கர்ப்பிணிப் பெண் வேண்டி மலையிலிருந்து கீழேவந்த ஆஞ்சநேயர்
ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் லட்சுமணன் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்க,ஹனுமான் மூலிகைகள் நிரந்த மலையைத் தூகிக் கொண்டு வந்து அவரைக் காப்பாற்றினான்.
அப்படிக் கொண்டுவரும்போது அந்த மலையிலிருந்து கீழே சிலப் பகுதிகள் விழுந்தன.அப்படி விழுந்த பகுதிகளை “சஞ்சீவி மலை” என்று அழைக்கப்பட்டு வருகிறோம்.
அவற்றுள் ஒன்றுதான் “தித்தியோப்பன அள்ளி” என்ற ஊருக்கு அருகே உள்ள சஞ்சீவி மலை. இந்த மலையில் பசுமைக் காடுகளுக்கு நடுவே சுமார் ஐந்நூறு அடி உயரத்தில் அனுமனுக்கென்று மிக அழகான ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பழங்காலத்தில் இந்த அனுமன் கோயில் மலை உச்சியில் இருந்தது.அப்போது ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மலை ஏற முடியாமல் அனுமனை வேண்ட, அவளது வேண்டுகோளுக்கு இணங்கி அனுமன் மலையைவிட்டு கீழே வந்து எழுந்தருளியதாகக் கூறப்படுகிறது.
அனுமனின் பாதச் சுவடுகளை இன்றும் உச்சியில் காணலாம்.
இந்த ஆலயம் கிருஷ்ணதேவராயர் எனும் மன்னர் காலத்தில் உருவானது.காலப் போக்கில் அந்தக் கோயில் பழமை ஆகிவிட பக்தர்களின் முயற்ச்சியால் கோபுரம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை கட்டப்பட்டு இன்று சிறப்பான முறையில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்தக் கோயிலுக்கு செல்வதால் உண்டாகும் சிறப்புகள்
தெற்கு திசை நோக்கி “சஞ்சீவராய சுவாமி” என்ற பெயரால் அழைக்கப் படும் இந்த ஆஞ்சநேயர் கோயிலுக்குச் செல்வதால் மணப் பேறு, மகப்பேறு கிட்டும்.
கால்நடைகள் அபிவிருத்தி அடையும்,விளைச்சல் அதிகரிக்கும், ஆரோக்யமான வாழ்வு அமையும்.
சித்ரா பௌர்ணமி,புரட்டாசி மூன்றாம் சனி,கார்த்திகை தீபம் சமயத்தில் பக்தர்கள் அங்கு சென்று தீபமேற்றி வழிபாட்டு வருகின்றனர்.
மேலும் இந்த ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகள், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி நாட்களில் அன்னதானமும் உண்டு.வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சர்க்கரை, கற்கண்டு, வாழைப்பழம் எனத் தங்களால் இயன்ற பொருளை துலாபாரமாகச் செலுத்துகிறார்கள்.
இந்தக் கோவிலில் விநாயகர்,சிவன்,நவகிரஹங்கலுக்கும் தனிச்சன்னதி அமைந்துள்ளது.இங்கு 20அடி உயரத்தில் சிமெண்ட் கொண்டு செய்யப்பட்ட அனுமன் சிலை உள்ளது.
மேல்புறத்தில் உள்ள தொட்டியிலிருந்து கீழே வரும் நீரானது அனுமனின் வலது கையில் பட்டு வந்து,கீழே விழுவதாக அமைந்துள்ளது மிகவும் கண்கவர் காட்சியெனவெ சொல்லவேண்டும்.
இந்த கோயிலின் மற்றுமொரு சிறப்பு அதன் வடமேற்கில்,”பூதகுண்டு”எனும் பெயரில் ஒரு குகை உள்ளது.
அந்தக் குகைகளில் சமண முனிவர்கள் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகின்றது.சில முனிவர்கள் இங்கு வந்து த்யானம் செய்து மன அமைதி பெறுகிறார்களாம்.
இம்மலையில் வீசும் மூலிகைகள் நிறைந்த காற்று உடல் மற்றும் உள்ளத்தில் உண்டாகும் நோய்களுக்கு இயற்கையான மருந்தாக அமைந்துள்ளது.
இங்கு உள்ள சஞ்சீவராயன் அணையில் பக்தர்கள் முடியிறக்கிக் கொண்டு,அணையில் நீராடி பின்பு நடைபயணமாக வந்து சஞ்சீவராய சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
முன்னொரு காலத்தில் இந்த மழைக் கோயில் பகுதியில் பல சித்தர்கள் தவம் புரிந்ததாகவும்,அவர்கள் இன்றும் இரவுப் பொழுதில் இந்த ஆலய வளாகத்தில் உலாவருகிறார்கள் என்று அங்குள்ள மக்கள் கருதுகிறார்கள். அவ்வளவு ஏன் இது அவர்களது நம்பிக்கையும் கூட.
தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 23கி.மீ தொலைவில்,பொன்னாகரம் தாலுக்காவில் தித்தியோப்பன் அள்ளி ஊராட்சியில் சஞ்சீவபுரம் பகுதியில் சஞ்சீவ மலையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.பாப்பாரப்பட்டியிலிருந்து 7கி.மீ தூரத்தில் உள்ளது.
சனி மற்றும் விசேஷ தினங்களில் நாள் முழுவதும் ஆலயம் திறக்கப் பட்டிருக்கும்.
No comments:
Post a Comment