Saturday, May 9, 2020

மாயவரம் ஒரிஜினல் காளியாகுடி ஓட்டல்

மாயவரம் ஒரிஜினல் காளியாகுடி ஓட்டல் பற்றியது
இந்த ஒரிஜினல் ஓட்டலில் சாப்பிட்டவர்கள் பாக்கியவான்கள் )) 

கிட்ட்த்தட்ட ஒரு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாயவரத்தில்  அதன் பெருமைகளில் ஒன்றாக தன்னையும் இணைத்துக் கொண்டிருந்தது காளியாகுடி. காலை நாலேமுக்கால் இருக்கும் போது துபாஷ் அக்ரஹாரத்து வாசுதேவாச்சார் உட்பட ஒரு பத்து பேர் மழைக்காலமானாலும் வெயிற்காலமானாலும் ஹோட்டலின் வாசலில் நின்று கொண்டிருப்பார்கள். 

உள்ளே லைட் எரியும். சாலையிலிருந்து ஒரு நாலுபடி ஏறி ஒரு வராந்தாவைக் கடந்து அந்த சொர்க்கத்தில் நுழைய வேண்டும். கொலப்ஸபல் கேட் திறக்கும் சத்தம் கேட்ட்கும். மிதியடியை உதறி வாசல் முன் போடுவார்கள். வாசல் தெளித்து கோலம் போடப்படும். 

ஒவ்வொருவராக உள்ளே நுழைவார்கள். சீனிவாச அய்யர் கடுக்கணுடன் கம்பீரமாக கல்லாவில் உட்கார்ந்திருப்பார். ஹாலில் நிறைய டேபிள் சேர் இருக்கும். மார்க்கெட் வியாபாரிகள், ஸ்டாண்ட் டாக்ஸி டிரைவர்கள் எல்லாம் அதில் உட்கார்ந்திருப்பர். 

வாசுதேவாச்சாரும் இன்னும் சிலரும் ஹாலின் நடுநாயகமாய் திகழும் பலகார அலமாரிக்குப் பின்னால் போவார்கள். வாசலில் இருந்து நுழைந்தால் அலமாரியின் இடப்பக்கம் சமயலறை, வலப்பக்கம் பெரிய ஹால் அதில் அந்த காலத்துப் பள்ளிக்கூட்த்தில் இருப்பது போல நீட்டுப் பலகை. சாம்பிராணிப் புகையும் வாசனையும் ஹோட்டல் முழுவதும் நிறைக்கும். 

எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது பித்தளை டபரா செட்டில் காபி சாப்பிட்டிருக்கிறேன். அதிகாலை பெரிய ஃபில்டரில் இறக்கின டிக்காக்ஷன் வாசனை. பிடியுடன் கூடிய குவளையில் எடுத்து வரிசையாக பரப்பி வைத்த டபரா செட்களில் காபி மாஸ்டர் அவரவர் டேஸ்ட்டுக்கேற்ப ஸ்டார்ங்காகவோ லைட்டாகவோ போட்டு பாலை விடும்போது அது கொப்பளம் கொப்பளமாக நுரைத்து டம்பளரிலிருந்து டவராவில் எந்த நிமிஷமும் விழுவேன் என்று எட்டிப்பார்க்கும். பால் படியில் பால் கொள்முதல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும். பாலில் பால்மானி போட்டு தரம் நிர்ணயம் செய்யப்படும்.

சர்வர்கள் வெள்ளை வேஷ்டி, துண்டு மட்டும் யூனிபார்ம். அவரவர் பதம் பார்த்து ஆற்றியும் ஆற்றாமலும் காபி கைக்குக் கிடைக்கும். சிலர் டம்ப்ளரை துணியால் பிடித்துக் கொண்டு சூடாக நெருப்புக் கோழி மாதிரி காபி குடிப்பார்கள்.

முதல் முப்பது நிமிடங்கள் காபி மட்டும்தான். அதன் பிறகு என் அபிமான பொங்கல் இட்லி வடை சப்ளை ஆரம்பிக்கும். காலை ஆறு மணிக்கு வந்து இந்த பொங்கலை நான் எவ்வளவோ நாள் சாப்பிட்டிருக்கிறேன்.  மாமாவை ஊருக்கு அனுப்ப வந்தால் அவருடன் பையை தூக்கிக்கொண்டு வந்து காளியாகுடியில் பொங்கல் வடை காபி சாப்பிட்டு விட்டு அவரை பஸ் ஸ்டாண்டில் ஏற்றி விட்டு பொடி நடையாக வீட்டுக்குப் போவேன்.

