Tuesday, February 4, 2020

சாளக்ராம மகிமை !

சாளக்ராம மகிமை !

வைதீகமான குடும்பங்களில் தொன்றுதொட்டு பூஜிக்கப்பட்டும் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பட்டும் வருவது சாள க்ராமம். 

இது உருளைவடிவமாயும், மிகவும் மிருதுவாயும், கரிய நிறமாயும் அல்லது சிவப்பு நிறமுடையதாயும் இருக்கும். இதை மிக பத்திரமாய் பூஜை பெட்டியில் வைத்திருப்பார்கள். 

தலைமுறை, தலைமுறையாக வழி, வழியாக குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக இதனை பெற்று ஆராதித்து வருகிறார்கள் என்பதே இது எவ்வளவு புனிதமானது, மதிப்பிற்குரிய பொக்கிஷமாக உள்ளது என்பதை விளக்கும். 

இது கன்னிகாதானத்தின் போது, கன்னிகையுடன் வரனுக்கு தானம் செய்யப்படுவதும் உண்டு.

சாளக்ராமசிலா என்பது விஷ்ணு அம்சம் உடையது. இதனுடைய மந்திரத்திற்கு ரிஷி ஸ்ரீபகவான். தேவதை நாராயணன். 

சாளக்ராமம் நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைக்கக்கூடிய ஒருவிதமான கல். 

பவிஷ்யோத்தர புராணம் கூறுவது  

கண்டகி நதிக்கு வடக்கிலும் ஹிமாசலத்திற்கு தெற்கிலும் பத்து யோஜனை விஸ்தீர்ணமுள்ள சாளக்ராமம் என்ற புண்ணிய பூமியுள்ளது. 

இங்கு துவாரவதி சாளக்ராமத்தில் ஒன்று கூடுகிறது. 

மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய ஸ்தலம் இது என்பதில் சந்தேகமே கிடையாது. 

முக்திமதி அல்லது முக்திக்ஷேத்ரம் என்று சொல்லப்படுவது காட்மாண்டுவிலிருந்து 140 மைல் தொலைவில் இருக்கிறது.

இதையே சாளக்ராம க்ஷேத்ரம் என்றும் கூறுவர். 

சாளக்ராமத்தைப் பற்றிய ஒரு கதை பின்வருமாறு:

பிரம்மனது வியர்வைத் துளியினின்று கண்டகி என்ற ஒரு பெண் உருவெடுத்தாள். 

அவள் கடுந்தவம் புரிந்தமையால் அச்சுற்ற தேவர்கள் அவளை நாடி வரமளிக்க வந்தனர். 

அவளோ அவர்களை தன் பிள்ளைகளாகப் பெற விரும்பினாள். இது முடியாது என்பதால் தேவர்களை பூமியில் புழுக்காளாகும் படி சபித்தாள். கோபமடைந்த தேவர்கள் அவளை ஒரு ஜடமாக ஆக சபித்தனர். 

இதனால் கலங்கிய ப்ரம்மா இந்திரஇதனால் கலங்கிய ப்ரம்மா இந்திரனையும், ருத்ரனையும் அணுகி அவர்களது பரிஹாரம் கிட்டமுடியாமல், விஷ்ணுவை அண்டினார். 

இரு சாபங்களையும் அகற்ற இயலாது என்று கூறி விஷ்ணு ஒரு உபாயம் கூறினார். 

சாளக்ராம க்ஷேத்ரத்தில் சக்ர தீர்த்தத்தில் தான் வாசம் செய்வது என்றும் அங்கு தேவர்கள் வஜ்ர கீடம் என்ற புழுக்களாகி அங்குள்ள கூழாங்கற்களை ஆகாரமாகக் கொண்டு வாழவேண்டியது என்றும் கண்டகி என்பவள் ஒரு நதி வடிவமாக அந்த கற்களில் பாயவேண்டும் என்றும் ஏற்பாடாகியது. 

அத்தகைய தேவாம்சமும், விஷ்ணு அம்சமும் பொருந்தியனவே சாளக்ராம கற்கள். 

