*முஸ்லிம் அன்பருக்கு கொடுத்த காட்சி*
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஸ்ரீ பெரியவாள் ஹைதராபாத் ஏ.ஸி.ஸி. சிமெண்ட் ஆலையினுடைய காக்னா நதிக்கரையிலுள்ள பம்பிங் ஸ்டேஷனில் தங்கியிருந்தார்கள்.
அந்தப் பிரதேசம், பழைய ஹைதராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது.இப்போது கர்நாடகாவினுள் அடங்கியுள்ளது.
அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பீம்சேனப்பா கிட்டப்பா என்பவருடைய தோட்டம் இருக்கிறது அவர் நவாப் ஆட்சியின் போது ரஸாக்கர்களுடைய அட்டூழியத்தை எதிர்த்து வெற்றி கண்டவர்.அவர் தன்னுடைய இடத்திற்குப் பெரியவாள் வர வேண்டுமென்று அழைத்ததற்கு இணங்க ஒரு நாள் அங்கு சென்றார்கள் பெரியவா.
அன்று மத்தியான வேளையில், ஒரு முஸ்லிம் அன்பர் தரிசனத்திற்கு வந்தார்.
அவரிடம் ஸ்ரீ பெரியவாள், "உன் மனைவி காலையிலேயே பழங்களுடன் வந்து தரிசனம் செய்து கொண்டு போனாளோ? என்றதும் அவருக்கு ஆச்சர்யம். அவர் சொன்னார்;
"நான் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். காலையில் ரிக்ஷாவைப் பிடித்துக் கொண்டு நீங்கள் போனபோது 'பாபா' என்னைப் பார்த்தீர்கள். எனக்கு அல்லாவையே நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு தோன்றியது. மேலும் என்னுடைய தாய் பாஷையான உருது மொழியில் ஏதோ பேசிய மாதிரி தோன்றியது. வேலை முடிந்து இப்போது தான் வரமுடிந்தது. வீட்டில் என் மனைவியும் தரிசனம் செய்த விஷயத்தைச் சொன்னாள்.
இவ்விதம் சொல்லி வணங்கி எழுந்த அவருக்கு, பழங்கள் கொடுத்து அனுக்ரஹித்தார்கள் பெரியவா.
எல்லாவுமாயுள்ள மகாப் பெரியவாள், அல்லாவுமாகக் காட்சி தந்ததில் ஆச்சரியமில்லை.
No comments:
Post a Comment