Saturday, July 18, 2020

யஜுர் வேதம் சிராத்த நியமம் - 3.

சிராத்த நியமம் -3 .

சிராத்த சாப்பாடு ஜீரணமாகும் வரை பித்ருக்கள் ஸூக்ஷமமாக சாப்பிட்ட நபரிடம் இருப்பதாக ஐதீகம்..

சிராத்தம் சாப்பிட்ட நாளன்று மாலையில் வலது கையில் சிறிது சுத்தமான ஜலத்தை எடுத்துக்கொண்டு 10 முறை காயத்ரி ஜபம் செய்து விட்டு அந்த ஜலத்தை குடித்து விட வேண்டும்.

பிறகு தான் சுத்தி ஆகி ஸாயம் கால சந்தியாவந்தனம், ,ஒளபாசனம் செய்யலாம் என்கிறார் உசநஸ் என்னும் மஹரிஷி.

பித்ருக்களை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு பித்ருக்களை த்ருப்தி செய்தால் பித்ருக்கள் சந்தோஷப்பட்டு நீண்ட ஆயுள், அழியா புகழ்,,உடல் வலிமை.,செல்வம், பசு, தான்யங்கள், சுகம் ஆகியவற்றை அனுக்கிரஹிக்கிறார்கள் என்கிறது யம ஸ்ம்ருதி,.

சிராத்தம் சாப்பிட்ட அன்று இரவும் சாப்பிடக்கூடாது. அத்யயனம் செய்ய க்கூடாது. தூர தேசம் போகக்கூடாது. ப்ரஹ்மசர்யம், வேறு இடத்தில் ப்ரதிக்ரஹம் வாங்காமல் இருப்பது,

அன்று காலை க்ஷவரம் செய்து கொள்ளாமல் இருப்பது இவைகளை கடை பிடிக்க வேண்டும்..வேறு எந்த வைதீக கர்மாவும் செய்யக்கூடாது. தாம்பூலம் போடலாம்.

சிராத்த ப்ராஹ்மணர் ஆவாஹனம் செய்த பிறகு முடியும் வரை ஒருவரை ஒருவர் தொடக்கூடாது.

ராக்ஷஸர் முதலியவர்களை துரத்துவதற்காக ப்ராஹ்மணர் சாப்பிடும்போது அபிச்ரவணம் மற்றவர்களை கொண்டு சொல்லசெய்ய வேண்டும்.. அதற்காக சில ப்ராஹ்மணர்களை வரிக்க வேண்டும்..

ருக் வேதம், சுக்ல யஜுஸ்: க்ருஷ்ண யஜுஸ் ஸாம வேதம் இவைகளில் அபிசிரவண மந்திரங்கள் உள்ளன.. வசதி உள்ளவர்கள் எல்லோரையும் வரச்சொல்லலாம்.. அல்லது அவர்களது வேத அபிசிரவண மந்திரம் சொல்ல ஒருவரையாவது வரச்சொல்லலாம். .எத்தனை பேர் வேன்டுமானாலும் சொல்லலாம்.

அவர்களூக்கு தக்ஷினை, சுண்டல், பழம் கொடுக்க வேண்டும்.

அபிசிரவண மந்திரங்கள் சொல்ல வேண்டியவை- அபிசிரவனம்-ப்ராஹ்மணர்கள் போஜனம் செய்யும் போது தானோ அல்லது மற்றவர்களை கொண்டோ செய்ய சொல்ல வேண்டும்.

காயத்ரீ மந்த்ரம் மும்முறைசொல்லவும், புருஷஸூக்த அனுவாகங்களையும்,

க்ருனுஷ்வபாஜ; ரக்ஷோஹணோ; ஸோமாய பித்ருமதே; உசந்தஸ்த்வா

ஹவாமஹே; பக்ஷேஹிமாவிச; த்ருவாஸீதருனா; அக்னஉததே; சிரோவாஏதத் யஞ்யஸ்ய;;அஸாவாதித்யோஸ்மின்; ; ஸந்ததிர்வா; ; ஏகவிம்சஏஷபவதி ;இந்த்ரோவ்ருத்ரகும்ஹத்வா ;வைச்வதேவநவை;; அக்னயதேவேப்யஹ;

உசாந்தஸ்த்வாஹவாமஹே; ஆநோ; அயம்வாவ்யஹ பவதே; உசன்ஹவைதகும்ஹைதமேகே; யோப்ரத்மாமிஷ்டகாம்; ருசாம்பாசி; பித்ரு ஸூக்தம்.

