Sunday, July 12, 2020

கம்பனும்-ஸ்ரீ ரங்கமும்

கம்பனும்-ஸ்ரீ ரங்கமும் பற்றி ஒரு சிறிய பதிவு நமது ஸ்ரீ திவ்யதேசம் குழுவில்

திருவரங்கத்தில் ராமாயண காவியத்தை அரங்கேற்ற விரும்பிய கம்பர், திருவரங்கம் சென்று அங்குள்ள பண்டிதர்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

அவர்கள், ”முதலில் தில்லை மூவாயிரம் அந்தணர்களிடம் பாடிக் காட்டுங்கள். உங்களது காவியத்தை அவர்கள் ஒப்புக் கொண்டால், நாங்களும் இங்கு அரங்கேற்ற சம்மதிக்கிறோம்!” என்றனர்.

உடனே...., 
சுவடிகளுடன் தில்லையம்பதியான சிதம்பரத்துக்கு சென்ற கம்பர், 

அங்குள்ள அந்தணர்களிடம் தனது விருப்பத்தையும் ரங்கம் பண்டிதர்கள் கூறியதையும் விவரித்தார். 

அதற்கு தில்லைவாழ் அந்தணர்கள், ”அவர்கள் ஒப்புக் கொண்டால்தான், நாங்களும் ஒப்புக்கொள்வோம். 

எனவே...., 
நீங்கள் முதலில் ஸ்ரீ ரங்கம் பண்டிதர்களிடம் உங்களது திறமையைக் காட்டி அனுமதி பெறுங்கள்!” என்றனர்.

இப்படி, இரு தரப்பினரும் மாறி மாறி அலைக் கழிக்க, கம்பர் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தார். 
ஆனாலும்.... 
அவர் மனம் தளரவில்லை.

‘இந்த முறை எப்படியும் தில்லை வாழ் அந்தணர் களது ஒப்புதலை பெற்றே தீர்வது!’ என்ற உறுதியான எண்ணத்துடன் சுவடிகளை எடுத்துக் கொண்டு தில்லைக்கு வந்தார் கம்பர். 

அங்கு...., 
ஒரு வீட்டின் முன் ஏராள மான அந்தணர்கள் கூடி நிற்பதைப் பார்த்தார். நேராக அவர்களிடம் சென்று, தான் வந்த நோக்கத்தை தெரிவித்தார். 

அவர்களோ...., 
இங்கு, துக்க காரியம் நடந்துள்ளது. இந்த வீட்டைச் சேர்ந்த பையன், நேற்று இரவு பாம்பு தீண்டி இறந்து விட்டான். 
அவனது இறுதிக் காரியத்துக்காகவே நாங்கள் கூடியுள்ளோம். இந்த நேரத்தில் ராமாயணம் அரங்கேற்றம்... என்கிறீர்களே?” என்று சிடு சிடுத்தனர்.

உடனே கம்பர்...,
அவனை என்னால் பிழைக்க வைக்க முடியும் என்றார். 
ஆனால்.... 
எவரும் நம்பவில்லை.

உம்மால் எப்படி சாத்தியமாகும்..? 
நீர் என்ன மந்திர வாதியா? என்று அலட்சியப்படுத்தினர்.

”தயவு செய்து, அந்தப் பையனை இப்படி திறந்த வெளிக்குக் கொண்டு வாருங்கள்!” என்று கம்பர் சொல்லவே, ‘இவர் என்னதான் செய்வார்… பார்ப்போமே!’ என்று எண்ணிய அந்தணர்கள், இறந்து போன பையனை வாசலில் கொண்டு வந்து கிடத்தினர்.

உடனே.... 
தனது ஓலைச் சுவடிகளை பிரித்த கம்பர், அதில் யுத்த காண்டத்தில் உள்ள ‘நாகபாசம்’ என்ற படலத்தைப் படித்தார். அப்போது அங்கு வந்த கருடன் ஒன்று வானத்தில் வட்டமிட்டது. அதன் நிழல் சவமாகக் கிடந்த பையனின் மீது விழ… அவன் தூங்கி முழிப்பவன் போல் எழுந்து உட்கார்ந்தான்! அனைவருக்கும் ஆச்சரியம். 

அவர்கள் கம்பரை புகழ்ந்ததுடன், 

ராமாயணத்தை அரங்கேற்றவும் சம்மதித்தனர்.

அதன்படி... 
ராமாயண காவியம் முதன் முதலில் தில்லையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

அதன் பின்னர்...., 
ஸ்ரீ ரங்கத்தில் மேட்டு அழகியசிங்கர் முன் உள்ள மண்டபத்தில், ராமாயணத்தை அரங்கேற்றினார் கம்பர்

(ஸ்ரீரங்கம் கோயிலில் இன்றும் கம்பர் மண்டபம் உள்ளது. அரங்கேற்றம் நிகழ்ந்த காலம் சாலிவாஹன சகம் 807 என்பர். கி.பி.885 என்றும் சிலர் கூறுவர்).

அப்போது, ‘ஹிரண்ய கசிபு ஸம்ஹாரத்தை’ சிறப்பாகக் காட்டியிருந்தார். அறிஞர்கள் சிலர் இதை ஒப்புக் கொள்ளவில்லை. உடனே ‘மேட்டு அழகிய சிங்கர் பெருமாள்’ (நரசிங்கப் பெருமாள்) சந்நிதி முன், பாடிக் காட்டினார். அப்போது, சிங்கம் போல் கர்ஜித்து அங்கீகாரம் அளித்து, அருள் புரிந்தாராம் அழகியசிங்கர்

No comments:

Post a Comment