கடவுளின் குரல்" - தொகுப்பு: ஆர்.என்.ஆர்.
10 /04 /2019 குமுதம் இதழிலிருந்து...
""பண மூட்டை பத்திரமாக இருக்கா?""
கிருஷ்ணா நதிக்கரையில் மகாபெரியவா முகாமிட்டிருந்த காலம் அது. அந்த நதியில் தொடர்ந்து ஒரு மண்டலம் ஸ்நானம் செய்யத் தீர்மானித்தார், மகாபெரியவர்.
அதன்படி, தினமும் அதிகாலையிலேயே புனித நீராடப் புறப்பட்டுவிடுவார், புண்ணியன். அவரோடு வேத விற்பன்னரான சாஸ்திரி ஒருவரும் கூடவே செல்வார்.
மகான் புனித நீராடிவிட்டுக் கரை ஏறும் சமயத்தில் சில பக்தர்கள், அவரது திருவடியில் காசு, பணத்தைக் கொட்டிவிட்டு கும்பிட முயற்சித்தபோது, சட்டென்று அவர்களைத் தடுத்த சாஸ்திரிகள், ஒரு பெரிய மூங்கில்தட்டை எடுத்து நீட்டி, காசை அதில் போட்டுவிட்டு, பெரியவாளை தள்ளியிருந்து கும்பிடச் சொன்னார்.
நாற்பத்து எட்டாவது நாள். வழக்கம்போல நீராடிவிட்டுக் கரை ஏறிய மகான், சாஸ்திரிகளைப் பார்த்தார். "இன்றோடு மண்டல ஸ்நானம் முடிவடைகிறதே...இத்தனை நாட்களாக வசூல் செய்தாயே அந்தப் பண மூட்டை பத்திரமாக இருக்கா?" என்று கேட்டார்.
அப்படியே நடுங்கிப் போனார், சாஸ்திரிகள். "பெரியவா...நான் யார்கிட்டேயும் பணம் வசூலெல்லாம் பண்ணலை...அவா கொண்டுவந்து உங்க முன்னால கொட்டினத்தை அப்படியே தட்டுல வாங்கினேன்..அவ்வளவுதான். அதை ஸ்ரீமடத்துல ஒப்படைக்கத்தான் கணக்குப் போட்டு மூட்டையா கட்டி பத்திரமா எடுத்து வைச்சிருக்கேன்...!" தழுதழுப்பாகச் சொன்னார்.
"பதட்டப்படாதே...உனக்காக வசூல் பண்ணிண்டேங்கற அர்த்தத்துல நானும் சொல்லலை. ஆனா, அந்தப் பணத்தை நீ மடத்துக்குத் தரவேண்டாம்!" சொன்னார், மகாபெரியவர்.
"அப்படின்னா, யாருக்காவது தானமா குடுத்துடட்டுமா?" கேட்டார், சாஸ்திரி.
"வேண்டாம்..அதைக் குடுத்தவங்க, பாவம் தொலையுதுன்னு நினைச்சுத்தானே கொடுத்திருக்காங்க...பணத்தை தானமா தந்துடலாம். அந்தப் பாவத்தை என்ன பண்ணுவே?" மகாபெரியவா கேட்க, குழம்பித் தவித்தார் சாஸ்திரிகள்.
"பெரியவா..நான் இப்படி தர்மசங்கடத்துல மாட்டிக்கிட்டேனே..என்னை முதல் நாளே நீங்க தடுத்திருக்கலாமே... எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியலையே...தழுதழுத்தார் சாஸ்திரிகள்.
"சரி, சரி..பயப்படாதே...போ..போய், யாகம், ஹோமம் எல்லாம் செய்யற கனபாடிகள் யாரிடமாவது மொத்தப் பணத்தையும் கொடு. இந்தக் காசுல ஹோம திரவியங்கள் (யாகப் பொருட்கள்) வாங்கிப் பயன்படுத்தச் சொல். அக்னியில் சேர்ற எதுவும் பாவக் கணக்குல வராது. அதனால உனக்கும் பாவம் இல்லை. பணத்தை கொட்டினவர்களோட பாவமும் போயிடும்!"
மகாபெரியவா சொல்ல, அப்படியே செய்து முடித்தார், சாஸ்திரிகள். அதன் பிறகு வந்து வணங்கியவரை கை உயர்த்தி ஆசிர்வதித்தார், மகான்.
"உன்னை ஆரம்பத்துலேயே தடுத்திருக்கலாம். ஆனா, நீ என் உத்தரவைக் கேட்டுண்டா மூங்கில் தட்டுல கலெக்ஷன் பண்ணினே...இல்லையே..! அதான், நான் எதுவுமே சொல்லலை...! ஆனா, இன்னிக்கு நீ கிருஷ்ணாவுல நீராடற சமயத்துல "ஆசார்யாளோட நீராடினதால நம்ம பாவங்களும் கரைஞ்சிருக்கும்னு மனசுக்குள்ளே நினைச்சே பாரு...அந்த நம்பிக்கை வீண் போயிடக் கூடாதுன்னுதான் இந்த ஏற்பாட்டைச் சொன்னேன்!" அருள் ததும்பச் சொன்னார், ஆச்சார்யா. மனதாரத் தன்னை நம்பியவர்களை ஒருபோதும் அந்த மகான் கைவிட்டதில்லை என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி!
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமாக்ஷி சங்கர!
மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