Sunday, July 12, 2020

குழந்தையும் கங்காளமும்.

 குழந்தையும் கங்காளமும். 

 சுபஸ்ரீஸ்ரீராம். துபாய். 

முரளி எங்கடா இருக்க?. 

என்னம்மா சொல்லு. 

ப்ரியா எங்கடா?. 

எனக்கு எப்படிம்மா தெரியும். அவ எதையாவது ஆராய்ச்சிங்கற  பேர்ல ரணகளம் பண்ணின்டு இருப்பா.. 

அம்மாக்கிட்ட என்னப்பத்தி என்ன  கம்ப்ளைண்ட் பண்றேள். 

உன்னைப்பத்தி பேசினாலே, போஸ் சிஸ்டம் மாதிரி உன் காதுல எப்படித் தான்  கணீர்னு விழுறதோ.  

யாரோ வாசல்ல பெல் அடிக்கறா போய்ப் பாரு.  

ப்ரியா கதவைத் திறக்க, ஒரு பெண்மணி நிற்கின்றாள். 

 நீ தானே ப்ரியா.

 ஆமாம். 

உன் மாமியார் போன்ல பேசறச்ச. உன்னப்பத்தி ரொம்பப்  பெருமையா சொல்லுவா.  

நீங்க??

நான் ஜமுனாவோட சின்ன வயசு ப்ரண்ட் பேபி .

வாங்கோ வாங்கோ.  

அம்மா உங்க ப்ரண்ட் பேபி மாமி வந்துருக்கா. 

வாடி சௌக்கியமா?. முரளி கல்யாணத்துக்கு வர்றேன்னு சொல்லிட்டு, கடைசில வர்ல. பேரனும் பொறந்தாச்சு. 
இப்பத் தான் உனக்கு வழி தெரிஞ்சதா?. 

என்னடி பண்றது?. 

பையன் அமெரிக்கா கூட்டிண்டு போனான். 

கடைசியில மாட்டுப் பெண்ணுக்கு டெலிவரி டயம்.  அங்கேயே தங்குபடி ஆயிடுத்து. 

அதான் இப்பப் பார்த்துட்டு அப்படியே எங்க ஆத்து  கங்காளத்தை வாங்கிண்டு போலாம்னு வந்தேன். 

ஆமா உன் பேரன் எங்க?. தூங்கறானா?. 

ப்ரியா, எங்க முகுந்த்?.

அம்மா அவன் குளிச்சிண்டு இருக்கான்.

என்னது இது?. குழந்தைய தனியா விட்டுட்டா, நீங்க பேசிண்டுருக்கேள்?.  

எல்லாரும் குழந்தை குளிக்கிற இடத்துக்குப் போனார்கள். 

எல்லாருக்கும் பக்குன்னு இருந்தது. 

ஐய்யோ எங்காத்து கங்காளத்துல குழந்தை குளிச்சுண்டுருக்கே. 

என்ன ப்ரியா இப்படி பண்ணிட்ட என்று ஜமுனா கேட்டாள். 

இல்லம்மா, இப்பெல்லாம் தாமிரம், இரும்பு இலுப்பச்சட்டி  பித்தளை யூஸ் பண்ணா உடம்புக்கு நல்லதுன்னு சொல்றா. 

நம்மாத்துல கங்காளம் பரண்ல இருந்தது. அதான் இப்படி ஒரு ஐடியா பண்ணேன். 

ஒருத்தருக்கொருத்தர் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள். 

ஏம்மா ப்ரியா, எங்காத்துல,  இந்தக் கங்காளத்தை எப்படி  சமையலுக்கு யூஸ் பண்ணிப்பா தெரியுமா?. 

ஆனா நீ உன் பிள்ளைக்கு பாத் டப் மாதிரி இப்படி பண்ணிட்டையே.  

சாரி பேபி மாமி.  குழந்தைய நான்  குளிக்கவெச்சா, அது சீடைக்காய் மாதிரி குடு குடுன்னு உருண்டு ஓடறது.

அதனாலத் தான் இப்படி அவனை உட்கார வெச்சுட்டேன். 

பேபி மாமியைப் பார்த்து, இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி என்று முரளிக் கேட்டான்?. 

மூணு மாசத்துக்கு முன்ன, திருடன் ஒருத்தன் விடியகாலை 2 மணிக்கு  ஆத்துக்குள்ள  வந்துட்டான். சத்தம் கேட்டவுடன் ப்ரியா முழிச்சுட்டா. 

வந்தவன் கையில உலக்கை இருந்தது. 

இவ அவன்கிட்ட, இங்க திருட ஒன்னுமே இல்லை. அப்புறம் எதுக்கு உனக்கு உலக்கைன்னு அவன்கிட்ட பேசிண்டுருக்கா. நான் ஏதோ பேச்சு சத்தம் கேட்கறதேன்னு வந்துப் பார்த்தா, 

இவ அவன்கிட்ட நான் ஓசியில எதுவும் வாங்க மாட்டேன், இந்தா நூறு ரூபாய்ன்னு கொடுத்துட்டு  உலக்கைய வாங்கிண்டு, அவனை வெளிய அனுப்பிட்டா. அவன் போகும் போது முகம் வெளிறிப் போய் ஓடியே போய்ட்டான்.. 

இவள் திருடனுக்கே டஃப் கொடுத்தவ. அப்ப உங்களுக்கு டஃப் இல்ல ஒரு பஃப்ஸ் கூட கொடுக்கமாட்டா. 

பேபி மாமி பாய்லரையும், கங்காளத்தையும் அப்படியே ஒரு பார்வை பார்த்தாள். 

முரளி  உடனே சொன்னான், 

பாய்லருக்கும் ஒரு கதை  இருக்கு. அதைச் சொன்னா நீங்க என்ன ஆவேளோன்னு எனக்குத் தெரியாது. 

ப்ரியா, பேபி மாமியிடம் உங்க ஆத்துப் பாத்திரம் பரண்ல தூங்கப் போறது. அதுக்குப் பேசாம இங்கேயே நடமாடிண்டு இருக்கட்டும் என்று சொன்னாள். . 

பேபிக்கு மனதில் தோன்றியது, இன்னும் நான் கொஞ்ச நேரம் இருந்தேன்னா என்னையும் இந்தப் ப்ரியா, ஏதாவது பண்ணிடுவா. அதனால கிளம்பிட வேண்டியது தான். 

பரவாயில்லை ஜமுனா, கங்காளம் இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். 

அடுத்து Antique கிடைக்கும் வரை ப்ரியவின் ஆராய்ச்சித் தொடரும். அதுவரை குழந்தையின் குளியலும் தொடரும். 😃😃

No comments:

Post a Comment