பத்ரிநாத்திலுள்ள பிம்பங்கள் சாளக்ராமத்தினால் ஆனவை. 

சாளக்ராமத்தை கோர்த்து மாலையாகவும் பிம்பங்களுக்கு அணிவிக்கலாம். 

சாளக்ராம உடைந்திருந்தாலும், ஸ்வரூப அழிவுற்று இருந்தாலும், அக்னியில் எரிந்திருந்தாலும், அதற்கு ஒரு தோஷமும் இல்லை. 

அது குற்றமற்றது. 

சாளக்ராம பூஜை செய்ய மந்திரமோ, தந்திரமோ, புனித தீர்த்தமோ வேறு பூஜா விவரணங்களோ தேவையில்லை. 

அது இருந்தாலே சந்துஷ்டியை கொடுக்கவல்லது. 

சாதாரணமாக புருஷ சூக்த மந்திரத்தால் பூஜிப்பார்கள். 

அது சிரார்த்த காலங்களில் இருக்க வைப்பது பிதுர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். 

சாளக்ராம அபிஷேகதீர்த்தத்தை சிரஸில் தெளித்துக் கொண்டு அதை அர்சித்த துளசியை தரித்துக் கொண்டு, அதற்கு நிவேதனம் செய்த உணவை உண்ண வேணும். 

இது வைகுண்ட வாசத்தைக் கொடுக்க வல்லது. 

சாளக்ராம அபிஷேக ஜலத்தை கீழே கொட்டக்கூடாது. 

இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. 

இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம், அமைப்பு இவற்றிற்கேற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன. 

எடுத்துக்காட்டாக சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் கேசவம் என அழைக்கப்படுகின்றன.

இவ்வாறாக கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம், .சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன. 

பண்டைய காலத்தில், மன்னர்களின் சபைகள், ஊர் சபைகள் ஆகியவற்றில் வழக்குகளில் சாட்சி சொல்லும் போது சாளக்கிராமத்தைக் கையில் கொடுத்து ’சாளக்கிராம சாட்சியாக’ சாட்சி சொல்லும் வழக்கம் இருந்தது. 

மரண காலத்தில் சுயநினைவுடன் சாளக்கிராமத்தை மனதால் வணங்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்றும், இறக்கும் போது சாளக்கிராம தீர்த்தத்தின் ஒரு துளி தீர்த்தத்தை அருந்தி உடலை விடுவோர் வைவஸ்வதம் என்ற தர்மராஜரின் நகரில் யமதர்மராஜனால் மரியாதை செய்யப்பட்டு புண்ணிய உலகிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

கண்டகி என்னும் புண்ணிய ஆற்றில் நீராடி முக்தி நாதனை பக்தியுடன் வழிபடுபவன், பூவுலகில் சுகமாக வாழ்ந்து பின்னர் வைகுண்டத்தில் தன்னுடன் இருப்பதாக விஷ்ணு கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது. 

சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது. 

சாளக்கிராம திருமஞ்சன தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று ஸ்ரீ சாளக்கிராம தத்துவ முக்தாவளி எனும் நூல் கூறுகின்றது. 

ஸ்ரீதேவி பாகவதமும் ஸ்ரீநரசிம்ம புராணமும் ஸ்ரீதேவி பாகவதமும் ஸ்ரீநரசிம்ம புராணமும் சாளக்கிராம வழிபாட்டினை புகழ்கின்றன. 

சாளக்கிராமத்தை துவாரகா சிலாவுடன் சேர்த்து வணங்குவது சிறப்பானது என்று கூறுவர்.

ஶ்ரீ ஸாலக்ராம மந்த்ர:

ௐ நமோ பகவதே விஷ்ணவே ஶ்ரீ ஸாலக்ராம நிவாஸினே ஸகல துரித நிவாரிணே, ஸர்வா பீஷ்ட பல ப்ரதாய ஸாலக்ராமாய ஸ்வாஹா !!!!!!!

ௐ விஷமன் நாஶாய வித்மஹே,
விஷ்ணு வாஸாய தீமஹி,
தந்நோ சிலா: ப்ரசோதயாத் !!!!!

No comments:

Post a Comment