பொங்கல் சாப்பிடுவேன் என்றால் போதுமே என்று நினைப்பீர்கள். அந்த பொங்கலின் வர்ணனை இல்லாமல் நான் ருசித்த பொங்கலை உங்களுக்கு புரிய வைக்க முடியாது. அது தட்டு இல்லாத காலம். வாழை இலை டிபன் இலை கையில் கொண்டு வருவார் கணேசன். இலையைப் போட்டு தண்ணீர் தெளிப்பார். குடிப்பதற்கு தண்ணீர் வைப்பார். ஒரு தட்டில் பொங்கலைக் கொண்டு வந்து அப்படியே இலையில் இறக்குவார் பாருங்கள். என்ன ஒரு நேர்த்தி. அந்த பொங்கலும் கெட்டியாக இல்லாமல் ரொம்ப இளகலாகவும் இல்லாமல் அப்படியே ஆவி பறக்க அந்த இலையில் பாதி இடத்தை ஆக்ரமித்துக்கொள்ளும். 

கணேசனின் கையை இப்போது கொத்துக் கிண்ணம் அலங்கரிக்கும். இலையில் ஒரு மூலையில் பொங்கலுக்கு மிக அருகில் அதன் மேல் ரொம்ப விழாமல் பார்டர் கட்டினமாதிரி சட்னியை இறக்குவார். எதிர் மூலையில் சாம்பார் வந்து சேரும். சாம்பார் வெங்காயம் முழுசாய் மிதக்கும், சேப்பு மிளகாய் கொஞ்சம் உடைந்து அதன் சிவப்பு சாம்பாரில் கசியும். கறிவேப்பிலை தட்டுப் படும். தாளிப்பு தாராளமாக இருக்கும். 
பொங்கலைப் பற்றி கேட்கவே வேண்டாம். இரண்டு மூன்று முந்திரி, எண்ணெயில் வதங்கிய இஞ்சித்துண்டுகள், நெய்யில் பொறித்த மிளகு கறிவேப்பிலை, அங்கங்கு தெரியும் ஜீரகம் என்று சர்வாலங்கார பூஷணையுடன் நாம் சாப்பிடக் காத்திருக்கும். ஆவி லேசாக மேலே எழும்பிக்கொண்டிருக்கும். விரலால் அதை உருட்டி சட்னியோ சாம்பாரோ சேர்த்து வாயில் போட்டு மிளகைக் கடித்து ஒரு காரம் இறங்கும் பாருங்கள் அதற்கு ஈடு இணை  இந்த உலகத்தில் எதற்கும் இல்லை. 

சூடான வடை வந்து சேரும். பொங்கல் வடை காம்பினேஷன் முடிந்தவுடன் இட்லி வரும். இட்லிக்கு கச்சேரிகளில் மிருதங்கம் கடத்தோடு கஞ்சிரா போல் மிளகாய்ப்பொடியும் உண்டு. 

கூட்டம் கொஞ்சமாக அதிகரிக்க ஹால் களை கட்டும். டபரா டம்ளர் பொறுக்கி அலம்பும் சப்தம், அந்த காலத்தில் சர்வர்கள் டேபிளில் ஆர்டர் எடுத்த உடன்  அங்கேயே நின்று உள்ளே ஆர்டர் கொடுப்பது ஒரு அழகு. இரண்டு ரவா, ஒரு மாவு தோசைய்யை என்று சொல்வார்கள். எனக்கு ரொம்ப நாளைக்கு சந்தேகம் இது காதில் விழுந்து இதன் படிதான் அவர் தோசை போடுவாரா என்று. இவர் சொல்லி முடித்த இடைவெளியில் உள்ளேயிருந்து கல் துடைத்து அதில் தண்ணீர் தெளிக்கும் “சொய்ங்” சப்தம் ஹாலில் எதிரொலிக்கும். 

பலஹார அலமாரியில் அவ்வப்போது சரக்கு கொண்டு வைத்து சில சமயம் அங்கிருந்தும் நமக்கு சப்ளை நடக்கும். மைசூர் பாகு, மைசூர் போண்டா, காராசேவு வடை பூரிக் கிழங்கு இட்லி இவை பார்சலுக்கு அங்கு வரும். மந்தாரை இலையில் பார்சல் சுறுப்பாக கட்டப்பட்டும்.

