Friday, October 12, 2018

வைஷ்ணவ தேவி - கலவர பூமியில் ஒரு ஆன்மீகப்பயணம் பகுதி 2

வைஷ்ணவ தேவி - கலவர பூமியில் ஒரு ஆன்மீகப்பயணம் பகுதி 2

கட்ரா நகர பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கோயிலின் நுழைவாயில்.  இந்த பாதையின் இரு மருங்கிலும் கடைகள், கடைகள், பல விதமான கடைகள் – எந்தக் கடையாக இருந்தாலும் வாயிலில் பல குச்சிகள்/கைத்தடிகள் வைத்திருப்பார்கள். இந்தக் குச்சிகளை வாடகைக்கு வாங்கிக் கொண்டால், செங்குத்தான பாதையில் நடக்கும்போது ஊன்றி நடக்க வசதியாக இருக்கும்.  20 ரூபாய் கொடுத்து ஒரு தடியை வாங்கிக் கொண்டால் பயன்படுத்தி திரும்ப வரும்போது கொடுத்தால் 10 ரூபாய் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்

கைத்தடி அவசியமில்லை என்று நினைத்ததால் நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. எதிரே அன்னையைத் தரிசித்து வருகிறவர்கள் அனைவருமே நடைப்பயணத்தினை துவங்கும் பக்தர்களை உற்சாகப் படுத்தும் விதமாக “ஜெய் மாதா [dh]தி!” என முழங்க, தரிசிக்கச் செல்லும் பக்தர்களும் “ஜெய் மாதா [dh]தி!”என கோஷிக்கிறார்கள்! நடைப்பயணதினை துவங்கும்போதே இந்த கோவில் உருவான கதை பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கலாம்
எப்போதெல்லாம் அசுர சக்திகளின் பலம் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் இறைவன்/இறைவி தங்களது சக்திகளைப் பயன்படுத்தி அசுர்ர்களை வதம் செய்து விடுவார்கள் என்பதை நமது புராணங்களும் இதிகாசங்களும் நமக்குச் சொல்கின்றன. அப்படி அன்னை பராசக்தி அசுரர்களை அழித்துக் கொண்டிருந்தாள்.  ஒரு சமயத்தில் அவளுடைய மூன்று அவதாரங்களான மஹாகாளி, மஹாலக்ஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து தங்களது தெய்வீகச் சக்திகளை ஒருமுகப் படுத்தினார்கள். அப்போது அங்கே ஒரு ஒளிப்பிழம்பு வெளிவந்தது. அங்கே

அப்பிழம்பிலிருந்து ஒரு அழகிய பெண் தோன்றினாள்.

தோன்றியவுடன் அவள் கேட்டாள் ஒரு கேள்வி! கேள்வி கேட்பது பெண்களுக்கே உரிய குணமல்லவா? ”அன்னையே ஏன் என்னை படைத்தீர்கள்? முப்பெரும் தேவியரும் அதற்கு பதிலளிக்கும் விதமாகச் சொன்னார்கள் – “நீ இப்புவியில் பிறந்து தர்மத்தினை நிலை நாட்ட வேண்டும்” என்பது தான் எங்கள் குறிக்கோள். தென் இந்தியாவில் இருக்கும் ரத்னாகர் மற்றும் அவரது மனைவியின் குழந்தையாக அவதரித்து கலைகள் பல கற்று, உன்னதமான நிலை அடைவாய் என்று சொல்லி மறைந்தார்கள். ரத்னாகரின் மனைவி ஒரு தெய்வீகக் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளுக்கு”வைஷ்ணவி” என்று பெயரிட்டனர்.


 Dharshani Darwaza.....


ஒரு கிலோ மீட்டர் தொலைவினை நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ பயணிக்கலாம்.  அப்படி பயணித்து நாம் அடையும் இடம் “Darshani Darwaza”  அதாவது ”தரிசன நுழைவுவாயில்”.  இங்கே முதல் முறையாக சென்ற பகுதியில் பார்த்த Yatra Parchi பாதுகாவலர்களால் சரி பார்க்கப் படும். கூடவே பாதுகாப்பு சோதனைகளும் நடக்கும்.  கோவில் மற்றும் பாதைகளின் பாதுகாப்பு முழுவதுமே Central Reserve Police Force வசம்.  பலத்த சோதனைகள் செய்த பின்னரே அனுமதி அளிக்கிறார்கள்.


 நடக்கலாம் வாங்க..... கால் வலித்தால் கொஞ்சம் உட்காரலாம்!


இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2800 அடி உயரத்தில் இருக்கிறது.  இங்கே நின்று பார்த்தால் அன்னை குடிகொண்டிருக்கும் திரிகூட மலையைக் காண முடியும் என்பதாலும்  இவ்விடத்திற்கு “Darshani Darwaza” என்ற பெயர். இந்த இடத்திலிருந்து ”Bhavan”என்று அழைக்கப்படும் அன்னையின் இருப்பிடம் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம்.  இந்த பன்னிரெண்டு கிலோ மீட்டர் தொலவு தூரத்தினை தாம் நாம் நடந்து கடக்கப் போகிறோம்.  என்ன நீங்களும் தயாரா? வாருங்கள் நடக்கலாம்!

 மேற்கூரையோடு கூடிய நடைபாதை

இப்போது இருக்கும் நடைபாதை, கோவிலின் நிர்வாகத்தினை Shri Mata Vaishno Devi Shrine Board [SMVDSB] [1988-ஆம் வருடம்] எடுத்துக் கொண்ட பிறகு போடப்பட்ட பாதை. அதற்கு முன்பு படிகளும், செங்குத்தான பாதைகளும் நிறைந்த ஒன்று. அதில் நடந்து போவது மிகவும் கடினமான ஒன்று. இப்போதைய பாதை மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டு நடக்க ஏதுவாய் இருக்கிறது.


 ”Gotcha! எனக்கு உணவளித்தவருக்கு நன்றி” எனச் சொல்லுமோ?


வழியெங்கிலும் “சாரே [b]போலோ ஜெய் மாதா [dh]தி! ஜோர் சே [b]போலோ ஜெய் மாதா [dh]தி! [dh]தில் சே [b]போலோ, ப்ரேம் சே [b]போலோ ஜெய் மாதா [dh]தி!”போன்ற கோஷங்கள் உங்கள் காதுகளை நிறைப்பதோடு நடப்பதில் இருக்கும் சிரமம் தெரியாமல் இருக்க உதவும். ஒருவர் சொல்லச் சொல்ல, நீங்கள் சொல்ல நினைக்காவிடிலும் உங்கள் உதடுகள் இந்த கோஷங்களை உச்சரிக்க ஆரம்பித்து விடும்!

 மலையை நோக்கியபடி நடைப்பயணம்!

இப்படி ஜெய கோஷங்கள் எழுப்பியபடி நமது நடைப்பயணம் துவங்கி விட்ட்து.  தொடர்ந்து நடப்போம்.....  பன்னிரெண்டு கிலோ மீட்டர் தொலைவு! 

அடுத்த பகுதியிலும் நடப்போம்!