முதலிய மந்த்ரங்களையும், கங்காவதரனம்;, இதிஹாஸம் முதலியவையும் சொல்லலாம்.

பிண்டதானம் செய்து கர்மா முடிவதற்குள் ஹோமம் செய்த அக்னி அணைய கூடாது. இது முக்யம். அனைந்தால் அன்று உபவாசம் இருந்து மறு நாள் சிராத்தம் செய்ய சொல்லியிருக்கிறது.

ஏகோதிஷ்டம், சபிண்டீகரணம்.,, மாசிகம், அநு மாசிகம், நாந்தி, கயா சிராத்தம், மஹாளயம் முதலியவைகளூக்கு அபிஸ்வரணம் கூடாது.

சிராத்தத்தில் அன்னத்தால் ஒரு மாதமும், நெய்யினால் ஒரு வருஷமும், கோதுமையினால் மூன்று வருஷமும், தேன் சேர்ப்பதால் அளவில்லா காலம் பித்ருக்கள் த்ருப்தி அடைகிறார்கள்.

: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் -1

பாத ப்ரக்ஷாளனம்;

பாத ப்ரக்ஷாளனத்திற்காக வீட்டின் வாசப்ரதேசத்தில் எதிரில் விச்வேதேவருக்கு 12 அங்குலம் சதுரமாகவும், அதற்கு தென்புரத்தில் ஒரடி இடைவெளீ விட்டு பித்ரு மண்டலத்திற்கு 12 அங்குலம் வட்டமாகவும் பசுஞ்சாணீயால் மெழுக வேண்டும்.

விச்வேதேவ மண்டலத்தில் அக்ஷதையும், தர்பம் கிழக்கு வடக்கு நுனியாகவும், பித்ரு மண்டலத்தில் எள்ளூம், தர்பம் தெற்கு நுனியாக போடவும்.

முதலில் விச்வேதேவருக்கும், பிறகு பித்ருக்களையும்,பிறகு விஷ்ணுவை சதுர மண்டலத்தில் கனுக்காலை அலம்ப வேன்டும் .ப்ராஹ்மனர்களீன் கணுக்காலுக்கு மேல் அலம்ப கூடாது .பின்பாகம் சரியாக அலம்ப வேன்டும் உள்ளங்காலை அலம்ப கூடாது. நின்று கொண்டு அலம்பகூடாது. பவித்ரம் காதில் வைத்துகொண்டு குந்திட்டு உட்கார்ந்து அலம்ப வேண்டும்.

சந்தனம் பூசும்போது பவித்ரம் கையில் இருக்ககூடாது. சந்தனம் கொடுக்கும்போது இருக்கலாம்.சந்தனம் பூசி விடுவதும் சாஸ்திர சம்மதமே.

கோமயத்துடன் கூடிய நெய்யை ப்ராஹ்மணர்களின் அடி கால்களில் பூசினால் அவனது பித்ருக்கள் கல்ப காலம் முடியும் வரை அம்ருதத்தை அடைகிறார்கள் என்று ஸ்ம்ருதி சொல்கிறது. கால் கட்டை விரல் உள்ளங்கால் பக்கம் பூசினால் போதும்.

ஸ்தர்னத்தில் வரிக்கப்பட்ட ப்ராஹ்மணர்கள் பாத ப்ரக்ஷாளனத்தின் போது, பத்னி, விச்வேதேவர் கால் அலம்பும் போது கர்த்தாவுக்கு இடது பக்கத்திலும்,

பித்ருக்களூக்கு கால் அலம்பும் போது பத்னி கர்த்தாவுக்கு வலது பக்கத்திலும் இருந்து ஜலம் விட வேண்டும்.