அலமாரியின் மேலிருந்து ஒரு மாய நூல் இறங்கி இவர்கள் இழுக்க இழுக்க தௌரபதி சேலை மாதிரி வந்து கொண்டிருக்கும். கிழங்கு சட்னி எல்லாம் பொட்லத்தில் அடங்கி விடும். பார்சலுக்கு கொடுக்கும் கெட்டி சட்னி ரொம்ப தெரிந்தவர்களுக்கு மட்டும் இலையில் போடப்படும்.  சாம்பாருக்கு நாம்தான் டிபன் பாக்ஸ் கொண்டு வரவேண்டும். 

அது டிபன் ஹோட்டல் அதனால் சாப்பாடு என்ற பேச்சே இருக்காது. இட்லி வடை பொங்கலில் ஆரம்பிக்கும் தினம் மெதுவாக பூரி, தோசை என்று சூடு பிடிக்கும். காபி எப்போதும் உண்டு. போண்டா (மைசூர்) காலை வேளைகளில்.  பதினோரு மணிக்கு மேல் தயிர் வடை. அதன்மேல் கொஞ்சம் காராபூந்தி தூவி வைப்பார்கள். வெயில் காலத்தில் ஐஸ் பாக்ஸில் கிரேப் ஜூஸ், ரோஸ்மில்க், ஐஸ் கிரீம் சப்ளை உண்டு. 

இரண்டு மணிக்கு மேல் தினம் நடக்கும் அதிசயம் அரங்கேறும் இரண்டு டிரேயில் கோதுமை அல்வா அலமாரிக்கு வந்து சேரும். அதற்கும் அல்வா ரசிகர்கள் குழுமி விடுவார்கள். முதலில் ஒரு போண்டா அல்லது மெதுவடை சாப்பிடும்போதே அல்வா வந்து விடும். அந்த ஹல்வாவை நாம் எப்படி வர்ணிப்பேன். தொட்டால் மெத்தென்று இருக்கும் அதன் கலரோ சிவப்பு என்றும் சொல்ல முடியாமல் பழுப்பு என்றும் சொல்ல முடியாமல் ஒரு கலவையாக இருக்கும். கொஞ்சம் காராசேவு கொண்டு வைப்பார்கள்.

காளியாகுடியின் அல்வா மாஸ்டர் வைத்தியைப் பற்றி இங்கு ஒரு குறிப்பு அவசியமாகிறது.  ஹல்வா வைத்தி என்று பெயர். ஆஜானுபாகுவாக இருப்பார் எட்டு முழ வேஷ்டி அவர் உயரத்திற்கு கணுக்கால் வரைதான் இருக்கும். வெற்றிலை போடுவார். நல்ல உயரம். பதினொரு மணிக்கு உள்ளே போனால் பெரிய வாணலியில் கோதுமைப் பால் வைத்து காயவைத்து சக்கரை நெய் வாசனாதி திரவியங்கள் கலந்து அந்த அல்வாத் துடுப்பால் சுவரில் ஒட்டாமல் கலக்கி பதம் வரும்போது போதுமான நெய் விட்டு துடுப்பில் அப்படியே ஒரு தூக்கு தூக்கினால் சமத்துக்குழந்தைமாதிரி அல்வா துடுப்பில் வந்து வாணலியில் விழும். இரண்டு மணிக்கு டிரேயில் போட்டு கட் பண்ணி வைத்து விட்டு வருவார்.

அவர் வெளியே வர ஒரு கூட்டம் காத்திருக்கும். இடுப்பில் ஒரு மூன்று பொட்டலம் இருக்கும். அடி அல்வா. முருங்கை மரத்து கோந்து கெட்டிப்பட்ட்து போல் இருக்கும். கோவில் மண்டகப்படி மாதிரி முன்பே சொல்லி வைத்து அதை வாங்க முடியும். ( பல கர்ப்பிணிப் பெண்களின் மசக்கையில் இதுவும் இடம் பெறும். குழந்தை காதில் சீழ் வராமல் இருக்க வாங்கி கொடுத்து விடுவோம்.)

என் அப்பா மாயவரத்திலே வேலை பார்த்து அங்கேயே தன் வாழ்நாளை முடித்துக் கொண்டவர். அவர் வேலை பார்த்த பேங்க் மஹாதானத்தெருவில் நாராயணப்பிள்ளை சந்து வழியாக காளியாகுடி வந்து அல்வா சாப்பிட்டுப் போவார். அது அவரது நித்யகர்மானுஷ்டங்களில் ஒன்று.

