வா. அதையும் தட்டுல துணிமணிகளுக்கு மேலே வச்சுடு...”
மகா பெரியவா உத்தரவின்படி அனைத்தும் நடந்தன.

பெரியவா குறிப்பிட்ட அந்த இளைஞன் வரிசையில் மெள்ள நகர்ந்து சுவாமிகளுக்கு முன் வந்து நின்றான். அடுத்த நொடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவரின் பாதார விந்தங்களை வணங்கினான்.

கண் ஜாடையாலேயே தன் உதவியாளரை அழைத்தார் பெரியவா. “இந்தப் பையனுக்கும் இவன் குடும்பத்துக்கும் நான் பரிபூரணமா ஆசீர்வாதம் பண்றதா சொல்லி, அந்த மூங்கில் தட்டை இவன் கைல கொடு” என்று பணித்தார். பணமும், பழங்களும், புதுத்துணிகளும் அடங்கிய தட்டு அது.

இளைஞனுக்கு எதுவும் புரியவில்லை. கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. குழப்பத்துடனேயே தட்டை வாங்கிக் கொண்டு, தயாள பரமேஸ்வரனை மீண்டும் ஒருமுறை நமஸ்கரித்து விட்டு நகர்ந்தான் அவன்.

தரிசன நேரம் முடிந்தது. தன் அறைக்குத் திரும்பிய பெரியவா, அந்தத் தொண்டருக்கு அழைப்பு விடுத்தார். இளைஞனுக்குப் பணமும், துணிமணிகளும் அளித்ததற்கான காரணத்தை சன்னமானக் குரலில் விளக்கினார்.

“ரொம்ப வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது. அப்போ மடத்துக்குக் கொஞ்சம் சிரம திசை. வடதேச யாத்திரை கிளம்பலாம்னு முடிவுப் பண்ணிப் புறப்பட்டேன். மடத்துக்கு எதுத்தாப்பலே சின்ன மளிகைக் கடை வச்சுருந்தார் செட்டியார் ஒருவர். அங்கதான் மடத்துக்கு வேண்டிய மளிகை சாமான்கள் வாங்கறது வழக்கம்...’’

தொடர்ந்து விவரித்தார் மகாபெரியவா. அந்தச் சம்பவம் இதுதான்...

மகாபெரியவா யாத்திரைப் புறப்படுவதைக் கவனித்த மளிகைக்கடை செட்டியார், தயங்கிய படியே அருகில் வந்தார்.

“பெரியவா என்னை மன்னிக்கணும்...”

“சொல்லுங்க செட்டியார்...”

“பெரியவா யாத்திரை முடிஞ்சு திரும்பி வர ஆறு மாசம் ஆவும்னு சொல்றாங்க. இப்பவே நாலஞ்சு மாசம் மடத்து மளிகை பாக்கி நிலுவைல இருக்கு. நீங்க யாத்திரையை நல்லபடியா முடிச்சுட்டு வாங்க சாமி” என்று சொல்லி சுவாமிகளை வணங்கினார் செட்டியார்.

“ஓ! அத்தனை பாக்கி இருக்கா? கவலைப்படாதீங்க செட்டியார். யாத்திரை போயிட்டு வந்தவுடனே உங்க பாக்கியைப் பைசல் பண்ணச் சொல்றேன்...”

யாத்திரை முடித்து திரும்பி வந்தபோது செட்டியார் கடைப் பூட்டியிருந்ததைக் கவனித்தார் பெரியவா. விசாரித்தார். செட்டியார் காலமாகி விட்ட விவரம் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொண்டரிடம் பகிர்ந்துகொண்ட மகாபெரியவா தொடர்ந்து கூறினார். 

“செட்டியாரோட குடும்பம் எங்கே இருக்குன்னு அப்போ கண்டுப் பிடிக்க முடியலே. செட்டியாருக்கு மடத்துலேர்ந்து எவ்வளவு பாக்கின்னு கேட்டுத் தெரிஞ்சுண்டேன்... எண்ணூத்தி எழுபத்தஞ்சே முக்கா ரூவான்னு சொன்னா. அந்தப் பாக்கியை இன்னிக்குத்தான் அசலும் வட்டியுமா செட்டியாரோட பேரன்கிட்ட தீர்த்து வச்சேன். அவன்தான் இன்னிக்கு தரிசனத்துக்கு வந்த இளைஞன். இனிமே கடன் பாக்கி மனசை இம்சிக்காது...”

தொண்டர் மறுபடியும் வாசலுக்கு ஓடி வந்தார். நல்லவேளை, அந்த இளைஞன் அங்கு யாரிடமோ பேசிக்கொண்டிருக்க, செட்டியாரைப் பற்றி விசாரித்தார்.

“எங்க தாத்தா திடீர்னு ஏற்பட்ட மாரடைப்பால காலமாயிட்டாரு. நிறைய கடன் ஏற்பட்டு சமாளிக்க முடியாம கடையை மூடிட்டு கிருஷ்ணகிரிக்கு வந்துட்டாங்களாம். இப்ப எங்க அப்பா அங்கதான் மளிகைக் கடை நடத்துறார். நான் தெரிஞ்சவங்க சிலரோட டூர் வந்தேன். பெரியவங்களைத் தரிசனம் பண்ணலாம்னு உள்ளே வந்தேன்...”

மகா பெரியவரின் தீர்க்கதரிசனத்தை எண்ணி வியந்தபடியே சுவாமிகளிடம் வந்தார் தொண்டர்.

“என்னடா... நான் சொன்ன விஷயம் வாஸ்தவமா இல்லையான்னு உனக்கு சந்தேகம். அதைத் தெளிவுப்படுத்திக்க வாசலுக்கு ஓடிப்போய் செட்டியாரோட பேரன்கிட்டேயே கேட்டு ஊர்ஜிதப்படுத்திண்டியாக்கும்...” என்று கேட்டு சிரித்தார் சுவாமிகள்!

No comments:

Post a Comment