விஷ்ணுவுக்கு கால் அலம்பும் போது பத்னி கர்த்தாவிற்கு இடது பக்கத்திலிருந்து ஜலம் விட வேண்டும்..

ப்ரமாணம் நிர்ணய ஸீந்து==பக்கம் 1528;1529 வால்யூம்-3.

வைத்தினாத தீக்ஷீதீயம்=சிராத்த காண்டம் உத்தர பாகம்.பக்கம் 445ல் பித்ருக்களூடைய பாதப்ரக்ஷாளன ஜலத்தை தெற்கு முகமாயிருந்து வெளியில் விட என்று இருக்கிறது.

பிறகு கர்த்தா வடக்கு நோக்கி ஆசமனம் செய்ய வேண்டும். இதன் பிறகு ப்ராஹ்மணர்கள் ஆசமனம் செய்ய வேண்டும்.

விசுவேதேவர் கால் அலம்பிய ஜலமும் பித்ரு ப்ராஹ்மணர் கால் அலம்பிய ஜலமும் ஒன்று சேரக்கூடாது..நடுவில் ஒரு துணீயோ மணலோ போடவும்.

அல்லது பித்தளை தாம்பாளத்தில் கால் அலம்பிய பின் , ஜலத்தை கீழே கொட்டி, வேறு ஜலத்தால் பித்தளை தாம்பாளத்தை அலம்பி, பித்ரு ஸ்தானத் தவர் கால் அலம்பிய ஜலத்தை வேறு இடத்தில் கொட்டவும்.

ஹோமம் செய்து மிகுந்த நெய்யால் ப்ரஹ்மணர் காலை, பாத்திரத்தை , அன்னத்தை அபிகாரம் செய்யாதே.

விசுவேதேவரின் கால் அலம்பிய ஜலத்தை கர்த்தாவும் மனைவியும் தலையில் ப்ரோக்ஷித்து கொள்ளலாம்.

.

ஆவாஹனம்,, அர்க்கியம், ஸங்கல்பம், பாத்யம், சாப்பிடும்போதும், திலோதகம், அக்ஷையோதகம், சொல்லும் போதும் ,பிண்ட தானத்திலும், கோத்ர நாமங்களை தவறாது சொல்லித்தான் ஆகவேண்டும்.

வைத்தினாத தீக்ஷிதீயம் ச்ராத்த காண்டம் உத்தர பாகம் பக்கம் 451-452 ஆதாரப்படி ஆசமனம், அக்னிமுகம், ஆஜ்ய பாகங்கள், ஆகார ஸமித்துகள் ப்ரதக்ஷிணம், பின் செல்வது, ப்ராயசித்த ஹோமம்,ஸ்விஷ்டக்ருத் ஹோமம், செய்யும் போதும், நமஸ்காரம், அபிசிரவனம் சொல்லும் போதும்,

உபவீதியாகவே செய்ய வேண்டும்..

ஆஸனத்திற்காக கொடுக்கும் தர்பைகள் கையில் கொடுக்க கூடாது. விசுவேதேவருக்கு வலது பக்கத்திலும், பித்ருக்களுக்கு இடது பக்கத்திலும் உட்காருமிடத்தில் போட வேண்டும்..

அர்க்கிய பாத்திரத்தை ப்ராஹ்மணர்களீன் அருகில் வைத்து தெற்கு நுனியாக பவித்ரத்தை வைத்து , ஜலம் நிரப்பி,எள்ளை போட்டு வைக்க வேண்டும். திறந்து வைக்க கூடாது. தூக்கவும் கூடாது..உத்தரணீயால் எடுத்து அர்க்கியம் கொடுக்க வேண்டும்..

குதப காலத்தில் ( 12 மணீக்கு மேல் ) தர்ப்பம், கறுப்பு எள் இவைகளை உபயோகிப்பது அதிக பலனை தரும் என்று தர்ம சாஸ்த்ரம் கூறுகிறது.

ஆபோஜனம் போடுவதற்கு கங்கா ஜலம் சிறந்தது..