அவர் ஒரு டிசம்பர்மாதம் 2ந்தேதி காலமானார். இரவு பதினொரு மணி. மறுநாள் துக்கம் விசாரிக்க வந்தவர்களில் சிலர் அப்பா நேற்று மத்தியானம் அவரை வழக்கமா காளியாகுடியிலே பார்த்தேனே. சமாச்சாரம் கேட்ட உடனே நம்பவே முடியலை என்றார்கள்.

காளியாகுடிக்கு எதிரில் ராம்மூர்த்தி டாக்டர் இருக்கிறார். அவர்தான் எங்கள் குடும்ப டாக்டர். நானும் என் மாமாம்வும் வயிறு சரியில்லை என்று அவரிடம் போய் அவர் மாத்திரை கொடுத்து ஒரு வாரம் வெறும் மோர் சாதம் என்பார். நல்ல பிள்ளை போல் தலையாட்டிவிட்டு இரண்டு நாளானதும் நாக்கை கட்டுப் படுத்த முடியாமல் காளியாகுடியில் முருகலாக இரண்டு ரவா தோசை ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு வந்து நின்றுகொண்டே காபி குடித்து விட்டு போகிற போக்கில் ராம்மூர்த்தி டாக்டர் அம்பி வரேன் என்று சொல்லும்பொழுது கையும் களவுமாக பிடிபடுவோம்.

காளியாகுடியின் ரெகுலர் கஸ்டமர்கள் வித்யாசமானவர்கள். கிருஷ்ணராவ் என்று என் சின்ன தாத்தா மாயவரம் முனிசிபல் ஹைஸ்கூலில் ஹெட்மாஸ்டராக இருந்தார். அவர் பெரிய கதர் ஜிப்பா போட்டிருப்பார். அவர் ஒரு வயதுக்குப் பிறகு கையில் பணம் வைத்திருப்பதில்லை. காளியாகுடியில் போய் காபி சாப்பிட்டு விட்டு பில் கல்லாவில் கொடுத்து விட்டு வந்து விடுவார். யாரும் அவரிடம் பணம் கேட்க மாட்டார்கள். பிறகு என் அப்பா போகும்போது பில் கொடுக்க அப்பா செட்டில் பண்ணிவிட்டு வந்து சித்தியிடம் கணக்கு சொல்லி வாங்கி கொள்வார்.

என் காளியாகுடியின் விஜயம் எண்ணிலடங்காதது. மாமாவுடன், அப்பாவுடன் அம்மா தங்கைகள் தம்பியுடன் தீபாவளி ஜவுளி வாங்கி, நண்பர்களுடன் பார்ட்டி. வாரம் ஒரு நாள் போடும் கடப்பாவிற்காக அங்கு ஜமாகட்டி அடித்த ரகளைகள். சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு வரும் சொந்தக்கார்ர்களுக்கு காளியாகுடியில் அளித்த பார்ட்டி. திருமணமானவ்டன் மனைவியுடன், குழந்தைகளுடன் என எத்தனையோ அற்புதக்கணங்கள்.

காளியாகுடி பற்றி எல்லாரிடமும் மாய்ந்து மாய்ந்து சொல்லி சில வருடங்களாக அங்கு போனால் நிர்வாகம் மாறி பெயர் பலகை மட்டும் தான் இருக்கிறது. தரம் உபசரிப்பு எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போனது. என் கனவு காளியாகுடியின் உன்னதம் இன்று இல்லை. இன்று அங்கு பணிபுரிவோர் என் போன்றவர்களின் ஆசையை நிறைவேற்ற காளியாகுடியின் பாரம்பரியம் அறியாதவர்கள். வெறும் இட்லி வடை பொங்கல் அல்ல காளியாகுடி. ருசியும் மணமும் உபசரிப்பு கொண்ட ஒரு சத்திய தருமச் சாலை. 

சில வருடங்களுக்கு முன் மடிப்பாக்கத்தில் அதே நீல கலர் போர்டில் காளியாகுடி ஹோட்டல் வந்தது. ஓடிப்போய் என் தங்கையுடன் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கினேன். இப்போது என் கனவெல்லாம் மீண்டும் அப்படி ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் அதற்கு காளியாகுடி என்றே பெயர் வைக்க வேண்டும். மூன்று வருடங்களுக்கு முன் அம்பியை ஶ்ரீரங்கத்தில் சந்தித்த போது என் ஆசையை வெளியிட்டேன். பார்க்கலாம். நல்ல கனவுகள் நிச்சயம் ஒரு நாள் பலிக்கும.
Only admins 

2 comments: