சிறு கதை:
ஐரோப்பிய நாடுகளின் ஒன்றில் மிகுந்த தொலைவில் ஒரு சிற்றூர் இருந்தது. அந்த ஊரில் பழமையான தேவாலயம் ஒன்று இருந்தது.
அந்த தேவாலயத்தில் துறவி ஒருவரும் பணியாளர்கள் பலரும் சேவையில் ஈடுபட்டிருந்தனர்.
ஒருநாள் ஆலய துறவி புதியவர் ஒருவர் மாற்றலாகி வந்தார். வந்தவர் முதல்நாளில் இருந்தே ஆலயத்தில் நடைபெரும் அனைத்து செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
ஆய்வு செய்தவர் ஆலயத்தில் தேவையற்ற செலவுகள் மேற்கொள்ளப் படுகிறது என்றும் அவைகளை உடனடியாக குறைக்க முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப் போவதாகவும் அனைவருக்கும் அறிவிப்பு பலகை மூலம் தெரிவித்தார்.
இதனால் பல வருடங்களாக அங்கு வேலை புரியும் பணியாளர்கள் முதல் புதியவர் வரை அனைவரும் ஒருவித பயத்தில் ஆழ்ந்தனர்.
திட்டத்தை செயல்படுத்த துவங்கினார் துறவி.
ஆலய கணக்கு வழக்கு பார்க்கும் பணி காலியாக இருந்தது. தனது புதிய திட்டமாகிய செலவு குறைப்பின் அடிப்படையில் ஆலயத்தில் இருக்கும் ஒருவரிடமே இந்த பணியையும் சேர்த்து ஒப்படைக்க திட்டமிட்டார் அந்த புதிய துறவி.
எனவே அவர் அங்கு பல வருடங்களாக ஆலயமணி அடிக்கும் முதியவரிடம் சென்று அவரின் வேலைகள் என்னென்ன என்று கேட்டார்.
முதியவரோ தினமும் நேரத்திற்கு ஆலயமணி அடிப்பது மட்டுமே தனது பணியென்றார்.
உடனே துறவி, இன்றுமுதல் ஆலய கணக்குகளையும் நீரே பார்த்துக்கொள்ளும் என்றார்.
பதறிய முதியவரோ, மன்னியுங்கள் ஐயா. எனக்கு எழுதபடிக்க தெரியாது என்று கூறினார். இதை ஏற்க மறுத்தார் துறவி.
அதுமட்டுமல்லாது முதியவரிடம் தான் அவருக்கு முப்பது நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் எழுத படிக்க கற்று பொறுப்பேற்கவும் உத்தரவிட்டார்.
நிலைமை புரிந்து கொண்டு சரி என்றார் முதியவர். பின்வந்த முப்பது நாட்களும் தனக்கு தெரிந்த வழிகளில் தனக்கு தெரிந்தவர் தெரியாதவர் என் எல்லோரிடமும் தனக்கு கற்றுத்தந்து உதவுமாறு கேட்டு அலைந்தார்.
நாட்கள் மிக வேகமாக நகர்ந்தது. முப்பது நாட்கள் முடிந்தது. முதியவர் தனது மணி அடிக்கும் பணியில் இருந்தார். அதே நேரம் துறவி முதியவரிடம் 'நான் சொன்னது போல் எழுதபடிக்க கற்றுக்கொண்டீரா என வினவினார்.
முதியவரோ தழுதழுத்த குரலில் இல்லை என்றார்.
துறவி அப்படியானால் உமக்கு இனி இங்கு வேலை இல்லை. இன்றுடன் நீங்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டும் என்றார்.
முதியவரோ, ஐயா, இந்த தள்ளாடும் வயதில் ஆலயமணி அடிப்பதை தவிர வேறு பணி எதுவும் தெரியாது. என்னை இந்த வேலையை விட்டு அனுப்பிவிடாதீர்கள் என்று துறவியிடம் கெஞ்சினார்.
மனம் இறங்காத துறவி முதியவரை பணி நீக்கி வெளியேற்றினார்.
என்ன செய்வதென்று அறியாத முதியவர் வெளியில் ஓர் இடம் பார்த்து அமர்ந்து தான் இனி வாழ என்ன செய்வதென்று தவித்தவாறே அமர்ந்திருந்தார்.
அது ஒரு பெரும் பனிக்காலம்.. பூமழையாய் வானிலிருந்து பனி உதிர்ந்து கொண்டிருந்தது.
எங்குபோவது என்ன செய்வது என்று குழம்பியிருந்த முதியவருக்கு சற்று நேரத்தில் குளிர் பொறுக்க முடியவில்லை. எனவே குளிர்தாங்க ஒரு வெண்சுருட்டு புகைக்க எண்ணி அருகாமையில் இருந்த கடைக்கு வாங்க சென்றார்.
கடைக்காரர் வந்த முதியவரிடம் இல்லை என்றார். உடனே முதியவர் வேகமாக மற்றொரு கடைக்கு சென்றார். அங்கும் இல்லை. மீண்டும் வேறு கடைக்கு சென்றார். அங்கும் இல்லை. இவ்வாறு அடுத்தடுத்த கடைகளுக்கு சென்றும் எங்குமே இல்லை.
நொந்துபோன முதியவர் ஒரு ஓரமாக நின்றார். திடீரென அவருக்குள் ஒரு யோசனை. 'நாம் ஏன் வெண் சுருட்டை வாங்கி இங்கிருக்கும் கடைகளுக்கெல்லாம் வினியோகிக்க கூடாது' என எண்ணினார்.
கையில் தான் சேமித்திருந்த பணத்தை வைத்து தனக்கு தோன்றிய வியாபாரத்தை துவங்கினார்.
கடுமையாக உழைத்தார். வளர்ந்து பெருகினார். வெகு சில வருடங்களிலேயே அந்தநாட்டில் பெரும் பணம்படைத்தவர்களில் ஒருவரானார்!
ஒருநாள் அவரை நேர்முகம் காண பத்திரிக்கையாளர் ஒருவர் வந்திருந்தார்.
நேர்காணல் முடிவடையும் தருணத்தில்..
பத்திரிக்கையாளர்: உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா?
முதியவர்: இல்லை. எனது பணியாளர்கள் எல்லாவற்றையும் எனக்காக பார்த்துக் கொள்கிறார்கள்.
பத்திரிக்கையாளர்: நீங்கள் இந்த தொழிலுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன செய்து கொண்டிருந்திருப்பீர்கள்?
முதியவர்: தேவாலயத்தில் மணி அடித்துக் கொண்டு இருந்திருப்பேன். என் ஆயுளின் பாதிக்குமேல் அந்த பணிதான் செய்து கொண்டிருந்தேன் என்றாராம்.
முதியவரின் கடின உழைப்பால் ஏற்பட்ட முன்னேற்றத்தை கண்முன் கண்டு பத்திரிகையாளர்கள் வாயடைத்துப் போனார்கள் .
(இது ஒரு பழங்கால உண்மை சம்பவம்.)
நீதி: வாழ்வில் உழைத்து முன்னேற நினைத்தவர்களுக்கு எந்த தடையும் ஒரு தடையல்ல.
No comments:
Post a Comment