துளசி எப்போது சிராத்தத்தில் சிரசில் தரிக்கபட்டதோ அப்போதே கர்த்தா, போக்தா; பிதா மூவரும் விஷ்ணூ லோகத்தில் சிறப்பை அடைகின்றனர் என்கிறது தர்ம சாஸ்திரம்...

சிராதத்தில் வஸ்திரம் கொடுக்காதவன் ஏழு ஜன்மங்கள் தரித்ரனாக பிறப்பான் எங்கிறது தர்ம சாஸ்திரம். பூணலாவது கொடுக்க வேண்டும்.

வித்யை, அனுஷ்டானம் இவைகளீல் சிறந்தவரை முதலில் விசுவேதேவர் ஸ்தானத்தில் உட்கார வைக்க வேண்டும். மற்றொருவரை பித்ரு ஸ்தானத்தில் உட்கார வைக்க வேண்டும்.

போஜனத்திற்கு விசுவேதவரை கிழக்கு முகமாகவும், பித்ரு ஸ்தானத்தை வடக்கு முகமாகவும், விஷ்ணு ஸ்தானத்தை கிழக்கு முகமாகவும் உட்கார வைக்கவும்..

சிராத்தம் முடியும் வரை ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளகூடாது.. கர்த்தா மற்றும் கர்த்தாவின் மனைவி பரிமாறுவது சிலாக்கியம்....இரண்டு கைகளாலும் தட்டில் கொண்டு வந்து கரண்டி சப்தமில்லாமல் கரண்டி மூலமாக பரிமார வேண்டும். மர கரண்டிகளால் பரிமாரலாம்..

இலையில் அபிகாரம் செய்தவுடனே கர்த்தாவும்,போக்தாவும் பூராவும் மந்திரம் சொல்லி முடிக்கும் வரை பரிமாறுவது நீடிக்க வேண்டும். சீக்கிரம் பரிமாரி முடித்தால் ப்ராஹ்மணர்கள் மந்திரங்கள் பூராவும் சொல்ல வாய்ப்பு இல்லை.

போஜனத்திற்கு பலாச இலை உசிதம். வாழை இலை நுனியோடு கூடியது, அகலமுள்ளது .கிழியாதது நரம்பை கிழிக்காமலும், இரண்டு அடி நீளமுள்ளது போடலாம்..இரண்டு இலைகள் ஒவ்வொருவருக்கும் போட வேண்டும். சிலர்

விஷ்ணுவிற்கு ஒரு நுனி இலை போடுகிறார்கள்.விசுவேதேவருக்கு 2, பித்ருவிற்கு 2; மஹாவிஷ்ணுவிற்கு 2 தொன்னைகள். மொத்தம் 6 தொன்னைகள்.

ஒரு தொன்னயில் பருப்பும் மற்றொரு தொன்னயில் நெய்யும் விட வேண்டும்.நரம்புக்கு கீழே அன்னம், பாயசமும் நரம்புக்கு மேலே காய், கனி, .பக்ஷணங்கள் பரிமாற வேண்டும்

முதலில் விசுவேதேவருக்கும் அடுத்தது பித்ருவிற்கும், பிறகு விஷ்ணுவிற்கும்.பரிமார வேண்டும்..இதே வரிசையில் தான் முதலிலிருந்து கடைசி வரை ஞாபகமாக பரிமாரவும்.. பரிமாரிகொண்டு வந்த வஸ்துக்களை கரண்டியில் எடுத்தது முழுவதும் அந்த இலைக்கே பரிமார வேண்டும் .மிச்சம் வைத்து மற்றோரு இலைக்கு பரிமாரக்கூடாது..

போஜனத்தில் ஒருவருகொருவர் எச்சில் பட்டுவிட்டால் அந்த இலையை தொடாமல் எடுத்துவிட்டு பசுஞ்சாணீயால் சுத்தம் செய்து பிறகு வேறு இலையை போட்டு பரிமாரி பரிசேஷனம் செய்து சாப்பிட வேன்டும்..

போக்தாவிற்கு சாப்பிடும்போது ஏதாவது அன்ன பானம் தேவைபட்டால் ப்ராஹ்மணர்கள் கை ஜாடையால் தான் காண்பிக்க வேண்டும். அதே மாதிரி வேண்டியதில்லை என்றாலும் வாயினால் சொல்லக்கூடாது.

உப்பு முதலியவை அதிகம், குறைவு இருந்தாலும் அதை நன்றாக ஆக்குவதற்கு மறுபடியும் கேட்க கூடாது.

பரிசேஷனம் முடியும் வரை இடது கை விரலாலும் , தீர்த்தம் சாப்பிடும் போது வலது கை விரலாலும் போஜன இலையை தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்..

சாப்பிடுபவர்கள் அன்னத்தின் குணத்தை சொல்லக்கூடாது.. கையில் எடுத்த பதார்தத்தை முழுவதும் சாப்பிட வேண்டும். கொஞ்சம் சாப்பிட்டு மீதியை இலையில் வைக்க கூடாது. அதே மாதிரி எடுத்த தீர்த்தம் குடித்து மீதி இருந்தால் அதை மறுபடியும் உபயோகிக்க கூடாது.

பாயசம், நெய், பால், தயிர், தேன் இவைகளை மீதி வைக்காமல் சாப்பிட கூடாது. அன்னத்தை பிறர் பார்கக்கூடாது. உச்சிஷ்டமான மீதி பதார்த்தங்கள் இறந்த உபநயனமாகாதவர்களூக்கும், ,குல ஸ்த்ரீகளூக்கும், முக்தியடைந்த ஸந்யாஸீகளூக்கும் பாகமாக அடைகிறது. இவர்கள் உச்சிஷ்டபாகி என்று அழைக்க படுகிறார்கள்.. உட்காரும் ஆஸனத்தில் பாதம் படகூடாது.

போஜனம் சாப்பிடும்போது மல மூத்ர விசர்ஜனத்திற்காக செல்லக்கூடாது. அடக்கி கொண்டும் இருக்க கூடாது. ஸ்நானம் செய்யு முன்னரே மல ஜல விசர்ஜனம் செய்து கொள்ள வேண்டும்.

விசுவேதேவ ப்ராஹ்மணர் சாப்பிடும்போது வாந்தி எடுத்தால் இலையை எடுத்து விட்டு லெளகீகாக்னி ப்ரதிஷ்டை செய்து , அவருடைய ஸ்தானம்,நாமம், கோத்ரம் , ஆசனம் இவைகளை சொல்லி அன்னத்தால்

அக்னியில் ப்ரானாயஸ்வாஹா,முதலிய 5 ஹோமங்களை 6 ஆவர்த்தி (மொத்தம் 30 ஆவர்த்தி) ஹோமம் செய்து , பிறகு உதானாயஸ்வாஹா, ஸமாநாயஸ்வாஹா என்ற இரண்டு மந்திரங்கள் சொல்லி 2 ஆவர்த்தி ஹோமம் ( மொத்தம் 32 ஆவர்த்தி ))ஹோமங்கள் செய்து சிராத்த சேஷத்தை முடிக்க வேண்டும்..

இதுவே பித்ரு ஸ்தானத்தில் உள்ளவர் வாந்தி எடுத்தால்.மறுபடியும் சிராத்தம் செய்ய வேண்டும்.

பிண்ட தானத்திற்கு பிறகு வாந்தி ஏற்பட்டால் இந்திராய ஸோம என்ற ஸூக்தத்தை ஜபிக்கவும்..

வாயஸ பிண்டத்தை காக்கை மட்டும் எடுக்கும் படியாக பார்த்து கொள்ளவும் வேறூ எந்த ப்ராணீகளூம் தொடக்கூடாது. இதராளூம் பார்கக்கூடாது..அப்படி ஏற்பட்டால் அன்று உபவாசம் இருந்து மறு நாள் மறுபடியும் சிராத்தம் செய்ய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

போஜனத்திற்கு பிறகு முதலில் பித்ரு வர்க்க ப்ராஹ்மணருக்கும்,பிறகு விசுவேதேவருக்கும் பிறகு மஹா விஷ்ணுவிற்கும் கை கால் அலம்ப ஜலம் கொடுக்க வேண்டும்.. இவர்கள் ஆசமனமும் இதே க்ரமத்தில் தான் செய்ய வேண்டும்.

பிண்டதானம் செய்யுமிடம் போஜன இலையில் படாத படி சமீபத்தில் செய்யவும்.

போஜனம் முடிந்து அந்த இலைகளை தானோ புத்திரனோ ஸ்வஸ்தி வாசனத்திற்கு முன் அவச்யம் நகர்த்த வேண்டும். ஸ்த்ரீகள், சிறுவர்கள் இதை செய்யக் கூடாது. பிண்ட தானத்திற்கு பிறகு தான் ஸ்தல சுத்தி செய்ய வேண்டும்.

பிண்ட தானத்திற்கு பிறகு கர்த்தா சிராத்தான்னத்தை சாப்பிடுவதோ அல்லது முகர்வதோ செய்ய வேண்டும்.

சிராத்தன்று பிண்ட தானம் முடியும் வரை அந்த வீட்டில் குழந்தைகளூக்கு கூட போஜனம் கூடாது.

கர்த்தா வைஸ்வதேவம் செய்வதானால் சிராத்தம் முடிந்த பிறகு சிராத்த சேஷத்தினாலேயே செய்யலாம்.

பித்ரு சேஷத்தை ஞாதிகள் சாப்பிடலாம். சிராத்தம் முடிந்த பிறகு பிண்டங்களை பசுவிற்கு கொடுக்கலாம்..அல்லது ஜலத்தில் போட வேண்டியது.. பூமியில் புதைக்கலாம்.. 

பரேஹனி தர்பணம்

சிராத்தத்திற்கு மறூநாள் விடியற் காலையில் சுமார் 4மணிக்குமேல் 5-30 மணிக்குள் உஷஹ் காலம் என்று பெயர் . முதல் நாள் கட்டிய சிராத்த வேஷ்டி அவிழ்காமல் அதனுடன் ஸ்நானம் செய்து மடி வேஷ்டி கட்டிக்கொண்டு சிராத்தம் செய்த அந்த ஒரு வர்கத்திற்கு மாத்திரம் தர்பணம் செய்ய வேண்டும்.

அல்லது விடிந்த பிறகு ஸ்நானம், ஸந்தியாவந்தனம் செய்து பரேஹனி தர்பணம் செய்யவும் .

சிராத்தத்தன்றே பரேஹனி தர்பணம் செய்தால் சிராத்த நஷ்டம் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

பிதா ஜீவித்திருந்து மாத்ரு சிராத்தம் செய்வதாக இருந்தால் பரேஹனி தர்பணம் கிடையாது..

ஸோதகும்பம், மாசிகம் ,நாந்தி, சபிண்டீகரணம், ஊனமாசிகம், முதல் ஆப்தீகம், ஸங்கல்ப சிராத்தம் இவைகளுக்கும் பரேஹனி தர்பணம் கிடையாது..

தாயார், தகப்பனாருக்கு ஒரே நாளில் சிராத்தம் செய்பவர்கள், மறுநாள் பரேஹனி தர்பணத்தில், ஸங்கல்பத்தில், பித்ரு சிராத்தாங்கம், மாத்ருசிராத்தாங்கம் ச என்று சொல்லி ஒரே பரேஹனி தர்பணம் செய்ய வேண்டும்..

தீபாவளீ அன்று பரேஹனி தர்பணம் செய்ய நேரிட்டால் அன்று முதலில் பரேஹனி தர்பணம் செய்ய வேண்டும்..பிறகு விடியுமுன் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்.. மாத்யானிகத்திற்கு பிறகு அமாவாசை தர்பணம் செய்யவும்.

1 comment:

  1. ஸார் நீங்கள் தலைப்பிற்கு வாரணமாயிரம் என்று வைத்திருப்பதின் காரணம் என்ன? தாங்கள் விளக்கம் தரமுடியுமா?.. தெரிந்துக்கொள்வதற்காக கேட்கிறேன்..

    ReplyDelete